Sunday 13 June 2010

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் சிறப்பான இடத்தினைப் பெறும் கொம்புமுறி விளையாட்டு... .

எனது முன்னைய இடுகை மீண்டும் உங்களுக்காக

தமிழர் நம்  கலை, கலாச்சாரங்கள் மறைந்துவரும் நிலையில். நான் நீண்ட நாட்களாக அறிய ஆவலாக இருந்த விடயம் ஒன்றுக்கு முற்று முழுதான விளக்கம் கிடைத்திருக்கின்றது. அது வேறு ஒன்றுமல்ல. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டு பற்றிய பல்வேறு விடயங்களை நேற்று அறிந்து கொள்ள முடிந்தது.

எனது கிராமம்கூட கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற ஒரு கிராமமாகும். க்கிராமத்திலே கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்ற இடம் கொம்புச் சந்தி என்று இப்பொழுதும் அழைக்கப்படுகிறது ஆனால் இங்கு இருக்கும் அநேகமானவர்களுக்கு கொம்புமுறி விளையாட்டு என்றாலே என்ன என்று தெரியாது.

கண்ணகை அம்மனுடன் தொடர்பு பட்டதே கொம்புமுறி விளையாட்டு. மாநாய்கரின் வளர்ப்பு மகள். மாசாத்துவரின் மருமகள். கோவலனுடைய மனைவி. இவர்கள் மூவரும் செட்டிகள். இதனால்தான் கண்ணகியும் செட்டிச்சி அம்மை. மாதவிக்குப் பொன்தோற்றகோவலருடன் மதுரைக்குச் சென்ற கண்ணகை ஆயர் இடைச் சேரியில் தங்கியிருக்க. கோவலன் கண்ணகியின் இடது காற்சிலம்பை விற்க மதுரை நகர் வீதியிலே விலை கூறினான்.


பாண்டிமாதேவியின் சிலம்பை பறி கொடுத்த தட்டான். சிலம்புத் திருடன் கோவலன் என்று பாண்டி மன்னனிடம் குற்றம் சாட்ட விதி வலியால் தீர விசாரித்தறியாத மன்னன் கோவலனை மழுவால் வெட்டுவிக்கும்படி கட்டளை இட்டான்



கோவலன் கொலையுண்டான். இதை கண்ணகை அறிந்தாள். கடும் சினம் கொண்டாள். "காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன்? என்று செங்கதிர்ச் செல்வனிடம் கேட்டாள் . உன் கணவனை கள்வன் என்ற இவ்வூரை தீ உண்ணும் என்றான் செங்கதிர்ச் செல்வன். தலைவிரி கோலம். ஒரு கையில் சிலம்பும் மறு கையில் வேப்பம் குழையோடும். மன்னனிடம் சென்று வாதாடி வழக்குரைத்து.சிலம்புடைத்துவழக்கு வென்றாள்.

மன்னனும் மனைவியும் உயிர் நீத்தனர். இடது முலை திருகி நகர் எரித்தால். ஆயர் இடைச் சேரிக்கு வந்தாள். ஆய்ச்சியர் வெண்ணை தயிர் என்பவற்றை அவள் மார்பிலே அப்பினர். சீற்றத்துடன் வந்து கொண்டிருந்த கண்ணகியின் முன்னால் கோவலன் கட்சி, கண்ணகை கட்சி எனப் பிரிந்து கொம்புமுறித்து விளையாடி கண்ணகை கட்சிக்கு வெற்றி கொடுத்து இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சினம் தணிந்த கண்ணகை சிரித்து மகிழ்ந்தாள். தாயே குளிந்தளிர்வாய் என்று அவர்கள் வேண்ட அம்மனும் குளிர்ந்தாள். இதுதான் கொம்புமுறி விளையாட்டு வந்த வரலாறு.


"கொம்பு எனப்படுவது வளைந்த மரத்தடியாகும். வெட்சி, கருவீரம், கரயாக்கு என்ற மரக்கிளைகளே பயன் பட்டன. வட சேரிக்கொம்பு 90 பாகை வளைவிலும் தென்சேரிககொம்பு அதை விடக்கூடிய வளைவிலும் இருக்கவேண்டும் என்பது விதி. இரண்டே முக்கால் விரல்க்கடையில் சரிகொம்பு இருக்க வேண்டும். இரண்டு விரக்கடை குச்சித்தோடு இருக்கவேண்டும். கொம்புகளின் அளவுப் பிரமாணம். ஏனைய கட்சியினால் பரிசீலிக்கப்படும். கொம்புகளுக்கு மூன்றரை முழம் (ஐந்தரை அடி) நீழமான பில்லிக்கம்புகள் வைத்து வெளுக்கயிற்றினால் வரிந்து பனிச்சை மரத்தின் கைகளின் பசை பூசி காய வைத்து எடுப்பர். கொம்புக்கு "அரிப்பு" எனப்படும் கயிறு கட்டப்படும்.

தூண்டில் போடுவோருக்கு தூண்டில் அரிப்புப் பற்றியும் நன்கு தெரியும். அரிப்பு என்பது ஒரு ஆள் நீளமான சுமார் ஆறடி நீளக் கயிறாகும். இது வெள்ளை ஆத்தி நாரினால் திரிக்கப்பட்ட வெளுக் கயிறாகவோ, மான் தோலினால் திரிக்கப்பட்ட கயிறாகவோ இருக்கும். இந்தக் கயிற்றுக்கு ஆமணக்கு என்னை பூசுவது வழக்கம். தென்சேரி வாரக் கொம்பு அரிப்பிலே உள்ள கொழு தவனையுடாக பெரிய வடத்தினைப்பூகுத்தி பேரு மரமொன்றின் அடியில் பிணைத்து விடுவர். வட சேரிக் கொம்பின் கொளுத் தவணையுடன் ஒரு உலக்கை போடப்படும். வட சேரிக்கொம்பின் கொலு தவணையில் நீழமான வடமும் பூட்டப்படும்.

