Monday 27 July 2009

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா..

பல சிறப்புக்களை கொண்ட தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் ஊடகங்களால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

இதனை நண்பர் ஆ.ஞானசேகரன் தனது அம்மா அப்பா வலைப்பதிவிலே மிகவும் சிறப்பாகக் சொல்லி இருக்கின்றார். அந்த இடுகையை பார்த்த போது எனது மனதிலே இருந்த சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


தமிழ் மொழியோடு பிற மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதனையும் தமது நோக்கங்களிலே ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டும். இன்று பல ஊடகங்களும் ஊடகவியலாளரும் தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஆர்வம் காட்டிவரும் நேரம் சில ஊடகங்களிலே தமிழ் பயன்பாட்டைப் பார்க்கின்றபோது எல்லோருமே கவலைப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.


நாகரிக உலகில், நாமும் மாற வேண்டும் என்பதற்காக எமது தமிழ் மொழியினை மாற்றி அமைக்க முடியுமா. இன்று தமிழோடு ஆங்கில சொற்களை பயன்படுத்துவது ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. ஏன் தமிழ் மொழியில் பேசுவதிலே என்ன இருக்கிறது எமது மொழியை நாமே பயன்படுத்த வெறுக்கிறோம். இதற்கு சொல்லும் குற்றச்சாட்டு உண்மையான தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது என்று சொல்லி விடுவார்கள். நான் வேற்று மொழிகளை குற்றம் சாட்டவில்லை ஆங்கிலம் முக்கிய மொழியாக இருக்கலாம் எமது மொழியை மறப்பதா ஆங்கிலம் பேசவேண்டிய இடங்களில் பேசுவது தப்பு இல்லை. ஆனால் சிலர் பேசுவார்கள் தமிழ் வார்த்தைகள் 25 வீதமே கூட இருக்காது. இவர்கள் பேசுவது ஆங்கிலம் தெரியாத பாமர மக்களாக இருந்தாலும் அவர்களது பேச்சிலே மாற்றம் இருக்காது.

மக்களுக்கு தெரியாததமிழ் சொற்களை பாவிக்கும் போது எல்லோருக்கும் புரியாது என்று சொல்லிக்கொள்வோர் பலர். எங்களால் புரிய வைக்க முடியும் என்பதற்கு நண்பர் ஞானசேகரன் குறிப்பிட்டவற்றை தருகிறேன்

தந்தை பெரியார் அவர்களின் அச்சு எழுத்துக்களில் சிக்கனம் காரணமாக உருவானதுதான் தமிழ் சீர்திருத்த எழுத்துகள். னா, ணா, னை, ணை, லை, ளை போன்ற எழுத்துகள் சீர்திருத்தப்பட்டது. இவற்றை மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் MGR அவர்களால் அரசில் பரிந்துரை செய்யப்பட்டது. இன்று இவைகள் பயன்பாட்டில் இருக்கின்றது. நேற்று என் நண்பர்களிடம் பழைய னா, ணா, னை, ணை, லை, ளை எழுதிக்காட்டுங்கள் என்றேன். அவர்களால் ஞாபகத்திற்கு கொண்டு வரமுடியவில்லை அந்த அளவிற்கு மறக்கடிக்கபட்டுள்ளது.

மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பது உண்மையே. இதனை 100 வீதம் ஊடகங்களினால் சாத்தியப் படுத்த முடியும். பல ஊடகங்கள் இதில் வெற்றியும் கண்டன பல ஊடகவியலாளர்கள் தமிழை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். வெதுப்பகம், தொடருந்து, மகிழுந்து போன்ற பல தமிழ் சொற்களை இப்பொழுது ஊடகங்களில் பாவிப்பதனை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது. இதனை மக்கள் மத்தியிலே பிரபல்யப் படுத்தியது ஊடகங்களே. அப்படி இருக்கும் போது ஏனைய சொற்களையும் நாம் பயந்படுத்தும்போது மக்களும் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பதே உண்மை.


இன்று பலரது குற்றச் சாட்டாகவும் இருப்பது சில இலத்திரனியல் ஊடகங்களிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்பதே. உண்மையும் அதுதான் தமிழை வளர்க்க வேண்டியவர்கள். நேயர்களோடு பேசும்போது அதிகமாக ஆங்கில சொற்களை பிரயோகிப்பது ஏன். நான் அதிகம் அவதானித்த விடயம் சாதாரண ஆங்கிலம் தெரியாத மக்களோடும் ஆங்கிலத்தில் பேசுவது. இன்று தொலைபேசி பாவனை அதிகரித்து விட்டதனால் கிராமப்புற மக்கள் இலத்திரனியல் ஊடகங்களுக்கு தொலைபேசி அழைப்பினை எடுப்பது அதிகரித்து விட்டது. ஆனால் அவர்களை புரிந்து கொண்டு தமிழிலே பேசுவதை தவிர்த்து ஆங்கில வார்த்தைகளோடு சில அறிவிப்பாளர்கள் விளையாடுவதுதான் ஏன்.

சிலர் தாங்கள் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தவில்லை என்றால் மற்றவர்கள்தன்னை கீழ்த்தரமாக நினைப்பார்கள் என்று நினைக்கின்றனர். நவின உலகுக்கு ஊடகங்களும் மாறத்தான் வேண்டும். அதற்காக நாம் தமிழை சாகடிப்பதா. இன்று சில ஊடகங்களிலே சில அறிவிப்பாளர்கள் லகர, ழகர வேறுபாடு தெரியாமலே தமிழை கொலை செய்கின்றனர். இவர்கள் தமிழை வளர்ப்பவர்களா. எத்தனையோ திறமையானவர்கள் இருக்கும்போது ஏன் இவர்கள் உள் வாங்கப்பட்டனர். தமிழை வளர்க்க தமிழ் ஊடகங்கள் முன்வர வேண்டும்.

ஒரு போட்டி ஒரு தொலைக்காட்சியிலே நடந்தது அதிலே நடுவர் போட்டியாளரிடம் சொன்னார் உங்கள் தமிழ் உச்சரிப்பில் "பிலைகள்" இருக்கிறது திருத்துங்கள்என்று இவர் பிழை திருத்துகிறாரா. அல்லது தமிழ் கொலை செய்கிறாரா. அவரே தமிழ் கொலை செய்யும் போது எப்படி மற்றவரை திருத்துவது.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.இனிமேலாவது தமிழை வளர்க்காவிட்டாலும் தமிழை தமிழாக பயன்படுத்த முன்வருவார்களானால் பாராட்டப்பட வேண்டியதே.

ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை வெதுப்பகம், தொடருந்து, உந்துருளி, மகிழுந்து போன்ற சொற்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக்கப் பட்டது ஊடகங்களால்தான் ஏனைய சொற்களையும் மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்துவதொடு தமிழ் மொழியினை ஊடங்களால் வளர்க்க முடியும் என்பதே உண்மை.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

72 comments: on "ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.."

Prapa said...

ரொம்ப முக்கியமான விஷயம் சந்ரு, திருந்துவார்கள் என்றால் சரி,,,,,,,

நட்புடன் ஜமால் said...

எழுதுகையில்

பழைய முறையினை தான் நான் இன்னும் கடைபிடிக்கின்றேன்.

இணையத்தில் இன்னும் வரவில்லை.

பார்ப்போம் ...

ஹேமா said...

சந்ரு தமிழ்மொழி பற்றிய அக்கறையும் கவலையும் நிறைய இருக்கு உங்கள் பதிவிலும் மனதிலும்.சந்தோஷமாயிருக்கு சந்ரு.உங்களைப்போல இளைஞர்கள் தமிழில் அக்கறை இருக்கிறவரை தமிழின் வளைச்சிக்குக் குறைவேயில்லை.

