சுசி அக்கா நான் பதிவெழுத வந்த கதையினை சொல்லும்படி தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றார். அவருக்கு முதலில் நன்றிகள்.
இணைய இணைப்பு இருந்தும் எனக்கு வலைப்பதிவுகள் பற்றி அவ்வளவாகத் தெரியாத காலம். என் பொழுதுகள் அதிகம் இணையத்தில்தான். புதிய விடயங்களை அறிந்து கொள்வதிலும் உள்நாட்டு, உலக நடப்பு விவாகாரங்களையும் அறிந்து கொள்வதோடு அவ்வப்போது அரட்டை அடிக்காமலும் விடுவதில்லை (அரட்டையில் பல கதைகளே இருக்கிறது)
துணிவும், தன்னம்பிக்கையும், தமிழ் பற்றும் என்னோடு கூடப் பிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும். என்னில் எனக்கு மட்டுமல்ல என் நண்பர்களுக்கே என்னிடம் பிடிக்காத விடயம் நான் அநீதிகளை யாராக இருந்தாலும் தட்டிக் கேட்பதுதான். இதனால் பல பிரஷ்சினைகளுக்கும் முகம் கொடுத்ததுண்டு.
மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள், அவலங்களை வெளி உலகுக்கு கொண்டு செல்லவேண்டும், அநீதிகளை வெளி உலகுக்கு கொண்டு செல்லவேண்டும் என்கின்ற ஆதங்கம் அதிகம். இதனால் நான் ஒரு பத்திரிகையாளராக வரவேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளே இருந்தது ஆனால் என் நண்பர்களும் என் குடும்பத்தாரும் தடுத்துவிட்டனர்.
இருந்தாலும் நான் ஒரு இணையத்தளத்தினை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இணையத்தளத்தினை உருவாக்குவதட்குரிய வேலைகளை செய்து கொண்டிருக்கும்போதுதான் நண்பர் பிரபா என்னிடம் வலைப்பதிவு பற்றி சொன்னார். பிரபாவுக்கு நன்றிகள்.
அந்தவேளையில்
பிரபா வலைப்பதிவினை உருவாக்கி இருந்தார் அவருக்கும் வலைப்பதிவு பற்றிய போதிய அறிவு இருக்கவில்லை. அவர் வலைப்பதிவு பற்றி சொல்லிய அன்றிரவே வலைப்பதிவை உருவாக்கிவிட்டேன் ஆனால் எனக்கு தமிழிலே தட்டச்சு செய்யத் தெரியாது. அவற்றைக் கற்பதற்கே இரண்டு வாரங்கள் சென்றுவிட்டன.
பின்னர்
http://www.google.co.in/transliterate/indic/Tamil முலமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொண்டேன் (இன்றும் அதனைத்தான் பயன்படுத்துகின்றேன்) அப்போது எனக்கு அவ்வளவாக வலைப்பதிவுகளை தெரியாது. கருத்துரையிடுதல் எதுவுமே தெரியாது. அப்போது பிரபா மூலம்
லோஷன் அண்ணாவின் வலைப்பதிவு முகவரியை அறிய முடிந்தது. அப்போது அதிக நேரம் அவரது வலைப்பதிவிலேதான் செலவு செய்தேன். எவ்வாறு பதிவிடுதல். போன்ற விடயங்களை அவரது வலைப்பதிவு மூலமாகத்தான் அறிந்து கொண்டேன். நான் அடிக்கடி லோஷன் அண்ணாவைப் பற்றி சொல்வதனால் தவறான கண்ணோட்டத்தில் எவரும் பார்க்கவேண்டாம். நாம் நல்ல மனிதர் ஒருவரை பின்பற்றும்போது நாங்கள் எங்களை வளர்த்துக்கொள்ள முடியும். பதிவுலகில் அவரது வலைப்பதிவும், அவர் எனக்கிடுகின்ற கருத்துரைகளும் என்ன வளர்த்துக்கொள்ள உதவியது.
