கடவுள் இருக்கின்றார் என்பதனை 100 % நம்புபவன் நான் ஆனாலும் சில மூட நம்பிக்கைகள் இந்துக்களிடையே இருக்கின்றது. அந்த மூட நம்பிக்கைகள் தகர்த்தெறியப்படவேண்டும். என்பதே என் அவா.
இந்த மூட நம்பிக்கைகள் இந்து சமயத்தின் மீதும், கடவுளின்மீதும் இருக்கின்ற நம்பிக்கையினை இல்லாமல் செய்பவையாக இருக்கின்றன. இந்த மூட நம்பிக்கைகள் பொதுவாக கிராமியத் தெய்வ வழிபாட்டிலே அதிகமாகக் காணப்படுகின்றன.
அண்மையிலே ஒரு ஆலயத்திலே இடம்பெற்ற சில சம்பவங்களை இடுகையிடுகின்றேன். இந்தச் சம்பவங்கள் பலரது விமர்சனத்துக்கும் உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயம் ஒரு காளி ஆலயம். பல வருடங்கள் பழமையான ஆலயம். பல சிறப்புக்களை உடைய ஆலயம். அண்மையிலே ஆலயமானது சிறப்பான முறையிலே ஆலயம் புனரமைக்கப்பட்டு. கும்பாபிசேகம் இடம்பெற்றதோடு கடந்த வருடம் முதல் தெய்வம் ஆடி கட்டுச் சொல்லுகின்ற முறையும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சடங்கினைச் செய்வதற்கு வேறு கிராமங்களிலே இருந்து பூசாரிமார் வரவளைக்கப்பட்டனர். அவர்கள் நடந்துகொண்ட விதம் மக்களிடம் இருக்கின்ற கடவுள் நம்பிக்கையினை இல்லாமல் செய்யும் ஒன்றாகவே இருந்தது.
இந்த ஆலயத்திலே பலர் தெய்வம் ஆடினார். பலரை அழைத்து கட்டுச் சொன்னனர். ஆனால் நல்ல விடயங்கள் எதுவும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. அங்கே சொல்லப்பட்ட விடயங்கள். பலரது எதிர்ப்பினையும் சம்பாதிக்க வேண்டியிருந்தது.
நான் பல ஆலயங்களிலே பார்த்திருக்கின்றேன் சில நிமிடங்களே தெய்வம் ஆடுவார்கள் ஆனால் இந்த ஆலயத்திலே பல மணித்தியாலங்களாக தெய்வம் ஆடப்பட்டது. அங்கே வந்த பக்தர்கள் பலரை அழைத்து தெய்வம் ஆடியவர்களால் சொல்லப்பட்ட விடயங்கள்.
1. எதிர்வரும் வருடம் ஆலயத்திலே சடங்கு நடப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட பணத்தினை ஆலயத்துக்கு செலுத்தவேண்டும், அல்லது குறிப்பிடுகின்ற வேலைகளை செய்து கொடுக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் நினைக்கும் எந்தக் காரியமும் வெற்றியடையும் இல்லையேல் கடவுளின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று சொல்லப்பட்டது.
இது கடவுளே இலஞ்சம் வாங்குவது போன்று இருக்கின்றது. கடவுளுக்கு நாம் ஒன்றைக் கொடுத்தால்தால் கடவுள் எமக்கு வரமருளுவார் என்றால் எதற்கு அந்தக் கடவுளை வணங்கவேண்டும்.
நாம் நேர்கடன் வைப்பது நாம் நினைப்பதனை கடவுள் நிறைவேற்றிவிட்டார். அவர் நிறைவேற்றியதட்காக நாம் செய்யும் கைமாறாகும். அதனை இங்கே வேறு முறையில் பயன்படுத்த நினைத்துவிட்டனர்.
2. ஒரு இளைஞர் அழைக்கப்பட்டார் அவரிடம் சொல்லப்பட்ட விடயம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. எந்த ஒரு நண்பரோடும் கதைக்கக் கூடாது. என்று அம்மன் மீது சத்தியம் செய்து வாங்கப்பட்டது. அவர் நண்பர்களோடு கதைக்கின்றபோது அவரது படிப்பு தடைப்பட்டு விடும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் படிப்பினை நிறுத்தி பல வருடங்களாகிவிட்டது.
இங்கு அவரை நண்பர்களோடு பழகவேண்டாம் என்று சத்தியம் வாங்குவது பொருத்தமானதா? அவர் இதனால் தனிமைப் படுத்தப்படும்போது அவரது எதிர்கால நிலை என்ன?
