Wednesday 23 May 2012

யார் இந்த இராஜதுரை பகுதி -02

அடுத்துவந்த 1956 ஆம் ஆண்டு தேர்தலுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் தமிழரசுக்கட்சியை போட்டியிட வைப்பதிலும் இராஜதுரை மும்முரமாக உழைத்தார். கல்குடாவில் மாணிக்கவாசகரும், பட்டிருப்பில் இராஜமாணிக்கமும் இராஜதுரையால் தமிழரசுக்கட்சிக்காக உள்வாங்கப்பட்டனர். மட்டக்களப்புத் தொகுதியில் தானே முன்வந்து போட்டியிட துணிந்தார்.
பகுத்தறிவு இயக்கம், மட்டக்களப்பு முற்போக்கு வாலிபர் சங்கம், வரியிறுப்பாளர்கள் சங்கம், இலக்கியம், எழுத்துலகம் என்று விரிந்துகிடந்த தனது ஆற்றல்களையும் அனுபவங்களையும் தமிழரசுக்கட்சிக்காக தாரைவார்த்தவர் இராஜதுரையாகும். தமிழரசுக்கட்சியால் வளர்ந்தவர்கள் பலர் உண்டு. இன்றும் தமிழரசுக்கட்சியின் பெயரை உச்சாடனம் செய்வது ஒன்றே பதவி சுகத்தை தக்கவைப்பதற்கான அரசியல் மந்திரமாக பலருக்கு இருக்கின்றது. (இந்த பட்டியல் இரா.துரைரெட்ணம் வரை நீண்டு செல்கிறது) இராஜதுரை விடயத்தில் இந்த சூத்திரம் தலைகீழானது. இராஜதுரை தமிழரசுக்கட்சியால் வளர்ந்தார் என்பதைவிட இராஜதுரையால்தான் தமிழரசுக்கட்சி வளர்ந்தது என்பதே சாலப்பொருத்தமும் சத்தியமுமாகும். 1956 ஆம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியின் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுக்காசு இழக்கவைத்து அபார வெற்றியீட்டினார் இராஜதுரை. அன்று தொடங்கி ஆறு தேர்தல்களில் தொடர்ச்சியாக ஒரே தொகுதியில் வெற்றியீட்டிய தமிழ் தலைவர்கள் இராஜதுரையை தவிர வேறு யாருமிலர்.
தமிழர்களுடன் முஷ்லிம்களும் இணைந்து வாழும் மட்டக்களப்பு தொகுதியில் தன்னால் தோற்றகடிக்கப்பட்ட சின்னலெவ்வை அவர்கள் பதவியை இழந்ததன் ஊடாக முஷ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதென்பதை இராஜதுரை உணர்ந்துகொண்டார். அதன் அடிப்படையில் முஷ்லிகளின் பிரதிநிதித்துவத்தை தொடர்ச்சியாக உறுதிப்படுத்திக்கொள்ள மட்டக்களப்பு தொகுதியை இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கும் முயற்சியில் இராஜதுரை இறங்கினார். தேர்தல் ஆணையாளர் தல்கொட பட்டியா முன்னிலையில் சாட்சியம் அளித்து மட்டக்களப்பில் இரட்டை அங்கத்துவ தொகுதியின் அவசியம் பற்றி விளக்கிக் கூறினார்.
அதன்பலனாகவே மட்டக்களப்பு தொகுதியானது இரட்டை அங்கத்துவ தொகுதியாக்கப்பட்டமையும் தொடர்ச்சியாக முஷ்லிம்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படவும் ஏதுவாயிற்று.
1956 ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான போது மட்டக்களப்பு நகரின் கூலித்தொழிலாளர்களும், நகரசுத்தித் தொழிலாளர்களும் உரிய வசிப்பிடம் இன்றி அல்லலுற்றதை கண்ணுற்றார். புகையிரத நிலையத்தை அண்டிய முடிக்குரிய காணிகள் அனைத்தையும் காடுவெட்டி குடிசைகள் அமைக்கத் தூண்டினார். அதற்காக அரசஅதிகாரிகளால் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டார். தனது பாராளுமன்றப் பதவியை பயன்படுத்தி பாராளுமன்றில் தொழிலாளர்களின் காணிப்பிரச்சனையை எழுப்பியதின் ஊடாக அன்றைய காணிஅமைச்சர் சி.பி.டி.சில்வாவைக் கொண்டு அவர்களுக்கு காணி உறுதி வழங்கச்செய்தார். அந்த குடியேற்றப்பிரதேசங்களை இன்று இருதயபுரம் எனும் பெரும் பிரதேசமாக எழுந்துநிற்கின்றது.