நான் பதிவுலகுக்கு வந்து தமிழர் கலை, கலாசாரங்களையும், தமிழ்மொழி பற்றியும், எமது மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளையும், அவலங்களையும் பதிவிட வேண்டும் என்று பதிவுலகுக்கு வந்தேன். சில விடயங்களை பதிவிட முடியாது இருக்கின்றபோது கவலைதான். நகைசுவை , சினிமா மற்றும் விளையாட்டு பதிவுகளை தவிர்த்து வந்தபோதும் அவற்றையும் பதிவிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. காரணம் எல்லோரையும் என் பதிவுப் பக்கம் திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணமே. அவ்வப்போது ஒரு சில நகைசுவை பதிவுகளை இடுகையிட்டபோது. சில நண்பர்களை இழக்கவேண்டி ஏற்பட்டது.
ஆரம்பத்திலே வைத்திருந்த எனது பதிவு தொலைந்துவிட்டது. இப்போது புதிய வலைப்பதிவிலே இருக்கிறேன். ஆரம்ப காலங்களிலே திரட்டிகளில் இணைப்பது பற்றி எதுவுமே தெரியாது. இரண்டு மாதங்களின் பின் திரட்டிகளில் வாக்களிப்பதற்கான வாக்களிப்பு பட்டையை என் வலைப்பதிவிலே இணைத்துவிட்டேன். அவ்வளவுதான். ஒரு மாதம் வரைக்கும் பதிவுகளை இணைப்பது பற்றித் தெரியாது. பின்னர் எல்லாவற்றையும் ஓரளவு கற்றுக் கொண்டேன்.
ஆரம்ப காலங்களிலே நான் பல வலைப்பதிவுகளுக்கு சென்றாலும் கருத்துரையிடுவதில்லை. ஆனால் தானாகவே எனது வலைப்பதிவுக்கு வந்து பல நண்பர்கள் ஊக்கப்படுத்தினார்கள். அவர்களிலே பிரபா, சிந்து, கலை, சசி, சக்கரை சுரேஷ், காயத்திரி போன்றோர் என்னை ஊக்கப்படுத்தி இருக்கின்றனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.
நான் புதிய வலைப்பதிவுக்கு வந்தபோது நிறையவே நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் சொல்வதென்றால் தொடர் பதிவே இட வேண்டும். அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இருந்தபோது ஒருவருக்கு நான் நன்றி சொல்லவேண்டும். இவரிடம் வலைப்பதிவு இல்லை என்னை ஆரம்ப காலம் முதல் எனக்கு கருத்துரைகள் மூலம் ஊக்கப்படுத்திவரும் கலா அவர்களுக்கு நன்றிகள். இவர் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் நான் விடுகின்ற சின்ன பிழைகளை கூட சுட்டிக்காட்டி திருத்துகின்ற ஒருவர். இவர் என் இடுகைகளிலே ஒரு எழுத்துக்குட பிழையாக இருக்கக் கூடாது என்று நினைப்பவர்.
எனக்கு இணையத்தளம், பிளாக்கர் தொடர்பான எந்த விதமான அறிவுமே இல்லை. (பொதுவாக தொழிநுட்பமே தெரியாது) இவைகளை அறிய வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அப்போது எந்த ஒரு தொழிநுட்ப பதிவுகளையும் விட்டு வைக்கவில்லை அனைத்தையும் தேடிப்படிப்பதுண்டு.
இதற்காக நான் தினமும் தமிழிஸ் திரட்டியின் தொழிநுட்ப பதிவுகளைப் பார்த்து வருகின்றேன். அப்பதிவுகளுக்கு சென்று அந்தப் பதிவரால் இடுகையிட்ட அத்தனை இடுகைகளையும் பார்ப்பதுண்டு அதனால் நிறையவே என்னை வளர்த்துக்கொள்ள முடிந்தது.