மக்கள் தொலைக்காட்சியில் ஜேம்ஸ் வசந்தன் நடாத்தும் தமிழில் பேசலாம் வாருங்கள்.வந்தால் ஒரு பொற்காசு.
எப்படி!எங்கள் தாய்த்தமிழில் பேச பணம் கொடுத்து ஊக்கம் கொடுக்கிறார்கள்.ஆனால் அதிலும்
98%வீதமானோர் தோற்றே போகிறார்கள்.இது கவலைக்குரிய விஷயம்தான்.

ஆனால் ஈழத்தைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சனை குறைவு என்றே நினைக்கிறேன்.ஆனால் ஆங்கிலம் கலக்காமல் கதைக்கும் எங்களைப் பரிகாசம் செய்கிறார்களே.
என்னசெய்யலாம் சந்ரு !

நாணல் said...

நல்ல பதிவு...

Admin said...

//பிரபா கூறியது...
ரொம்ப முக்கியமான விஷயம் சந்ரு, திருந்துவார்கள் என்றால் சரி,,,,,,,//


திருந்தவேண்டும் என்பதே எல்லோரது எதிர் பார்ப்பும். திருந்துவார்களா....

Admin said...

//நட்புடன் ஜமால் கூறியது...
எழுதுகையில்

பழைய முறையினை தான் நான் இன்னும் கடைபிடிக்கின்றேன்.

இணையத்தில் இன்னும் வரவில்லை.

பார்ப்போம் ...//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//ஹேமா கூறியது...
சந்ரு தமிழ்மொழி பற்றிய அக்கறையும் கவலையும் நிறைய இருக்கு உங்கள் பதிவிலும் மனதிலும்.சந்தோஷமாயிருக்கு சந்ரு.உங்களைப்போல இளைஞர்கள் தமிழில் அக்கறை இருக்கிறவரை தமிழின் வளைச்சிக்குக் குறைவேயில்லை.

மக்கள் தொலைக்காட்சியில் ஜேம்ஸ் வசந்தன் நடாத்தும் தமிழில் பேசலாம் வாருங்கள்.வந்தால் ஒரு பொற்காசு.
எப்படி!எங்கள் தாய்த்தமிழில் பேச பணம் கொடுத்து ஊக்கம் கொடுக்கிறார்கள்.ஆனால் அதிலும்
98%வீதமானோர் தோற்றே போகிறார்கள்.இது கவலைக்குரிய விஷயம்தான்.

ஆனால் ஈழத்தைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சனை குறைவு என்றே நினைக்கிறேன்.ஆனால் ஆங்கிலம் கலக்காமல் கதைக்கும் எங்களைப் பரிகாசம் செய்கிறார்களே.
என்னசெய்யலாம் சந்ரு !//


தமிழை தமிழை பயன்படுத்த நிறையபேர் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதுதான் உண்மை.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஹேமா

Admin said...

//நாணல் கூறியது...
நல்ல பதிவு...//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நாணல்..

நிலாமதி said...

காலபோக்கில் தமிழ் திசைமாறி விடுமோ என்று அச்சம் உள்ளது தமிழ் நாடில் வலது இடது என்று ஆட்டோ காரன் கூட ஆங்கிலத்தில் சொன்னால் தான் புரிந்து கொள்கிறான் தமிழும் ஆங்கிலமும் கலந்த வாழ்க்கையாய் போச்சு உங்களை போன்றவர்களின் முயற்சியால் தமிழ் வாழவேண்டும் .நல்லதொரு பதிவு பாராட்டுக்கள்.

Anonymous said...

வானொலி{அறிவிப்பாளர்கள்} சிங்கையில் 96.8ல் அழகாக தமிழ்
மணக்கிறது,தவழ்கிறது. உலக {சில}தொலைக்காட்சிகளில்தான்
கொடிகட்டிப் பறக்கிறது ஆங்கிலம் அதிலும் பேட்டி காண்பதென்றால்
சொல்லவே வேண்டாம் ஒன்றிரண்டு சொல்தான் தமிழ் வரும்.
திருந்துவார்களா?திருத்தமுடியுமா? என்னதான் இருந்தாலும்
நம்ம...பி.எச் அப்துல்ஹமீத் அவர்களை மறக்க முடியுமா?


ரி.கே

Anonymous said...

உங்கள் பதிவில் இருக்கும் அக்கறை ரொம்ப நல்லா இருக்கு. பிழையின்றி எழுதுத முயற்சி செய்யனும்... ம்ம்.. நன்றி

கும்மாச்சி said...

சந்த்ரு உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். இன்றைய ஊடகங்களுக்கு மொழியை கட்டிக் காப்பதில் பெரும் பங்கு இருக்கிறது.

ஸ்ரீராம். said...

மொழி பற்றி பேசும்போது சற்று உணர்ச்சி வசப்படுகிறோம் என்று தோன்றுகிறது. 'ழ'கர, 'ல'கர, 'ள'கர, உச்சரிப்பு சரியாக வராமல் பிரபல நடிகர்கள் முதல் 'தமிழை உயிராகக் கொண்ட' அரசியல் வாதிகள் வரை சிரமப் படுவதைப் பார்க்கிறோம். அது சரிதான். தெளிவாக, பிழை இல்லாமல் பேசவேண்டும் என்பதுவரை சரி. ஆனால், எல்லாவற்றையும் தமிழ்ப் படுத்துகிறேன் என்று 'படுத்துவது' சரியா? உங்கள் பதிவிலேயே 'இலத்திரனியல்' என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று எதனை பேருக்குப் புரியும்? மிக கவனமாக ஷ வைத தவிர்த்து ட வாக்கினால் போதுமா? மனிதன் இன்னும் இல்லை ஆடைகளோடு வாழவில்லை. காலத்தோடு சேர்ந்து சில மாறுதல்களை ஏற்றால்தான் வளர முடியும் என்பது என் பணிவான கருத்து.

வந்தியத்தேவன் said...

தமிழகத்துடன் ஒப்பிடும்போது நாம் எவ்வளவோ மேல். சில விஷச் சக்திகள் தமிழ் மொழியைக் கொல்வதற்கென்றே கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தூடகங்களை விட இலத்திரனியல் ஊடகங்களோ மொழியை வளர்க்க முன்னிற்கவேண்டும் ஆனால் இலங்கையில் இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தென்றல் கூட ஆங்கிலமோகத்திற்க்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆளாகிக்கொண்டுவ்ருகிறது. ஏனைய வானொலிகளை விமர்சிப்பதே பாவம். ஒரு வானொலி கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்றுக்கொண்டுவந்தாலும் சில அறிவிப்பாளினிகள் தமிழில் பேசுகின்றோம் என மொழியைக் கொல்கிறார்கள். தொலைக்காட்சிபற்றிச் சொல்லத்தேவையில்லை. தலைவிரிகோலமாக ஒரே ஒரு அறிவிப்பாளினியை வைத்து பெரும்பாலான நிகழ்ச்சிகளை கொல்கிறார்கள். நிறையப் பேசலாம் ஆனால் ஊடக நண்பர்கள் கோவித்துக்கொள்வார்கள். ஏனென்றால் குறைகளைச் சுட்டிக்காட்டினால் அவர்களுக்கு பிடிக்காது. ஒரு எழுத்தூடகத்தில் ஒரு தொலைக்காட்சியை ஒவ்வொரு வாரமும் கிழிப்பார்கள் ஆனால் அவர்கள் திருந்துகிறபாடாக இல்லை. காரணம் அந்த தொலைக்காட்சியின் முகாமையாளருக்கு தமிழ் தெரியாது.

வந்தியத்தேவன் said...