கடல் கடந்த நாடுகளில் நிறுவப்பட்ட முதலாவது காந்திசிலையை மட்டக்களப்பு மாநகரில் இராஜதுரையே திறந்துவைத்தார். அண்மையில் மட்டக்களப்பு நகரில் உடைக்கப்பட்ட மகாத்மாகாந்தியின் சிலையே அதுவாகும்.

1960 ஆம் ஆண்டுவரை சிறுநகரசபையாக இருந்துவந்த மட்டக்களப்பை பெருநகரமாக மாற்ற இராஜதுரை அவர்கள் பெருமுயற்சி எடுத்தார். மட்டக்களப்பின் புறநகர் பகுதியாக இருந்துவந்த கல்லடி கிராமசபைக்குட்பட்ட கிராமங்களை மட்டக்களப்பு நகருடன் இணைத்து மாநகரசபையாக மாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு முன்னே வெறிச்சோடிக்கிடந்த முற்றவெளி மைதானத்தை புனநிர்மானம் செய்து ஷ்ரேடியங்கள் அமைத்து மட்டக்களப்பின் விளையாட்டுத்திறனை தேசிய அளவில் பரிணமிக்கச் செய்த அருட்தந்தை வெபர் அவர்களின் பெயரை அந்த ஷ்ரேடியத்துக்கு சூட்டி மகிழ்ந்தார்.
1961 ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியில் முதற்தடவையாக மே தினக்கூட்டம் ஒன்றை மட்டக்களப்பில் நடத்தி சாதனை படைத்தவர் இராஜதுரை. வைரமுத்து என்கின்ற ஒரு சாதாரண தொழிலாளியை அம்மேதின ஊர்வலத்திற்கு தலைமை ஏற்கச்செய்து தமிழரசுக்கட்சியின் பாரம்பரிய மேட்டுக்குடிப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார். அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சியின் சார்பிலான அந்த மே தினக்கூட்டத்தை கம்ய+னிசக்கட்சிக்காக மட்டக்களப்பில் அயராது பாடுபட்டுக்கொண்டிருந்த கிரு~;ணகுட்டியை கௌரவிக்கும் விழாவாக மாற்றினார். மட்டக்களப்பு மக்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளையாற்றி தொடர்ச்சியாக பாடுபட்டுவந்த இராஜதுரைக்கு உரிய கௌரவம் கட்சியில் வழங்கப்படவில்லை. தந்தை செல்வா இறந்தபின்னர் தலைமைப் பொறுப்புக்கு தகுதியாக இருந்த இராஜதுரை திட்டமிட்டவகையில் கட்சியால் ஒதுக்கப்படத் தொடங்கினார். கட்சியின் உருவாக்க காலத்தில் இருந்து தந்தை செல்வாவின் வலதுகையாக செயற்பட்டுவந்த இராஜதுரை அவர்கட்கு தந்தையின் மறைவை அடுத்து தலைமைப்பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த உரிமை மறுக்கப்பட்டது மட்டுமல்ல அவரை கட்சியில் இருந்து நீக்கிவிடுவதற்கான சதிகள் மெதுமெதுவாக பின்னப்பட்டன.