ஆரம்ப காலங்களிலே எனது வலைப்பதிவிலே பின்தொடர்வோர் கட்ஜெட் இருக்கவில்லை. இவற்றை இணைக்கவேண்டும் என்று இணைப்பதற்கான வழிகளை பல நாள் முயற்சியின் பயனாக தேடலின் மூலம் ஒரு வலைப்பதிவிலே கண்டுபிடித்துவிட்டேன். புதிய பதிவார்கள் பயன்பெற வேண்டும் என்று எவ்வாறு அந்த கட்ஜெட் எவ்வாறு இணைப்பது என்று ஒரு பதிவுமிட்டேன்.
இதுதான் அந்தப் பதிவு..
அதே போன்றுதான் எனக்கும் கூகிள் விளம்பரங்களை எனது வலைப்பதிவுக்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கூகிள் விளம்பரங்களுக்காக பதிவு செய்தேன் இன்னும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அறிந்தேன் ஆங்கிலப் பதிவுகளுக்கு உடனடியாக கூகிள் விளம்பரங்கள் கிடைப்பதாக அறிந்தேன். எனக்கு ஆங்கிலப் பதிவுகள் எழுதுமளவுக்கு அறிவு இல்லை என்பதனால் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஒரு எண்ணம் தோன்றியது ஆங்கில பதிவு ஆரம்பிக்கலாம் என்று. ஆரம்பித்துவிட்டேன் சினிமா நடிகர், நடிகைகளின் படங்களை இடுகையிட்டேன். நிறையவே பார்வையாளர்கள் வந்தார்கள் கூகிள் விளம்பரத்துக்கு பதிவு செய்தேன் அடுத்த நாளே அனுமதி கிடைத்தது. அந்த அந்த கணக்கு மூலம் எனது இந்த வலைப்பதிவிலே கூகிள் விளம்பரங்களை போட்டிருக்கிறேன்.
கூகிள் விளம்பரங்களை பெற விரும்பும் பதிவர்கள் இலகுவாக இந்த முறை மூலம் கூகிள் விளம்பரங்களை பெற முடியும் நான் இதுவரை நான்கு வலைப்பதிவுகளுக்கு கூகிள் விளம்பரம் பெற்றிருக்கிறேன் இந்த முறை மூலம். பதிவு செய்து அடுத்த நாளே அனுமதி கிடைத்துவிடும். பின்னர் எமது தமிழ் வலைப்பதிவுகளில் பயன்படுத்த முடியும்.
பதிவுலகிலே சில விடயங்கள் என்னை கவலையடைய வைத்ததுண்டு. நான் எவரையும் ஒரு போதும் தனிப்பட்ட ரீதியில் தாக்கி பதிவிட்டதில்லை என் கருத்துக்களை சொல்கின்றேன். யார் ஏற்றுக்கொள்ளக் கூடிய விமர்சனங்களை முன் வைத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் சில பெயர் குறிப்பிடாதவர்கள் தேவையற்ற விதத்திலும், தகாத வார்த்தைகளாலும் கருத்துரை இடுகின்றனர்.
சில மிரட்டல்கள் என்று இன்னும் பல விடயங்களை சொல்லலாம். இந்த தாக்குதல்களால் இன்னும் எழுத வேண்டும் எண்ணமே வந்தது.
இந்த பதிவுலகிலே உலகெங்குமிருந்து பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர் அவர்களுக்கு எனது நன்றிகள். எழுத்துத் துறையிலே இன்னும் நான் வளரவேண்டும் என்று நினைக்கின்றேன். இன்னும் என்னை வளர்த்துக்கொள்வேன். நல்ல விடயங்களை பதிவிடவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது என்றும் நண்பர்களின் ஆதரவும் இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.
இந்த தொடர் பதிவினை தொடர்வதற்கு நான் யாரையும் அழைக்கவில்லை. பலர் பதிவிட்டு விட்டார்கள். தொடர விரும்பும் யாரும் தொடரலாம்.