ரி,கே அவர்கள் சொன்னதுபோல சிங்கையில் மட்டுமல்ல மலேசியா வானொலிகளிலும் தமிழ் கொடிகட்டிப்பறக்கிறது. சில உலகத் தொலைக்காட்சிகளின் விபச்சாரத்தைப் பார்த்து இலங்கை இலத்திரனியல் ஊடகங்களும் அவர்களின் போக்குக்கு விபச்சாரம் செய்யவிழைகிறார்கள். முளையில் கிள்ளினால் நன்மை கிடைக்கும் இல்லையென்றால் அடுத்த தலைமுறை பன்னித் தமிழ் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்க்கு ஆளாகும்.

Anonymous said...

சந்ரு என்பது சரியா? சந்த்ரு என்றல்லவா இருக்கவேண்டும்..

--anvarsha..

குறை ஒன்றும் இல்லை !!! said...

தமிழோ, தமிழரோ கொலை செய்யப்படுவது பற்றி என்ன சொல்ல.....

நேசமித்ரன் said...

நல்ல சிந்தனை
நான் அன்வர்ஷா சொன்னதையும் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் தவறில்லையே..?

வால்பையன் said...

இணையத்தால் தான் தமிழ் கொஞ்சமாவது வாழ்கிறது!

படித்த பின் எழுத வாய்ப்பு கிடைக்காத எனக்கு வலைத்தளம் ஒரு வரப்பிரசாதம்!

தவறு ஆரம்பத்தில் வரத்தான் செய்யும் உங்களை போல் தமிழ் ஆர்வலர்கள் திருந்தினால் திருந்திகொள்வோம்!

பழமைபேசி said...

நன்றி... அவ்வப்போது இதுபோன்ற இடுகைகளைக் காணும் போது எழுதுவோருக்கும் இயல்பாய் தமிழ் வந்துவிடும்.

அஜுவத் said...

சாதாரணமாக பேசும் போது மொழிநடை வேறுபடுகின்றது என்றால் செய்திவாசிப்பாளர்கள் கூட தமிழை கொலை செய்கிறார்கள் பாருங்களேன்.

Beski said...

நல்ல கருத்துக்கள்.

மற்றவர்களை என்ன சொல்ல... நாம் நம் நடையில் கொஞ்சம் முயற்சி செய்வோம்.

Beski said...

//
உங்கள் கருத்துரை சேமிக்கப்பட்டது.
தளத்தில் உங்கள் கருத்துரை தோன்றுவதற்கு சில நிமிடங்கள் ஆகலாம். பின் தடமறிதல் கருத்துரை...

குழுவிலகவும்

22 கருத்துரைகள்

இந்த விண்டோவை மூடுக

கருத்துரை வடிவத்திற்கு தாவவும்

ஒரு அடையாளத்தைத் தேர்வு செய்க

வெளியேறு

பின் தடமறிதல் கருத்துரைகள்

பெயரில்லா
//

சிலர் பேச மட்டுமே செய்வர். பரவாயில்லை, நீங்கள் செயலிலும் காட்டுகிறீர்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//பழமைபேசி சொன்னது…

நன்றி... அவ்வப்போது இதுபோன்ற இடுகைகளைக் காணும் போது எழுதுவோருக்கும் இயல்பாய் தமிழ் வந்துவிடும்.//

வழிமொழிகின்றேன்...

ஆ.ஞானசேகரன் said...

நல்ல இடுகை நண்பரே!... நானும் நல்ல தமிழில் எழுத முயற்சிக்கின்றேன்... 15 வருடங்களுக்கு பின் தமிழில் அதுவும் இணையத்தில் எழுதுகின்றேன். பிழைகள் வருகின்றது.. பிழையின்றி எழுத முயற்சிக்கின்றேன்....

Maximum India said...

அன்புள்ள சந்துரு

தமிழை வளர்க்க வில்லையென்றாலும் தமிழை கொலை அதுவும் தமிழர்களே கொலை செய்யக் கூடாது என்ற உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளத் தக்கது.

அதே சமயம், தமிழ் படுத்துகிறோம் என்ற போர்வையில் ஏற்கனவே வழக்கத்தில் உள்ள தமிழ் சொற்களை சிலர் புதிதாக மாற்றி அமைப்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.

மேலும் புதிய கருத்துக்கள் தமிழுக்குள் நுழையும் போது, அந்த கருத்துக்கள் உருவான மொழிச்சொற்களை பயன்படுத்துவதில் தவறில்லை. கருத்துக்கள் தமிழருக்கும் நன்கு தெளிவான பிறகு அதற்கான தமிழ் சொற்கள் தானாகவே உருவாகி விடும். கருத்துக்கள் தெளிவடையும் முன்னரே அவற்றுக்கான தமிழ் சொற்களை திணிக்க முனைவது ஒருவித தெளிவற்ற நிலையையே உருவாக்கும்.

உதாரணத்திற்கு பொருளாதாரம் பற்றி அதிகம் எழுதும் நான், ஒவ்வொரு பொருளாதார கருத்துக்கும் தமிழ் வார்த்தை தேடிக் கொண்டிருந்தால், எழுத வந்ததே மறந்து போய் விடும் அபாயம் உள்ளது. எனவே, முதலில், பாரதி சொன்னபடி திக்கு எட்டிலும் இருந்து பல கலைகள் தமிழுக்கு கொண்டு வந்து சேர்ப்போம். அந்த கலைகள் தமிழர்களிடம் வளர்ந்தால் தமிழ் தானாகவே வளர்ந்து விடும்.

நன்றி.

Unknown said...

நல்ல பதிவு.....

Suresh said...

Miga arumaiyana pathivu ennaiyai nan sariparthkkola uthaviya pathivu

Indraya sulnilaigalukku thevaiyana pathivum kuda.. Here tamil font problem enna seiya intha idukaikku tamil la than type pananum nu nenachane

Suresh Kumar said...

நல்ல அருமையான பதிவு அறிய தந்ததற்கு நன்றிகள் இனி தொடர்ந்து உங்கள் பதிவை படிப்பேன் .

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.வாழ்த்துக்கள்.

//ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை வெதுப்பகம், தொடருந்து, உந்துருளி, மகிழுந்து போன்ற சொற்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக்கப் பட்டது ஊடகங்களால்தான் ஏனைய சொற்களையும் மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்துவதொடு தமிழ் மொழியினை ஊடங்களால் வளர்க்க முடியும் என்பதே உண்மை//

உண்மையான உண்மை.

ARV Loshan said...

இப்போதெல்லாம் தமிழ் கொலை என்று பேச்சு வந்தாலே வானொலி தொலைக்காட்சிகளைப் பந்தாடிப் பாய்வது ஒரு வழக்கமாகிப் போய்விட்டது. இதிலும் உண்மை இல்லாமல் இல்லை!

தனிப்பட்ட ரீதியில் நான் முடியுமானவரை தமிழ்கொலைகளில் ஈடுபடுவதில்லை. என் சார்ந்தவர்களையும் கூடுமானவரை திருத்தி சீர்ப்படுத்திக் கொண்டே இருக்கிறேன். ஆனால் அது மிக சிரமமான காரியம்.

இப்போதெல்லாம் நேர்முகப் பரீட்சைகள் குரல் தேர்வுகளில் செம்மையான உச்சரிப்புடையோரையும் தமிழறிவும் உணர்வும் கொண்டவர்களை தேர்ந்தெடுப்பதே பெரும் முயற்சியுடைய காரியமாக இருக்கிறது.

நண்பா வந்தியத்தேவா – என்னைப் பற்றித் தெரியும் தானே... நான் விமர்சனங்களை சந்திக்கத் தயங்காதவன்..அவை நேர்மை உண்மையாக இருக்கும் பட்சத்தில.

தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது ஓத்துக்கொண்டு திருத்திக் கொள்ளும் ஒரு சீர்மையான கலாசாரத்தில் நம்பிக்கையுள்ளவன் நான்.