1977 ஆம் ஆண்டு தேர்தலையொட்டி கட்சியில் அவருக்கு தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு கூட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கட்சிக்காக இராஜதுரையால் வளர்த்தெடுக்கப்பட்ட காத்தமுத்து சிவானந்தன் எனும் இளைஞனுக்கு பதவியாசை ஊட்டி மட்டக்களப்பு தொகுதியில் இராஜதுரையை போட்டியிடாமல் தடுக்கும் முயற்சி அமிர்தலிங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இராஜதுரையை தன் அரசியல் குருவாகவே எண்ணிவளர்ந்த காசி ஆனந்தன் மட்டக்களப்பு தொகுதியில் “நான் களையெடுக்கப்போகின்றேன்” என்று கட்சிப்பத்திரிகையான சுதந்திரனில் அறிக்கை விட்டார். கட்சிக்குள்ளேயே இரண்டு பேர் மட்டக்களப்பு தொகுதியில் ஒரே நேரத்தில் போட்டியிட சதி தீட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இராஜதுரை கட்சித்தலைமையை அணுகியபோது அதனை தேர்தல் நியமனக் குழு பார்த்துக்கொள்ளும் என்று அமிர்தலிங்கம் பதிலளித்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வேளை வந்தபோது 1952 ஆம் ஆண்டில் இருந்து 1970 ஆம் ஆண்டுவரை கட்சியின் தேர்தல் நியமனக் குழு உறுப்பினராக இருந்து வந்த இராஜதுரை அப்பதவியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் தலைமை ஒருதலைப்பட்சமாக அறிவித்தது. இது இராஜதுரைக்கு விழுந்த முதுலாவது அடியாகும். அதுமட்டுமல்ல தொடர்ச்சியாக ஐந்து தேர்தல்களில் (இருபது ஆண்டுகள்) வெற்றியீட்டிய இராஜதுரையை தேர்தல் நியமனக் குழுவின் முன்னர் நேர்முகப்பரிட்சைக்கு ஆஜராகுமாறு அழைத்து அவமானப்படுத்தினார் அமிர்தலிங்கம். அந்த நேர்முகப்பரிட்சைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் செல்லக்கூடாது என்றும் ஆதரவாளர்கள் இராஜதுரையை வேண்டிக்கொண்டனர். ஆனபோதிலும் கட்சி ஒழுங்கும், கட்சியின் நன்மையையும் கருதி தேர்தல் நியமனக்குழு முன்னர் ஒரு புதுமுக வேட்பாளரைப்போன்று இராஜதுரை ஆஜராகினார். அங்கு மட்டக்களப்பு தொகுதிக்கு புதிய வேட்பாளர்கள் எவரையும் போடவேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பதற்கான காரணங்களை எடுத்துச் சொன்னதோடு இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் ஒரு பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாக முஷ்லிம்களுக்குரியதாகவே இருந்துவரும் நிலையில் தமிழரசுக்கட்சி சார்பில் இரண்டு வேட்பாளர்கள் களத்தில் நிற்பதுவும் முஷ்லிம்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை மறுக்கும் செயலாகும் என்றும் விளக்கிக் கூறினார். அவரது எந்த விளக்கங்களும் தேர்தல் நியமனக்குழுவின் தலைமை நீதிபதியாக இருந்த அமிர்தலிங்கத்திடம் எடுபடவில்லை. இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இராஜதுரையையும், தமிழரசுக்கட்சியில் காசி ஆனந்தனையும் நிறுத்த கட்சி முடிவுசெய்தது. வடக்கு கிழக்கின் அனைத்து தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாக பரிணமித்து சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியினர் மட்டக்களப்பில் மட்டும் மேலதிகமாக தமிழரசுக்கட்சியை இராஜதுரைக்கு போட்டியாக களமிறக்கினர். சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் தமிழரசுக்கட்சியின் சின்னமாக இருந்துவந்த வீட்டுச்சின்னம் காசி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டமை, புதிய சின்னத்தில் போட்டியிட நேர்ந்த இராஜதுரையின் ஆதரவாளர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தேர்தல் நெருங்கிய வேளைகளில் இராஜதுரையின் தேர்தல் மேடைகளில் உரையாற்ற எந்தவொரு கட்சி முக்கியஷ்தர்களும் முன்வரவில்லை. ஈழவேந்தன், கோவை மகேசன், மாவை சேனாதிராஜா போன்றோர் மட்டக்களப்பில் களமிறக்கப்பட்டு காசி ஆனந்தனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அவர்களது விசமத்தனமான பேச்சுகளும் கட்சிப்பத்திரிகையான ‘சுதந்திரனில்’ இராஜதுரைக்கு எதிராக வெளிப்படையாகவே எழுதிய பண்புகெட்ட எழுத்துகளும் அளவற்றன. பட்டிருப்பு தொகுதியிலும் கல்குடா தொகுதியிலும் உதயசூரியனை ஒளிரச் செய்யுங்கள் என்று பேசிய கட்சித் தலைவர்கள் அதே வாயால் மட்டக்களப்பு தொகுதியில் உதயசூரியனை உதிக்காமல் செய்யுங்கள் என்று பேசினர். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரே கட்சிக்குள்ளேயே இராஜதுரைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவமானங்களுக்கும் குத்துவெட்டுகளுக்கும் நிகர்த்த பிறிதொன்று இலங்கை வரலாற்றில் எங்கேனும் நிகழ்ந்ததில்லை.