3. ஒரு மீன் வியாபாரியின் மனைவி அழைக்கப்பட்டு உங்கள் கணவன் மீன் விற்பனை செய்வதனால் ஆலயத்துக்கு வரக்கூடாது என்று சொல்லப்பட்டது .
இது சரியானதா? இன்று மீன் சாப்பிட்டுவிட்டே ஆலயத்துக்கு செல்வோர் இருக்கின்றனர். மீன் விற்பனை செய்வோர் ஆலயத்துக்கு வரக்கூடாது என்று எங்கே சொல்லப்பட்டிருக்கின்றது? ஆனால் இந்த பூசாரிமார் ஆலய நிகழ்வுகள் இல்லாத நாட்களில் மீன் சாப்பிடுவதாகவும், மது அருந்துவதாகவும் பின்னர் அறிந்துகொண்டேன்.
4. ஒருவர் மது அறிந்துவிட்டு ஆலயத்துக்கு வந்திருந்தார். மது அருந்திவிட்டு ஆலயத்துக்கு வரக்கூடாது என்று தெய்வம் ஆடிய ஒருவர் மோசமான முறையிலே அடித்து தாக்கினார்.
இது நாகரிகமான முறையா? அங்கே தெய்வத்துக்கு மதுக்கொடுத்தல் எனும் போர்வையில் சாராயம் கொடுக்கப்பட்டது. கடவுளே மது அருந்தும்போது ஒரு பக்தன் மது அருந்திவிட்டு வந்தது தவறு என்று அடிப்பது சரியா?
5. இக் கிராமத்திலே ஒரு பகுதியிலே தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கின்றனர். சுவாமி கிராமத்தின் வீதிகளிலே வலம் வருகின்றபோது ஆலய நிர்வாகத்தினரும் இன்னும் சிலரும் இந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கும் பிரதேசத்துக்கு சுவாமியைக் கொண்டு செல்வதற்கு மறுத்துவிட்டனர்.
இங்கே கடவுள் சாதி பார்ககின்றாரா? அல்லது கிராமத்தினை இரண்டாகப் பார்க்கின்றனரா? சாதி என்பது கடவுளால் உருவாக்கப்பட்டதல்ல செய்யும் தொழிலை வைத்தே மனிதனால் உருவாக்கப்பட்டதே சாதி. இன்னும் நாம் சாதி பார்த்துக்கொண்டிருப்பது நல்ல விடயமல்ல.
6. இங்கே கட்டுச் சொல்வதற்கு தெய்வம் ஆடுபவர்களால் அழைக்கப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் இளம் பெண்களாகவே இருந்தனர். தெய்வம் ஆடியவர்களும் இளம் வாலிபர்கள்தான்.
இங்கே பலரும் கேட்ட கேள்வி ஏன் ஆண்களை அழைக்க முடியாதா. தெய்வம் இளம் பெண்களுக்கு மட்டுமா அருள் கொடுக்கும்.
7. அங்கே மக்கள் இவர்களையே கடவுளாக மதிக்கப்பட்டனர். அங்கே ஆலயத்திலே இருந்த கடவுளை மக்கள் வணங்கியதனைவிட இவர்களை வணங்கியதே அதிகமாக இருந்தது. பலர் கால்களிலே விழுந்து வணங்கினர். இவர்களைத் தொட்டு கண்களிலே ஒற்றிக் கொண்டனர். ஏன் இந்த மூட நம்பிக்கை?
இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன...
நான் கேட்பது இந்த ஆலயம் ஆகம விதிப்படி அமைந்தது. முறைப்படி குருவாகப் படித்து தீட்சைபெற்று பல வருடங்களாக பூசை செய்து வருகின்ற ஒரு குருக்களுக்கு காட்சி கொடுக்காத கடவுள் இந்த மந்திரவாதிகளுக்கு காட்சி கொடுத்தாரா? அவர்களோடு மட்டும்தான் பேசுவாரா? ஏன் இந்தப் பூசாரிகள், மந்திரவாதிகள் மக்களையும் கடவுளையும் ஏமாற்றுகின்றனர்
ஏன் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இவர்களை ஏன் சிலர் முன்னிலைப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் அல்ல கடவுளை 100% நம்புபவன் ஆனாலும் மூட நம்பிக்கையையும், மனிதக் கடவுளர்களையும் துரத்த நினைப்பவன். இன்னும் பல பல மூட நம்பிக்கைகள் இந்துக்களிடையே இருக்கின்றன அவ்வப்போது உங்களை வந்து சேரும்.
இதனையும் பாருங்கள்
மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்றார்களா? கடவுளின் பெயரால் கொடுமைகள். கடவுள் நேற்று முளைத்த காளானா...