வானொலியில் பேச்சுத் தமிழைப் பயன்படுத்தினாலும் அதிலும் கூட உச்சரிப்பில் மிக்க கவனம் செலுத்தவேண்டும் என்பதை நான் முன்பு சூரியனைத் தலைமை தாங்கி நடத்தியபோதும் இப்போது வெற்றிக்கு முகாமையாளராக இருக்கும் போதும் அனைவருக்கும் வலியுறுத்தி வருகிறேன்.

எனினும் ஆங்கிலக் கலப்பு பல இடங்களில் அவசியம். அத்தியாவசியம். வேண்டுமானால் அறிவிப்பாளர்களில் சிரேஷ்டர் அனுபவம் வாய்ந்தவர்; முதன்மையானவர்; என்று நாம் அனைவரும் ஏற்கின்ற திரு அப்துல் ஹமீத் அவர்களைக் கேளுங்கள்.

சில சொற்களைக் கஷ்டப்படுத்தித் தமிழ்ப்படுத்தி - படுத்தாமல் அவ்வவ்வாறே ஆங்கிலத்தில் பயன்படுத்தவது இலகுவானது.. விளங்கக் கூடியது.

இல்லையெனில் தமிழ் செந்தமிழாக அன்றி கொடுந்தமிழாகிவிடும்.

Hi, Byeபோன்ற அனாவசிய சொற்களையோ...வேண்டுமென்றே வலிந்து புகுத்தப்படும் சில Fashion சொற்களையோ நான் சொல்லவில்லை.

சந்துரு நல்லதொரு விஷயத்தை சொல்லியுள்ளீர்கள்... ஒரு இளம் ஒலிபரப்பாளர் இதுபற்றி சிந்தித்திருப்பது மகிழ்ச்சி & நிம்மதி.

ஊடகவியலாளர்களின் இது சம்பந்தமான போக்கு பற்றி எனது மனக் குமுறல்களை வெளிப்படையாக விரைவில் கொட்டுவேன்..பதிவாக

Admin said...

//நிலாமதி சொன்னது…
காலபோக்கில் தமிழ் திசைமாறி விடுமோ என்று அச்சம் உள்ளது தமிழ் நாடில் வலது இடது என்று ஆட்டோ காரன் கூட ஆங்கிலத்தில் சொன்னால் தான் புரிந்து கொள்கிறான் தமிழும் ஆங்கிலமும் கலந்த வாழ்க்கையாய் போச்சு உங்களை போன்றவர்களின் முயற்சியால் தமிழ் வாழவேண்டும் .நல்லதொரு பதிவு பாராட்டுக்கள்.//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நிலாமதி

Admin said...

//பெயரில்லா சொன்னது…
வானொலி{அறிவிப்பாளர்கள்} சிங்கையில் 96.8ல் அழகாக தமிழ்
மணக்கிறது,தவழ்கிறது. உலக {சில}தொலைக்காட்சிகளில்தான்
கொடிகட்டிப் பறக்கிறது ஆங்கிலம் அதிலும் பேட்டி காண்பதென்றால்
சொல்லவே வேண்டாம் ஒன்றிரண்டு சொல்தான் தமிழ் வரும்.
திருந்துவார்களா?திருத்தமுடியுமா? என்னதான் இருந்தாலும்
நம்ம...பி.எச் அப்துல்ஹமீத் அவர்களை மறக்க முடியுமா?


ரி.கே//

பி.எச் அப்துல்ஹமீத் அவர்கள் எங்களுக்கெல்லாம் தமிழ் உச்சரிப்பை கற்றுத்தந்தவர் என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம்..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ரி.கே

Admin said...

//மயில் சொன்னது…
உங்கள் பதிவில் இருக்கும் அக்கறை ரொம்ப நல்லா இருக்கு. பிழையின்றி எழுதுத முயற்சி செய்யனும்... ம்ம்.. நன்றி//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மயில்

Admin said...

//கும்மாச்சி சொன்னது…
சந்த்ரு உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். இன்றைய ஊடகங்களுக்கு மொழியை கட்டிக் காப்பதில் பெரும் பங்கு இருக்கிறது.//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கும்மாச்சி...

சப்ராஸ் அபூ பக்கர் said...

அருமையான பதிவு சந்ரு, ஆனால் இன்னும் ஊடகங்களில் தமிழ் கொலையாளிகள் இருப்பது தான் மனக் கவலையான விடயமாக இருக்கிறது... திருத்துவார்கள், திருந்துவார்கள் என நினைக்கிறேன்....

வாழ்த்துக்கள் சந்ரு.....

Admin said...

//ஸ்ரீராம். சொன்னது…
மொழி பற்றி பேசும்போது சற்று உணர்ச்சி வசப்படுகிறோம் என்று தோன்றுகிறது. 'ழ'கர, 'ல'கர, 'ள'கர, உச்சரிப்பு சரியாக வராமல் பிரபல நடிகர்கள் முதல் 'தமிழை உயிராகக் கொண்ட' அரசியல் வாதிகள் வரை சிரமப் படுவதைப் பார்க்கிறோம். அது சரிதான். தெளிவாக, பிழை இல்லாமல் பேசவேண்டும் என்பதுவரை சரி. ஆனால், எல்லாவற்றையும் தமிழ்ப் படுத்துகிறேன் என்று 'படுத்துவது' சரியா? உங்கள் பதிவிலேயே 'இலத்திரனியல்' என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று எதனை பேருக்குப் புரியும்? மிக கவனமாக ஷ வைத தவிர்த்து ட வாக்கினால் போதுமா? மனிதன் இன்னும் இல்லை ஆடைகளோடு வாழவில்லை. காலத்தோடு சேர்ந்து சில மாறுதல்களை ஏற்றால்தான் வளர முடியும் என்பது என் பணிவான கருத்து//

நாகரிகம் மாறுகின்றது என்பதற்காக எமது பாரம்பரியங்களையும், தமிழின் தனித்துவங்களையும் தொலைப்பதா... உங்களுக்கான் பதில்கள் எனது அடுத்த பதிவில் எதிர் பாருங்கள்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
ஸ்ரீராம்..

Admin said...

///வந்தியத்தேவன் சொன்னது…
தமிழகத்துடன் ஒப்பிடும்போது நாம் எவ்வளவோ மேல். சில விஷச் சக்திகள் தமிழ் மொழியைக் கொல்வதற்கென்றே கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தூடகங்களை விட இலத்திரனியல் ஊடகங்களோ மொழியை வளர்க்க முன்னிற்கவேண்டும் ஆனால் இலங்கையில் இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தென்றல் கூட ஆங்கிலமோகத்திற்க்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆளாகிக்கொண்டுவ்ருகிறது. ஏனைய வானொலிகளை விமர்சிப்பதே பாவம். ஒரு வானொலி கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்றுக்கொண்டுவந்தாலும் சில அறிவிப்பாளினிகள் தமிழில் பேசுகின்றோம் என மொழியைக் கொல்கிறார்கள். தொலைக்காட்சிபற்றிச் சொல்லத்தேவையில்லை. தலைவிரிகோலமாக ஒரே ஒரு அறிவிப்பாளினியை வைத்து பெரும்பாலான நிகழ்ச்சிகளை கொல்கிறார்கள். நிறையப் பேசலாம் ஆனால் ஊடக நண்பர்கள் கோவித்துக்கொள்வார்கள். ஏனென்றால் குறைகளைச் சுட்டிக்காட்டினால் அவர்களுக்கு பிடிக்காது. ஒரு எழுத்தூடகத்தில் ஒரு தொலைக்காட்சியை ஒவ்வொரு வாரமும் கிழிப்பார்கள் ஆனால் அவர்கள் திருந்துகிறபாடாக இல்லை. காரணம் அந்த தொலைக்காட்சியின் முகாமையாளருக்கு தமிழ் தெரியாது.//

உங்களுக்கான் பதில்கள் எனது அடுத்த பதிவில் எதிர் பாருங்கள்...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
வந்தியத்தேவன்

Admin said...