1977 ஆம் ஆண்டு தேர்தலில் இராஜதுரைக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இந்த சதி மட்டக்களப்பு மக்களால் தோற்கடிக்கப்பட்டது. வழமைபோலவே அந்தத் தேர்தலிலும் இராஜதுரை அமோக வெற்றியீட்டினார். வெற்றியின் பின்னர் தேர்தலில் நடந்த கழுத்தறுப்புகளை எல்லாம் மறந்துவிட முயன்று கட்சியில் தொடர்ந்து பணியாற்ற அவர் சித்தம் கொண்டேயிருந்தார். அதன் காரணமாகவே பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்த ப+.கணேசலிங்கத்தின் வீட்டில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு வருமாறு விடப்பட்ட அழைப்பை ஏற்று அங்கு சென்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போன்று அங்கு சமரச முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. செயற்குழுக்கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் கூட்டம் இடம்பெற்ற வீட்டைச்சுற்றி திட்டமிடப்பட்ட வகையில் குவிக்கப்பட்டிருந்த கட்சித் தொண்டர்களால் இராஜதுரை கேவலப்படுத்தப்பட்டார். அன்று மாலை பாட்டாளிபுரத்தில் இடம்பெற்ற கட்சியின் நன்றி நவிலல் பொதுகூட்டத்தில் இராஜதுரைக்கு பேச சந்தர்பம் மறுக்கப்பட்டது. தேர்தலில் தோற்ற காசி ஆனந்தன் முன்னணி பேச்சாளராக திகழ்ந்தார். மேடையிலே வீற்றிருந்த அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் செய்த சதியே அதுவாகும். தமிழரசுக்கட்சியின் தூணாக இருந்து கட்சியை வளர்த்தெடுத்த இராஜதுரைக்கு மட்டக்களப்பு மண்ணிலேயே பேசும் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டமை அவமானத்திலும் அவமானமாகும்.
இந்த நேரத்தில்தான் 1978 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தையே அழித்தொழித்த ‘சூறாவளி” வீசியது. வரலாறு காணாத பேரழிவுக்கு இலக்காகி நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துகிடக்க, பதினைந்து அடிகளுக்கு மேல் எழுந்த கடல்கொந்தளிப்பு பல கிராமங்களை தடைமட்டமாக்கிவிட, 14 லட்சம் தென்னைமரங்கள் வீழ்ந்துகிடக்க, வீதிகள் எங்கும் உடைந்து மறிபட்டு சிதிலமடைந்து சீரழிந்த நிலையில் அவ்வழிவுகளை பார்வையிட பிரதமர் பிறேமதாசா மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார். மக்கள் முன்னிலையில் மட்டக்களப்பின் அழிவுநிலையை எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பும் அவசரமும் மட்டக்களப்பு பாராளுமன்ற பிரதிநிதி எனும் வகையில் இராஜதுரைக்கு இருந்தது. அந்தவகையில் இராஜதுரை பிரதமர் பிறேமதாசாவை சந்தித்து மட்டக்களப்பின் அழிவுநிலையை எடுத்தியம்பினார்.

