Monday 12 March 2012

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு ஒரு பார்வை

கிழக்கு மாகாணசபை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல உள்ளூராட்சி மன்றங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு எதிர்வரும் 18 மார்ச் 2012 கல்லடி சிவானந்தா விளையாட்டர்கில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இம் மாநாடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியன் முதலாவது மாநாடு. இம் மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடு மட்டுமல்லாமல். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கும் கிழக்கு மக்களுக்கும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இவ் வேளையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் அதன் செயற்பாடுகள் இம் மாநாட்டின் மூலம் கட்சியின் பலம் தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது கிழக்கு மாகாணத்தை தலைமைத்துவமாகக் கொண்டு கிழக்கு மாகாண மக்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு கட்சியாக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். இக் கட்சி எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திலிருந்து விலகிச் செல்லாமல் கிழக்கு மாகாண மக்களின் தனித்துவக் கட்சியாக கிழக்கின் துரித அபிவிருத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இக் கட்சியானது பல சவால்களுக்கும் பல உயிர்ப்பலிகளுக்கும் மத்தியில் உருவாக்கப்பட்ட கட்சி. தற்பொது கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் துரித அபிவிருத்தித் திட்டங்கள் முதலமைச்சரின் தூர நோக்கிலான சிந்தனை செயற்பாடு கட்சியின் கொள்கைகள் என்பவற்றால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் கிழக்கிலே பலமான ஒரு கட்சியாக வேருன்றி வருகின்றனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்குக்கான ஒரு தலைமைத்துவம் வேண்டும் கிழக்கிற்கு தனியான ஒரு கட்சி வேண்டும் எனும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்சி. அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணசபை தேர்தலிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு கிழக்கு மாகாணசபையை கைப்பற்றியதுடன் பல உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றி கிழக்கு மாகாணசபை மூலம் கிழக்கு மாகாணம் தூரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகின்றது.

இக் கட்சியின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது தேசிய மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் இவ் வேளையில் கட்சியின் உருவாக்கத்திற்கு பக்க பலமாக இருந்து கிழக்கினதும் கட்சியினதும் முன்னேற்றத்தின் பக்க பலமாக இருந்து செயற்பட்ட படுகொலை செய்யப்பட்ட கட்சியின் முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன்(ரகு) அவர்கள் இவ் வேளையில் நினைவு கூரப்படவேண்டும். குமாரசாமி நந்தகோபன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டாலும் தற்போதைய கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரகாந்தன் அவர்கள் கட்சியை மக்கள் மயப்படுத்தும் முயற்சியில் பல திட்டங்களை செயற்படுத்தி வருகின்றார்.

கட்சி உருவாக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் கட்சிக்கு பெரும் வரவேற்பு இருந்தாலும் பின்னர் படிப்படியாக மக்கள் ஆதரவு குறைந்திருந்தது. இதற்கான காரணம் கருணா பிள்ளையான் இருவருக்குமிடையிலான கருத்து முரண்பாடும் பிரிவுமாகும். இதனை சாதகமாகப் பயன்படுத்திய தமிழ் ஊடகங்கள் கட்சி தொடர்பாகவும் முதலமைச்சர் தொடர்பாகவும் தவறான கருத்துக்களை வெளியிட்டன. கருணா அம்மான் புலிகள் அமைப்பிலிருந்து விலகி வந்தபோது அவர் பிரிவிற்கான காரணத்தை சொன்னபோது கிழக்கு மக்கள் அவரை 100 வீதம் நம்பினர். அவர் அன்று சொன்ன விடயங்கள் கிழக்கு மக்கள் வடக்கு தலைமைகளால் ஏமாற்றப்படுகின்றார்கள் கிழக்குக்கு ஒரு தலைமைத்துவம் வேண்டும் கிழக்கில் ஒரு கட்சி வேண்டும் என்று சொன்னவர் தனது நோக்கத்திலிருந்து விலகி அரசுடன் இணைந்து கொண்டதனால் மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியையும் கருணாவையும் ஒன்றென நினைத்துவிட்டனர்.