//வந்தியத்தேவன் சொன்னது…
ரி,கே அவர்கள் சொன்னதுபோல சிங்கையில் மட்டுமல்ல மலேசியா வானொலிகளிலும் தமிழ் கொடிகட்டிப்பறக்கிறது. சில உலகத் தொலைக்காட்சிகளின் விபச்சாரத்தைப் பார்த்து இலங்கை இலத்திரனியல் ஊடகங்களும் அவர்களின் போக்குக்கு விபச்சாரம் செய்யவிழைகிறார்கள். முளையில் கிள்ளினால் நன்மை கிடைக்கும் இல்லையென்றால் அடுத்த தலைமுறை பன்னித் தமிழ் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்க்கு ஆளாகும்//


சிங்கை, மலேசியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் சில ஒலிபரப்பாளர்கள் தமிழை வளர்ப்பதிலே ஈடுபடுகின்றார்கள் என்பது மட்டும் உண்மையே...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வந்தியத்தேவன்..

வந்தியத்தேவன் said...

//LOSHAN சொன்னது…
நண்பா வந்தியத்தேவா – என்னைப் பற்றித் தெரியும் தானே... நான் விமர்சனங்களை சந்திக்கத் தயங்காதவன்..அவை நேர்மை உண்மையாக இருக்கும் பட்சத்தில.//

தெரியும் தெரியும் அதுதான் ஒருவரியில் உங்கள் ஊடகத்தில் இருப்பவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினேன். ஒருமுறை அல்லது இருமுறை ஒரு தவறு நடந்தால் பரவாயில்லை ஆனால் அடிக்கடி ஒரே தவறைச் சிலர் விடுகிறார்கள். முற்றுமுழுதான செந்தமிழ்ச் நிகழ்ச்சிகள் நாம் கேட்கவில்லை. ஹாய், பாய் பைன் தேவையா? அதே நேரம் உங்கள் வானொலிப்பெட்டியின் சத்தத்தைக் குறையுங்கள் என பல அறிவிப்பாளர்கள் அழகாக எடுத்துரைக்கும்போது சில ரேடியோ என்பார்கள், ஒரு சில ஆங்கிலச் சொற்கள் மொழியுடன் கலந்துவிட்டன அவற்றை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் இந்திய ஊடகங்களைப் பார்த்து யாருக்கு இந்தப்பாடல் டெலிகேட் செய்கிறீர்கள் என ஒரு தொலைக்காட்சியில் ஒருவர் கேட்கிறார். தொலைக்காட்சியை உடைக்கத்தான் மனம் வரும். சந்ரு கோடுபோட்டிருக்கிறார். ஊடகங்களில் நிகழும் மொழிக்கொலைகள் பற்றி சில நாட்களில் எழுதுகின்றேன். உங்கள் கருத்துகளை அங்கேயும் தெரிவியுங்கள். பின்னூட்டத்தில் முழுவதுமாக எழுதினால் பலரிடம் சிலவேளைகள் சென்றடையாது.

வந்தியத்தேவன் said...

//சந்ரு கூறியது...

சிங்கை, மலேசியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் சில ஒலிபரப்பாளர்கள் தமிழை வளர்ப்பதிலே ஈடுபடுகின்றார்கள் என்பது மட்டும் உண்மையே... //

நிச்சயமாக எம்மவர்கள் தான் அதில் முன்னோடிகளாக இருந்தார்கள். முன்னர் பலராக இருந்தது இப்போ சிலராக மாறிவிட்டது ஆகவே சிலரால் நம் தமிழ் இலங்கையிலும் கொல்லப்படுகிறது.

Admin said...

//பெயரில்லா சொன்னது…
சந்ரு என்பது சரியா? சந்த்ரு என்றல்லவா இருக்கவேண்டும்..

-anvarsha..//

என்னுடைய பெயர் சந்ரு என்பதே சரி நான் சிறு வயது முதல் இப்படியே எழுதுகிறேன். நாம் ஆங்கிலத்தில் shanthru என்று எழுதி தமிழுக்கு மாற்றினால் சந்த்ரு என்றே வரும். நான் இதற்காக என் பெயரில் மாற்றம் செய்ய விரும்பவில்லை....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி anvarsha..

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…
தமிழோ, தமிழரோ கொலை செய்யப்படுவது பற்றி என்ன சொல்ல.....//

தமிழ், தமிழர் இரண்டும் தமிழரால் கொலை செய்யப்படுவதுதான் கவலைக்குரிய விடயம். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//நேசமித்ரன் சொன்னது…
நல்ல சிந்தனை
நான் அன்வர்ஷா சொன்னதையும் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் தவறில்லையே..?//


என்னுடைய பெயர் சந்ரு என்பதே சரி நான் சிறு வயது முதல் இப்படியே எழுதுகிறேன். நாம் ஆங்கிலத்தில் shanthru என்று எழுதி தமிழுக்கு மாற்றினால் சந்த்ரு என்றே வரும். நான் இதற்காக என் பெயரில் மாற்றம் செய்ய விரும்பவில்லை....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//வால்பையன் சொன்னது…
இணையத்தால் தான் தமிழ் கொஞ்சமாவது வாழ்கிறது!

படித்த பின் எழுத வாய்ப்பு கிடைக்காத எனக்கு வலைத்தளம் ஒரு வரப்பிரசாதம்!

தவறு ஆரம்பத்தில் வரத்தான் செய்யும் உங்களை போல் தமிழ் ஆர்வலர்கள் திருந்தினால் திருந்திகொள்வோம்!//


நீங்கள் சொல்வதுபோல் இன்று வலையுலகமும் மாற்றங்களை அதாவது தமிழை வளர்ப்பதிலே பங்கு வகிக்கின்றது

விடயம். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//பழமைபேசி சொன்னது…
நன்றி... அவ்வப்போது இதுபோன்ற இடுகைகளைக் காணும் போது எழுதுவோருக்கும் இயல்பாய் தமிழ் வந்துவிடும்//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
நண்பா...

Admin said...

//அஜுவத் சொன்னது…
சாதாரணமாக பேசும் போது மொழிநடை வேறுபடுகின்றது என்றால் செய்திவாசிப்பாளர்கள் கூட தமிழை கொலை செய்கிறார்கள் பாருங்களேன்//

உங்களுக்கான் பதில்கள் எனது அடுத்த பதிவில் எதிர் பாருங்கள்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
நண்பா...

Admin said...

//எவனோ ஒருவன் சொன்னது…
நல்ல கருத்துக்கள்.

மற்றவர்களை என்ன சொல்ல... நாம் நம் நடையில் கொஞ்சம் முயற்சி செய்வோம்.//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
நண்பா...

Admin said...

//எவனோ ஒருவன் சொன்னது…
//
உங்கள் கருத்துரை சேமிக்கப்பட்டது.
தளத்தில் உங்கள் கருத்துரை தோன்றுவதற்கு சில நிமிடங்கள் ஆகலாம். பின் தடமறிதல் கருத்துரை...

குழுவிலகவும்

22 கருத்துரைகள்

இந்த விண்டோவை மூடுக

கருத்துரை வடிவத்திற்கு தாவவும்

ஒரு அடையாளத்தைத் தேர்வு செய்க

வெளியேறு

பின் தடமறிதல் கருத்துரைகள்

பெயரில்லா
//

சிலர் பேச மட்டுமே செய்வர். பரவாயில்லை, நீங்கள் செயலிலும் காட்டுகிறீர்கள்.//

இன்று வலைப்பதிவுகளிலே நீங்கள் குரிப்பிடுவதுபோல் பல தமிழ் சொற்களை பாவிக்கின்றோம் இந்த சொற்களை எங்களால் உணர முடியும் போது ஏன் ஏனைய சொற்களையும் நாம் பயன் படுத்த முடியாது...