மட்டக்களப்பின் பரிதாபநிலையை ஆதரவற்றுக்கிடந்த மக்களுக்கான அவசரத் தேவைகளை பிரதமரிடம் எடுத்துக்கூறியது மன்னிக்க முடியாத குற்றம் என்று கட்சியின் மேலிடம் குற்றம் சுமத்தியது. இதற்கான விளக்கம் கோரி உடனடியாக பதிலிறுக்குமாறு கட்சி மேலிடம் இராஜதுரைக்கு நெருக்கடி கொடுத்தது. அந்த வேளையில் யாழ்ப்பாணம் செல்வதோ கட்சியினுடனான சமரச முயற்சிகளில் ஈடுபடுவதற்கோ கால அவகாசம் இருக்கவில்லை. மட்டக்களப்பு மண் அழிந்துகிடக்க உடனடியாக யாழ்ப்பாணம் செல்லமுடியாத நிலை முப்பது நாட்கள் அவகாசம் கேட்டு கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதினார் இராஜதுரை. முப்பது வருடங்கள் கட்சி வளர்த்தவனுக்கு தன் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான பழி பற்றி சுயவிளக்கம் சொல்ல முப்பது நாட்கள் அவகாசம் மறுக்கப்பட்டது. இன்னிலையில் கட்சித் தலைமையினால் தனக்கு எதிராக இழைக்கப்பட்டு வந்த அலட்சியங்கள், அநீதிகள், உபத்திரவங்கள், உத்தரிப்புகள், கழுத்தறுப்புகள் அனைத்துக்கும் முடிவாக கட்சியை விட்டே விலகிவிடுவதென்ற முடிவுக்கு இராஜதுரை வந்தார். தனது அரசியல் லாபத்திற்காக நாளொரு கட்சிதேடி அலைந்தவர் அல்ல இராஜதுரை. யாழ்ப்பாணத்து மேட்டுக்குடி அரசியல் மட்டக்களப்பானை எப்படியெல்லாம் அலைகழிக்கும் என்கின்ற பாடங்களை வருடக்கணக்கில் அனுபவித்த பின்னரே தமிழரசுக்கட்சி அரசியலை விட்டுத்தொலைக்க அவர் முடிவெடுத்தார். தர்மத்தின் ஆவேசம் அது.

யாழ் மேட்டுக்குடி அரசியலில் மொத்த வடிவமாகிவிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து அவர் தன்னை விலக்கிக்கொண்டார். சூறாவழி காரணமாக நிர்கதியாக கிடந்த மட்டக்களப்பு மக்களின் துயர்துடைக்க அரசாங்கத்தில் இணைவதா? அன்றில் அரசியலை விட்டே ஒதுங்கிவிடுவதா? என்கின்ற கேள்வியில் சிக்கித் தவித்தார். தமது ஆதரவாளர்களினதும் மட்டக்களப்பு புத்திஜீகளினதும் ஆலோசனையின் பேரில் அரசியலில் இருந்து ஒதுங்குவதில்லை எனும் முடிவுக்கு வந்தார். அரசாங்கத்தில் இணைய முன்வந்தபோது அரசாங்கம் அவருக்கு அமைச்சுபதவி வழங்கி கௌரவித்தது. பிரதேச அபிவிருத்தி, இந்துசமய கலாசார தமிழ்மொழி அமூலாக்கல் அமைச்சு எனும் புதிய அமைச்சு ஒன்றை உருவாக்கி வடக்கு கிழக்கு மக்களின் பல அரசியல் கோரிக்கைகளை தீர்க்க அவருக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. இலங்கையில் முதன் முதலாக இரண்டு மாகாணங்களை விசேடமாக குறிப்பிட்டு அப்பிரதேசத்திற்கான அபிவிருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு பிரதேச அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்பட்டது. இதனூடாக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வேலைவாய்ப்பு …. போன்ற அனைத்து துறைகளிலும் வடகிழக்கில் அபிவிருத்தி மேற்கொள்ள இவ்வமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, கொழும்பு பல்கலைக்கழகத்திலும் தமிழ் பேராசிரியராய், இராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட தமிழ் கலைச்சொல் அகராதி கழகங்கள் அனைத்துக்குமான பொதுத்தலைவராய், 2000 ஆண்டுகால தமிழ் இசையை மீட்டெடுத்து யாழ் நூல் ஆக்கித்தந்த இசைமுனியாய் வாழ்ந்த தமிழ் இலக்கியப் பேரூலகின் ஒரே முத்தமிழ் வித்தகன் விபுலானந்தனின் ஒப்பற்ற சாதனைகளை பிரதேசநலம் பேணும் தமிழ் அறிவுலகம் பேரூவகை கொண்டு அணுக மறுத்து வந்தபோது இராஜதுரை தமது அமைச்சு பதவி உதவியுடன் விபுலானந்தருக்கு பெரும் கௌரவம் அளித்தார்.