இது ஒரு புறமிருக்க கருணா அம்மானின் குழுவைச் சேர்ந்தவர்களின் அடாவடித்தனங்கள் மலிந்திருந்தன. அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எனும் பெயரில் இயங்கியவர்கள் என்பதனால் கருணா குழுவினர் செய்யும் அடாவடித்தனங்கள் அனைத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்தான் செய்கின்றனர் எனும் தப்பான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் இருந்தன. ஊடகங்களும் இதனை மிகப்படுத்தி பரப்புரை செய்ய ஆரம்பித்தன. இக்கால கட்டத்தில்தான் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றன அப்போது பல சவால்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிட்டாலும் 25 ஆயிரத்தக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தனர். இத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்டியிட்டிருக்க வில்லை எனில் முஸ்லிம்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்தும் அதிகரித்திருக்கும்.

தொடர்ந்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமது கட்சியினை வலுப்பெற செய்வதில் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். தமது கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பாக கட்சியின் ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் கட்சியானது முற்றிலும் மக்கள் மயப்படுத்தப்பட்டு மக்கள் கட்சியாக மாற்றம் பெற்றிருக்கின்றது. கட்சியில் கிழக்கைச் சேர்ந்த பல படித்த புத்தியீவிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் கட்சியில் உள்வாங்கப்பட்டு இளைஞர்களுக்கு பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

மறு புறத்திலே சர்வதேச ரீதியிலும் தமது கட்சியின் கொள்கைகள் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.அண்மையில் முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட குழுவினர் இரண்டுவார கால ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். பிரான்ஸ், ஜேர்மன், டென்மார்க் போன்ற நாடுகளில் வாழும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து தமது கட்சியின் கொள்கைகள நிலைப்பாடுகள் கிழக்கிலே இடம்பெற்று வரும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கின்றது.

இச்சந்திப்புக்களில் புலம்பெயர் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தமது பங்களிப்பினை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். அத்துடன் பல முக்கியமான விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டதாகவும் மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார். அத்துடன் தாம் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு தமக்கு கிடைத்ததாகவும் புலம்பெயர் கிழக்கு மாகாண மக்கள் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் எனும் நிலைப்பட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது ஒரு புறமிருக்க மத்திய கிழக்கு நாடுகளிலும் வாழும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களிடமும் கட்சியின் கொள்கைகள் நிலைப்பாடுகள் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாகவும் தெளிவு படத்தப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. கடந்த வருடம் கட்டாரில் கிழக்கு மாகாண தமிழர்கள் இருக்கும் இடங்களில் குறிப்பிட்ட சிலரால் கட்சியின் கொள்கைகள் நிலைப்பாடுகள் கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. கட்டாரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் இருப்பதாவும் இவர்களால் இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.

முதலமைச்சரின் அபிவிருத்தித் திட்டங்களின் தொகுப்பாக வெளியிடப்பட்ட இறுவட்டக்கள் இரண்டு பகுதிகளும் கட்டாரில் கிழக்கு மாகாணத்தவர்கள் வாழும் இடங்களில் அதிகம் உலாவுவதாகவும் அறிய முடிகின்றது.தொடர்ந்து கட்சியை மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அறிய முடிகின்றது.

இவ்வாறு சென்று கொண்டிருக்க கட்சி மாநாட்டிற்கான வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. இம் மாநாடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக அமைய இருக்கின்றது. கிழக்கு மாகாணத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சி. கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்கின்ற கிழக்கு மாகாணத்தை துரித அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்கின்ற ஒரு கட்சியின் மாநாடு இடம்பெற இருக்கின்றது. அதுவும் இதுவரை கிழக்கு மாகாணத்திலே இடம் பெறாத அளவிற்கு சிறப்பாக இம் மாநாடு இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.

இம் மாநாடானது கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதனைவிட கிழக்கு மாகாண மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று சொல்வது பொருத்தமானது என்று நினைக்கின்றேன். காரணம் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண மக்களும், கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற பல சமூக அமைப்புக்களுமே  செய்து வருகின்றனர். இம் மாநாட்டுக்கான மக்கள் பங்களிப்பு என்பது அதிகமாக இருக்கின்றது.

இம் மாநாட்டை கிழக்கு மாகாண மக்கள் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பலரது மனங்களிலே ஏதோ ஒரு எதிர்பார்ப்பு தென்படுகின்றது.

அடுத்த பகுதியில் இம் மாநாடு கிழக்கு மக்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் எவ்வாறான நன்மைகளை பெற்றுத்தரப் போகின்றன இம் மாநாட்டின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் தலைவிதி எவ்வாறு மாற்றமடையும் போன்ற விடயங்களை ஆராய்வோம்.

தொடரும்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு ஒரு பார்வை"

Post a Comment