விடயம். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//ஆ.ஞானசேகரன் சொன்னது…
//பழமைபேசி சொன்னது…

நன்றி... அவ்வப்போது இதுபோன்ற இடுகைகளைக் காணும் போது எழுதுவோருக்கும் இயல்பாய் தமிழ் வந்துவிடும்.//

வழிமொழிகின்றேன்...

July 27, 2009 1:02 PM
ஆ.ஞானசேகரன் சொன்னது…
நல்ல இடுகை நண்பரே!... நானும் நல்ல தமிழில் எழுத முயற்சிக்கின்றேன்... 15 வருடங்களுக்கு பின் தமிழில் அதுவும் இணையத்தில் எழுதுகின்றேன். பிழைகள் வருகின்றது.. பிழையின்றி எழுத முயற்சிக்கின்றேன்....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//Maximum India சொன்னது…
அன்புள்ள சந்துரு

தமிழை வளர்க்க வில்லையென்றாலும் தமிழை கொலை அதுவும் தமிழர்களே கொலை செய்யக் கூடாது என்ற உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளத் தக்கது.

அதே சமயம், தமிழ் படுத்துகிறோம் என்ற போர்வையில் ஏற்கனவே வழக்கத்தில் உள்ள தமிழ் சொற்களை சிலர் புதிதாக மாற்றி அமைப்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.

மேலும் புதிய கருத்துக்கள் தமிழுக்குள் நுழையும் போது, அந்த கருத்துக்கள் உருவான மொழிச்சொற்களை பயன்படுத்துவதில் தவறில்லை. கருத்துக்கள் தமிழருக்கும் நன்கு தெளிவான பிறகு அதற்கான தமிழ் சொற்கள் தானாகவே உருவாகி விடும். கருத்துக்கள் தெளிவடையும் முன்னரே அவற்றுக்கான தமிழ் சொற்களை திணிக்க முனைவது ஒருவித தெளிவற்ற நிலையையே உருவாக்கும்.

உதாரணத்திற்கு பொருளாதாரம் பற்றி அதிகம் எழுதும் நான், ஒவ்வொரு பொருளாதார கருத்துக்கும் தமிழ் வார்த்தை தேடிக் கொண்டிருந்தால், எழுத வந்ததே மறந்து போய் விடும் அபாயம் உள்ளது. எனவே, முதலில், பாரதி சொன்னபடி திக்கு எட்டிலும் இருந்து பல கலைகள் தமிழுக்கு கொண்டு வந்து சேர்ப்போம். அந்த கலைகள் தமிழர்களிடம் வளர்ந்தால் தமிழ் தானாகவே வளர்ந்து விடும்.

நன்றி.//

உங்களுக்குரிய எனது பதிலை அடுத்த இடுகையில் எதிர் பாருங்கள்....

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//லவ்டேல் மேடி சொன்னது…
நல்ல பதிவு.....//


வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி

Admin said...

//Suresh சொன்னது…
Miga arumaiyana pathivu ennaiyai nan sariparthkkola uthaviya pathivu

Indraya sulnilaigalukku thevaiyana pathivum kuda.. Here tamil font problem enna seiya intha idukaikku tamil la than type pananum nu nenachane//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//Suresh Kumar சொன்னது…
நல்ல அருமையான பதிவு அறிய தந்ததற்கு நன்றிகள் இனி தொடர்ந்து உங்கள் பதிவை படிப்பேன் .//


வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//துபாய் ராஜா சொன்னது…
நல்லதொரு பகிர்வு.வாழ்த்துக்கள்.

//ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை வெதுப்பகம், தொடருந்து, உந்துருளி, மகிழுந்து போன்ற சொற்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக்கப் பட்டது ஊடகங்களால்தான் ஏனைய சொற்களையும் மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்துவதொடு தமிழ் மொழியினை ஊடங்களால் வளர்க்க முடியும் என்பதே உண்மை//


வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

சிநேகிதன் அக்பர் said...

கண்டிப்பாக சரிசெய்ய வேண்டிய விசயம்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமையான பதிவு. என்னை அழைத்ததற்கு நன்றி. உங்கள் மற்றைய பதிவுகளை பின்னர் வந்து படிக்கிறேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலக்கல் பதிவு

Admin said...

//LOSHAN சொன்னது…
இப்போதெல்லாம் தமிழ் கொலை என்று பேச்சு வந்தாலே வானொலி தொலைக்காட்சிகளைப் பந்தாடிப் பாய்வது ஒரு வழக்கமாகிப் போய்விட்டது. இதிலும் உண்மை இல்லாமல் இல்லை!

தனிப்பட்ட ரீதியில் நான் முடியுமானவரை தமிழ்கொலைகளில் ஈடுபடுவதில்லை. என் சார்ந்தவர்களையும் கூடுமானவரை திருத்தி சீர்ப்படுத்திக் கொண்டே இருக்கிறேன். ஆனால் அது மிக சிரமமான காரியம்.

இப்போதெல்லாம் நேர்முகப் பரீட்சைகள் குரல் தேர்வுகளில் செம்மையான உச்சரிப்புடையோரையும் தமிழறிவும் உணர்வும் கொண்டவர்களை தேர்ந்தெடுப்பதே பெரும் முயற்சியுடைய காரியமாக இருக்கிறது.

நண்பா வந்தியத்தேவா – என்னைப் பற்றித் தெரியும் தானே... நான் விமர்சனங்களை சந்திக்கத் தயங்காதவன்..அவை நேர்மை உண்மையாக இருக்கும் பட்சத்தில.

தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது ஓத்துக்கொண்டு திருத்திக் கொள்ளும் ஒரு சீர்மையான கலாசாரத்தில் நம்பிக்கையுள்ளவன் நான்.

வானொலியில் பேச்சுத் தமிழைப் பயன்படுத்தினாலும் அதிலும் கூட உச்சரிப்பில் மிக்க கவனம் செலுத்தவேண்டும் என்பதை நான் முன்பு சூரியனைத் தலைமை தாங்கி நடத்தியபோதும் இப்போது வெற்றிக்கு முகாமையாளராக இருக்கும் போதும் அனைவருக்கும் வலியுறுத்தி வருகிறேன்.

எனினும் ஆங்கிலக் கலப்பு பல இடங்களில் அவசியம். அத்தியாவசியம். வேண்டுமானால் அறிவிப்பாளர்களில் சிரேஷ்டர் அனுபவம் வாய்ந்தவர்; முதன்மையானவர்; என்று நாம் அனைவரும் ஏற்கின்ற திரு அப்துல் ஹமீத் அவர்களைக் கேளுங்கள்.

சில சொற்களைக் கஷ்டப்படுத்தித் தமிழ்ப்படுத்தி - படுத்தாமல் அவ்வவ்வாறே ஆங்கிலத்தில் பயன்படுத்தவது இலகுவானது.. விளங்கக் கூடியது.

இல்லையெனில் தமிழ் செந்தமிழாக அன்றி கொடுந்தமிழாகிவிடும்.

Hi, Byeபோன்ற அனாவசிய சொற்களையோ...வேண்டுமென்றே வலிந்து புகுத்தப்படும் சில Fashion சொற்களையோ நான் சொல்லவில்லை.

சந்துரு நல்லதொரு விஷயத்தை சொல்லியுள்ளீர்கள்... ஒரு இளம் ஒலிபரப்பாளர் இதுபற்றி சிந்தித்திருப்பது மகிழ்ச்சி & நிம்மதி.