விபுலானந்தா இசைநடனக்கல்லூரி என்கின்ற பென்னம்பெரு மையத்தினை அமைத்து அப்பெருமானரின் பெயரை நீக்கமற நிலைக்கச்செய்தார். அந்த இசைநடனக் கல்லூரியே இன்று கிழக்கு பல்கலைக்கழத்தின் நுண்கலைத்துறையாக பரிணமித்துள்ளது. அதுமட்டுமன்றி இலங்கை அரசைக்கொண்டே (1979 ஆம் ஆண்டு) அப்பெருமகனாருக்கு நினைவு முத்திரை வெளியிடச்செய்தார். மட்டக்களப்பு நகரின் மீன்பாடும் வாவியை அழகுபடுத்தும் பெரும்திட்டத்தை ஆரம்பித்தார். விபுலானந்தருக்குரிய மணிமண்டபத்தை அமைத்தது மட்டுமல்ல, யாழ்ப்பாண மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு நாவலர் மணிமண்டபத்தை அமைத்தது இந்த இராஜதுரையேயாகும்.
இராஜதுரை தமிழ் மொழி அமுலாக்க அமைச்சராக இருந்த காலத்திலேயே இலங்கையில் தமிழ் மொழி அரசகரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசகருமமொழிச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 12 வது சட்டதிருத்தத்தை உருவாக்கியதினூடாக தமிழ் மொழிக்கும் சம அந்தஷ்து வழங்கப்பட்டது. இதனை வரலாற்றில் திட்டமிட்டு அனைவரும் மறைத்துக்கொண்டிருக்கின்றார்கள். சட்டமேதைகள் நிறைந்த தமிழரசுக்கட்சியினரால் வாதப்பிரதிவாதங்களை எழுப்ப முடிந்ததே தவிர எதையும் சாதிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் மொழிக்கு அரசகருமமொழி அந்தஷ்து வழங்கப்பட்டது இந்த இராஜதுரையால் நிகழ்த்தப்பட்ட சாதனையேயாகும். அமைச்சராக இருப்பது துரோகமாய் இருந்தால் அதுவரை காலமும் தமிழ் தலைவர்கள் யாரும் அரசுடன் இணைந்து அமைச்சராய் இருக்கவில்லையா? 1947 இல் ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சராகி பத்து லட்சம் மலையகமக்களின் வாக்குரிமைகளைப் பறிக்க அரசுக்கு துணைபோனாரே, அவரை துரோகி என்று வரலாற்று ஆசிரியர் யாரும் குறிப்பிடுவதில்லையே?
1965 இல் ஐம்பதுக்கு ஐம்பது பெற்றுத்தருகிறேன் என்று அதே ஜி.ஜி.பொன்னம்பலமும் சம~;டி ஒன்றே தீர்வாகும் என்று தமிழரசுக்கட்சியும் கன்னை பிரித்து நின்று தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டு டட்லி சேனநாயக்காவின் அரசாங்கத்தில் பதவிகளுக்காக சங்கமமானது துரோகமில்லையா? தமிழரசுக்கட்சியினரை சமாளிக்க பட்டிருப்பு இராசமாணிக்கத்திற்கு அமைச்சர் பதவியை வழங்குகிறோம் என்று ஆசை காட்டிவிட்டு தமிழரசுக்கட்சியின் கொழும்பு புறோக்கறான திருச்செல்வத்திற்கு அமைச்சுபதவியை வழங்கியது செல்வநாயகம் செய்த நம்பிக்கைத்துரோகம் இல்லையா? தமது பங்கிற்கு ஜி.ஜி.பொன்னம்பலம் வாங்கிய உபசபாநாயகர் பதவியை பெற்றுக்கொண்ட சிவசிதம்பரத்தை துரோகி என்று யாரும் சொல்வதில்லையே?

இராஜதுரை யாழ் மேட்டுக்குடி தமிழரசுக்கட்சியினால் வஞ்சிக்கப்பட்டு ஆறாத ரணங்களை நெஞ்சிலே சுமந்துகொண்டு அரசாங்கத்தில் இணைந்தது மட்டும் எப்படிக் குற்றமாகும்?

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "யார் இந்த இராஜதுரை பகுதி -02"

Post a Comment