தென்சேரி வாரத்தினர் தமது கொம்பினை தயாராகப் பிடித்துக்கொள்ள வடசேரி வாரத்தினர் தமது கொம்பினைப் பூட்டுவதத்கு தயாராக நிற்பர். நீழமான வடத்திலே வடைசேரித் தென்சேரிப் பொது மக்கள் இழுப்பதட்குத் தயாராக நிற்பர். கொம்பு பூட்டும் போது தத்தமது கொம்புகளை பாது காக்கும் வகையில் பில்லி மிரட்டும் இழுபறி இடம் பெரும். சரியாகப் பூட்டப்பட்டதும்.பொது மக்களின் இழுவையினால் கொம்பு ஒன்று முறிந்து விடும். முறியாத கொம்புக்குரியவர்கள் வெற்றி ஆரவாரம் செய்வர்.இரு சேரிக்கும் பொதுவாக உள்ள ஈடகத்தை அலங்கரித்து அதில் தமது கொம்பினை வைத்து கொம்புமுறிப்பாடல்களை பாடுவார்.

வசந்தன் கூத்துக்கள், பொய்க்கால் குதிரை ஆட்டம், வினோத உடை அலங்காரம் என்பன இரவு முழுவதும் இடம் பெறும். கொம்பு முறிப்பில் கொம்பின் வலிமையோடு பல மந்திர, தந்திர வித்தாண்மைகளும் பயன்படுத்தப்பட்டன.

தோற்ற கட்சியினர் மறுநாள் போட்டிக்கு கொம்பு ஆயத்தம் செய்வர். போட்டி பலநாள் தொடரும். சுள்ளிக்கொம்பு 01, கொம்புத்தட்டுக் கொம்பு 03, கூடாரக் கொம்பு 05, ஏடகக் கொம்பு 07, தண்ணீர்க் கொம்பு 01 முறித்து விளையாடுவதற்கு இரண்டு பிரிவுகள் தேவை. கோவலன் கட்சியை வடசேரி என்றனர். கண்ணகை கட்சியை தென்சேரி என்றனர்.

கொம்புமுறி விளையாட்டின்போது பல சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இன்னும் பல தகவல்களையும் கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

8 comments: on "தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் சிறப்பான இடத்தினைப் பெறும் கொம்புமுறி விளையாட்டு... ."

Anonymous said...

நல்ல பகிர்வு. தெரியாத விடயங்களை அரிய முடிந்தது நன்றிகள்.

AkashSankar said...

இது என்னங்க புதுசா இருக்கு... நகரத்துல பொறந்து நகரத்துல வளர்ந்ததால எனக்கு தெரியலங்க...

தமிழ் மதுரம் said...

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் பற்றிய பார்வை. அருமை. முன்பெல்லாம் ஊரில் வருடப் பிறப்பு, தைப் பொங்கல் என்றால் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி, கிளித் தட்டு உட்பட தமிழர்களின் பல பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவார்கள். இப்போது காலவோட்டத்தில் எல்லாம் கரைந்து போய் விட்டது. பகிர்வுக்கு நன்றிகள் சந்துரு.

K. Sethu | கா. சேது said...

அருமையான பதிவு. நிழற்படங்கள் இணைத்திருப்பின் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

Admin said...

//பெயரில்லா கூறியது...
நல்ல பகிர்வு. தெரியாத விடயங்களை அரிய முடிந்தது நன்றிகள்.//

கருத்துக்களுக்கு நன்றிகள்...

Admin said...

//ராசராசசோழன் கூறியது...
இது என்னங்க புதுசா இருக்கு... நகரத்துல பொறந்து நகரத்துல வளர்ந்ததால எனக்கு தெரியலங்க...//

இது புதுசல்ல தமிழருக்கே தனித்துவமான மிகவும் பழமையான விளையாட்டு. இன்று எல்லோராலும் மறக்கப்பட்டுவிட்டது.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//தமிழ் மதுரம் கூறியது...
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் பற்றிய பார்வை. அருமை. முன்பெல்லாம் ஊரில் வருடப் பிறப்பு, தைப் பொங்கல் என்றால் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி, கிளித் தட்டு உட்பட தமிழர்களின் பல பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவார்கள். இப்போது காலவோட்டத்தில் எல்லாம் கரைந்து போய் விட்டது. பகிர்வுக்கு நன்றிகள் சந்துரு.//

உண்மைதான் நீங்கள் சொல்லும் விளையாட்டுக்கள் நான் சிறுவயதில் பார்த்த ஞாபகங்கள் இருக்கின்றன ஆனால் இன்று எல்லோரும் மறந்துவிட்டோமே.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//K. Sethu | கா. சேது கூறியது...
அருமையான பதிவு. நிழற்படங்கள் இணைத்திருப்பின் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.//

விரைவில் தமிழர்களின் பாராம்பரிய கலைகள் பற்றி எழுத இருக்கின்றேன் அப்போது இன்னும் பல விடயங்களையும், படங்களையும் இணைத்துக் கொள்வேன்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Post a Comment