ஊடகவியலாளர்களின் இது சம்பந்தமான போக்கு பற்றி எனது மனக் குமுறல்களை வெளிப்படையாக விரைவில் கொட்டுவேன்..பதிவாக//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா...

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…
அருமையான பதிவு சந்ரு, ஆனால் இன்னும் ஊடகங்களில் தமிழ் கொலையாளிகள் இருப்பது தான் மனக் கவலையான விடயமாக இருக்கிறது... திருத்துவார்கள், திருந்துவார்கள் என நினைக்கிறேன்....

வாழ்த்துக்கள் சந்ரு.....//

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

மீண்டும் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வந்தியத்தேவன்....

Admin said...

//அக்பர் சொன்னது…
கண்டிப்பாக சரிசெய்ய வேண்டிய விசயம்//

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா

Admin said...

//ஜெஸ்வந்தி சொன்னது…
அருமையான பதிவு. என்னை அழைத்ததற்கு நன்றி. உங்கள் மற்றைய பதிவுகளை பின்னர் வந்து படிக்கிறேன்//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜெஸ்வந்தி

Admin said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…
கலக்கல் பதிவு//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா

jothi said...

//"பிலைகள்" இருக்கிறது திருத்துங்கள்என்று//

நல்ல வேளை "பிள்ளைகள்" என்று சொல்லவில்லையே சந்தோஷப்படுங்கள்

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
http://sashiga.blogspot.com/2009/07/blog-post_28.html.pls take it!!//

இப்பவே வந்திட்டா போச்சு...

வருகைக்கு நன்றி சத்தியா

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்....
http://yellorumyellamum.blogspot.com/2009/07/blog-post_28.html//


ஐயோ..... அதெல்லாம் வேண்டாம். நான் இப்பவே வந்திடுறேன்.

Admin said...

// jothi கூறியது...
//"பிலைகள்" இருக்கிறது திருத்துங்கள்என்று//

நல்ல வேளை "பிள்ளைகள்" என்று சொல்லவில்லையே சந்தோஷப்படுங்கள்//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி jothi...

Nathanjagk said...

அன்பு சந்ரு,
சீரிய முயற்சி. வாழ்த்துக்கள்! நான் நினைப்பது,
1. மொழி மற்ற மொழிகளோடு இணக்கமாக இருப்பது அதன் வளர்ச்சியைக் குறிக்கும்
2. பேச்சுத் தமிழில் மொழிக்கலப்பை பாவேந்தர் பாரதிதாசன் ஆதரித்திருக்கிறார்!!
3. இலத்திரனியல் என்றால் என்ன? இந்த வார்த்தையின் வயது என்ன? இந்தமாதிரி அருஞ்சொற்பொருள்களின் அகராதி எங்கு கிடைக்கும்? இணையத்தில் ஓசியில் கிடைக்குமா? (​மெர்ஸலாகிறது-க்கு இணையத்தில விளக்கம், அர்த்தம் கிடைக்குது)
3.5. தங்கள் கருத்துக்கு மாற்றாகவோ, இல்லை மனதைப் புண்படுத்துவதாகவோ இருப்பின் இதற்கு மேல் படிக்காதீங்க! எனக்கு மொழித் தூய்மையை விட சந்ருவின் அன்புதான் முக்கியம்.
4. //மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது// ​நல்ல கருத்து. ஆனால், ஊடகம் இந்த அளவுகோலில் செயல்பட்டால் ​மொழியறிவு இருக்கும் தொழிலறிவு வளராது. (flightக்கு தமிழ் வார்த்தை இருக்கு, cockpit, fins, rudder, propeller. kinetic velocity, aerofoil, போன்ற தொழில் நுட்பங்களுக்கு புதுசாத்தான் உருவாக்கணும் - அதிலேயும் ஒரே அர்த்ததுக்கு பல பிரயோகங்கள் வர வாய்ப்புள்ளது) ஊடகங்கள் என்பதைவிட கல்விமுறை என்பதே மொழிச்செழுமைக்கு முக்கியமானது ​
5. யெஸ். மொழிப்பாதுகாப்பு என்று யாரும் மந்திரித்துவிட்டால், நம்பிடாதீங்க சந்ரு. மொழி யாராலும் பாதுகாக்கபட வேண்டியதில்லை. ​செழுமைப்படுத்தப்பட வேண்டியது.
5.1. ஸாரி. எனக்கு அவ்வளவா சுத்தத் தமிழ்ல எழுதத் தெரியாது - வராது.
5.2. இதுமாதிரியான தமிழ்ல எழுதுனா படிக்கிறது ஈஸியா இருக்கும்னு நினைக்கிறேன்
5.3. ஒரு வார்த்தைய கொடுத்து இது அக்மார்க் தமிழ் வார்த்தைதான் தரப்பரிசோதனை ​செய்யவும் தெரியாது.
5.4. சந்திப்பிழைகளை(ச்?)) சந்திக்கிறேன் - இதுக்கும் இணையத்தில தேடுறேன் - தெரிந்தால் சொல்லவும்
5.5. சீரியஸ் இடுகையில லந்து பண்றான்னு நினைக்காதீங்க, இப்பவும் சந்ருவின் அன்புதான் முக்கியம்னு சொல்லிக்கிறேன்.. ​தொடரப் போறீங்களா!!?
(.....)

Nathanjagk said...

6. மொழிப்​பெயர்ப்புகளால கூட மொழி​செழுமையாகும்னு நினைக்கிறேன். என்னை தமிழிலில் ஆர்வமா இலக்கியத்தைப் படிக்கத் தூண்டியது, காமிக்ஸ் புத்தகங்கள் அப்புறம் ரஷ்ய இலக்கியங்கள்.
6.5 காமிக்ஸ்ல டெக்ஸ்வில்லர், ஹுப்ஹுப்ஹீரே, நவ்ஜோ, பிஸ்டல் பின் ரஷ்ய இலக்கியத்தில வர்ற கெழாக்குகள், வோட்கா, இனியாக்​போன்ற பதங்களும் ​பொருள்களும் பிற​மொழிக்கலப்புதானே? ஆனா இதை தவிர்த்து இந்த இலக்கியத்தை அணுக சாத்தியமான்னு தெரியலே.
7. ​மொழிக்கலப்புன்னா ஏன் இங்கிலீஷை மட்டும் நினைக்கிறோம்? சாவி (திறவுகோல்தான்) ஒரு டச்சு வார்த்தைன்னு கேள்விப்பட்டிருக்கேன்
8. நான் பொறியியல்... வேணாம் மெக்கானிக்கல் இன்ஜினீரிங் படிச்சிருக்கேன். இன்னும் ​மேற்படிப்பெல்லாம் படிக்க வேண்டியிருக்கு. முனைவர் பட்டம் வரைக்கும் கூட ​போகலாம்! இதுவரைக்கும் டிப்ளமோ தாண்டி தமிழ் பாடபுத்தகத்தில வந்ததில்ல (அந்த தமிழுக்கு இங்கிலீஷையே படிச்சுக்கலாம்) இந்த மாதிரி டெக்னிக்கல் படிப்புக்கு நான் இங்கிலீஷைதான் கட்டிண்டு அழணும். அப்படி தமிழ்ல இன்ஜினியரிங் பி. ஹெச்டி பண்ண வழியிருக்கா சொல்லுங்க?
8.1. எனக்கு(ம்) ழ,ல,ள உச்சரிப்பெல்லாம் சுத்தமா வராது. ​
8.2. ல - பிரச்சினையில்ல
8.3. குவாட்டர் மாதிரி அடிச்சிருந்தேன்னா ழ நழ்ழாவே வரும்
8.4. ள - யாராச்சும் பாடம் எடுத்தா உண்டு
8.5. எழுதும் போது எந்த பிரச்சினையும் இல்லை
9. நான் உன்னைய இங்கிலீஷ் படிக்க வேணாம்னு சொல்லலியேன்னு கேக்கறீங்கதானே? இப்படி பிற​மொழியில் பலவருஷம் படிச்சு, கேட்டு, எழுதிக்கிட்டு இருந்தா அந்த மொழி​யோட தாக்கம் தாய்மொழியிலும் வரத்தானே செய்யும்? இங்க யார அல்லது எத குத்தம் சொல்றது?

Nathanjagk said...

10. மொழி​பெயர்க்கிறவங்க ஏன் தொழில்நுட்பம் பக்கம் அதிக கவனம் எடுக்கிறதில்ல? நான் ஒரேயொரு ரஷ்ய மொழிப்​பெயர்ப்பு அறிவியல் புத்தகம் படிச்சிருக்கேன் (ரிலேட்டிவிட்டி பத்தி லெந்தாவு எழுதினது)
10.1. இந்த மொழிப் பெயர்ப்பு ஆளுகளுக்கு ஒரு ஆணியக் கூட சுத்தியல் வச்சு அடிக்கத் ​தெரியாது. அப்புறம் எப்படி டெக்னிகல் பக்கம் வருவாங்க?
10.2. அதுக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள், மொழியியல் ஆய்வாளர்கள் என ஒரு sync up ​வேணும். எப்ப / எப்படி சாத்தியப்படும்னு தெரியலே (நடந்திருந்தால் தெரியப்படுத்துக)
10.3. சைனாக்காரங்க நல்ல​வேளையா இங்கிலீஷ் இப்பத்தான் ஒழுங்கா கத்து, வாய் வழியா பேச டிரை பண்றாங்க. இத ஒரு நூற்றாண்டு முன்னாடியே செஞ்சிருந்தாங்கன்னா, ITல அவங்க நம்பர்.1 ஆயிருப்பாங்க. கம்ப்யூட்டர் இந்தியாவில இப்படிப் பரவியிருக்காது. நம்ம கருத்துக்களை போற​போக்கில இடுகையா போட சான்ஸே இருந்திருக்காது. வேணா எழுதி ஏதாவது பத்திரிக்கைக்கு போஸ்ட் பண்ணிட்டு நகத்தை கடிச்சிட்டு உக்காந்திருக்கலாம்.
10.4. பிற​மொழிக்கலப்பில்லாம எழுதறதும் பேசறதும் ஒரு வித்தையா எடுத்துச் செய்ய ஆரம்பிச்சவங்க நிறைய பேரு இலக்கியத்தில காணாம போயிருக்காங்க (பேரெல்லாம் தெரியாது - அந்தளவுக்கு காணாம போயிருக்காங்க..!)
10.5. எப்படிச் சொல்றேன்னா, வாசகனுக்கு இணக்கமான நடையில எழுதறவங்கதான் நிலைத்து நிற்கிறார்கள் (சுஜாதா எனக்குத் தெரிஞ்சு ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லாமா ஒரு கதை எழுதியிருக்காரு, என்ன பேரு சொல்லுங்க பாப்பம்? கி.ரா எழுத்து அப்படியே வட்டாரம் + பிற மொழிக்கலப்பு இருக்கு.. ஆனா இதைத் தவிர்த்திட்டு அந்த இலக்கியத்தை எழுத முடியுமா?)
10.6. மொழி​ஒரு சாதனம். நல்ல இலக்கியம்தான் ஒரு மொழியை மேம்படுத்தும்.
10.6.1. தயவுசெஞ்சு வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வராதீங்க - ஏன்னா என் கருத்து சுதந்திரம் இந்த பயத்தாலேயே பாதிக்கப்படுது (அ) பாதி செத்திடுது!
10.7. ஒரு வார்த்தையோட மூலம் என்னன்னு தேடிக்கிட்டு போனா.. வரலாறு, கல்வெட்டு, ​போர்-படையெடுப்பு, பிராகிருதி மொழி, பாலி, சமஸ்கிருதம், சரஸ்வதி ஆறுன்னு தாறுமாறா ஓடி எங்கியோ போயி நிக்க வேண்டியதா போயிடும்
10.8. ஆவணம், படிப்பு, ஆய்வு, சுயஅர்ப்பணிப்பு, தீவிரம், களப்பணி, பல்துறை அறிவு - இந்த மாதிரி எந்த கூறுகளும் இல்லாம தமிழ் பாதுகாப்பு - தூய்மைன்னு பேசறவங்க (10.6.1க்கு போயிட்டு வந்து தொடரவும்) தான் தமிழ் மொழியின் பேராபத்து. மொழிய வச்சு அரசியல் பண்றவங்கள நாமதான் அடையாளம் தெரிஞ்சுக்கணும்.
10.9. ஒரு மொழிக்கு மொழிக்கொலைங்கிறது பிற​மொழிக்கலப்பால வராது (அ. முத்துலிங்கம் எழுதின ஒரு கதை உயிர்மையில் வந்தது. படிச்சுப்பாருங்க) பிற மொழி பற்றிய அறிவு இல்லைங்கிறதுதான் தற்கொலைக்கு சமம்.
10.10. கடைசியா (அப்பாடா..!) ஒரு குட்டிக்கதை: ஒருத்தன் குளக்கரை பக்கமா புதையல் இருக்குன்னு தெரிஞ்சு பூமியத் தோண்ட ஆரம்பிச்சானாம்.​தோண்டுனான் ​தோண்டுனான் தோண்டிக்கிட்டே இருந்தானாம். அவன் பண்ணுனது பரவலா தோண்டாம ஒரே குழியையே ஆழமா தோண்டிக்கிட்டு இருந்ததுதான். கடைசிலே பாத்தா குழிதான் ஆழமாச்சு. புதையல் கிடைக்கலே. தோண்டுனது போதும்டா மேலே ஏறலாம்னு பாத்தா ​ரொம்ப ஆழமாயிருக்கு. கத்தி கத்தி பாத்தான். பாவம் யாருக்குமே கேக்கலே.

சத்ரியன் said...

//தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு...//

இதில் சிறு மாற்றம். தமிழில் பிற மொழி கலப்பு என்பது பன்னெடுங்காலமாகவே இருந்து வருவதாகவே தெரிகிறது. ஆனாலும், தற்போது ஆங்கிலமொழி சற்று கூடுதலாகவே ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருப்பதைவிட நம் தாய்மொழியின் சிறப்பை மிகமிக எளிமையாக இளைஞர்களிடம் (குறிப்பாக சிறுவர்களிடம்) கொண்டு சேர்க்க வேண்டியது நமது தலையாயக் கடமையாகக் கருத வேண்டும்.

முதலில், பெற்றோர்கள் மிகப்பெரும் தவற்றினைச் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். அடுத்த இடத்தைப் பிடிப்பவர்கள் நம் மொழி ஆசிரியர்கள். பெரும்பாலும், பாடசாலைகளில் ஒரு புள்ளி, கமா, தொடர்ப்புள்ளி...இப்படிப்பட்ட தவறுகளுக்கு மதிப்பெண் குறைப்பதோடல்லாமல், வகுப்பில் எழுப்பி நிறுத்தி ஆசிரியரே கேலி செய்யும் காட்சிகளும் அரங்கேறவேச் செய்கிறது.

இது போன்ற செயல்கள் சிறுவர்களின் மனத்தில் (மொழியின்பாலும்) ஒருவித வெறுப்புணர்வை உண்டாக்கி விடுகிறது.

என்னதான் என்றாலும் அடுத்தவர்களைக் குறைக்கூறுவதைத் தவிர்த்து நம் மொழியை செம்மையாக வைத்திருப்பது நமது கடமை.

உங்களின் ஆர்வம் மகிழ்ச்சியாய் இருக்கிறது ...சந்த்ரு.!

Post a Comment