Sunday 1 January 2012

பதிவுலக சாதனைகளும் வேதனைகளும் காமத்தில் சிக்குண்டவர்களும்



புதிய ஆண்டை வரவேற்றிருக்கும் இவ் வேளையில் நாம் கடந்த வருடம் எதனைச் சாதித்தோம் என்பதனை கடந்த வருடத்தின் பக்கங்களை புரட்டிப்பார்க்க வேண்டும். கடந்த வருடத்தில் நாம் சாதிக்க நினைத்தவை நாம் விட்ட தவறுகள் தடைக்கற்கள் என்பவற்றை புரட்டிப்பார்க்கின்றபோது இவ் வருடத்தில் அச் சவல்களையுடம் தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்ற முடியும்.

ஆனாலும் எனது கடந்த வருட அனுபவங்களை நான் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. கடந்த வருடம் என்னை ஒரு பரதேசியாக மாற்றிய வருடம். எனது ஊரைவிட்டு எங்கும் நான் போக விரும்புவதில்லை ஆனாலும் கடந்த வருடம் எனது வீட்டில் நிம்மதியாக இருக்க விடாத வருடம். நான்கரை மாதம் கட்டாரில் திண்டாட்டம். இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். 

பதிவுலகத்தால் எதனையும் சாதிக்க முடியும் எனும் அளவிற்கு பதிவுலகம் வியாபித்திருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய பதிவர்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றனர். பதிவர்கள் தினமும் பல விடயங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒபதிவுலகத்தைப் பொறுத்தவரை பல துறை சார்ந்தவர்கள் இருக்கின்றனர். எவ்வளவோ விடயங்களைச் சாதிக்க முடியும். ஆனாலும் பதிவுலகம் கடந்த வருடம் எதனைச் சாதித்திருக்கின்றது. 

எம்மில் பலர் சமூகம் சார்ந்து பல விடயங்களை எழுதிக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் நம் எழுத்துக்கள்போல் செயலில் காட்டுகின்றோமா? உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி என்பதற்கமைய பலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். வெறுமனே எழுத்துக்களோடு மட்டும் இல்லாமல் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் எழுத்தில் மட்டுமல்லாது சமூகம் சார்ந்த செயலிலும் இறங்கியிருக்கின்றனர். இவர்கள் பாராட்டப்பட வேண்டும். 

இலங்கைப் தமிழ் பதிவர்களைப் பொறுத்தவரை இதுவரை எதனைச் சாதித்திருக்கின்றனர்?????? பல பிரிவுகளையும் குழுக்களையும் தோற்றுவித்திருக்கின்றனர். இன்று இலங்கையில் எத்தனையோ பதிவர்கள் இரக்கின்றனர். பலர் சமூகம் சார்ந்தும் எழுதுகின்றனர். அவர்கள் எழுதுவதனைப்போல் சமூகத்துக்கு ஏதாவது செய்திருக்கின்றனரா? வெறுமனே மற்றவர்களை கவர்வதற்காகவா எழதுகின்றனர். 

இந்தியப்பதிவர்கள் பல விடயங்களைச் சாதித்திரக்கின்றனர். இலங்கைப் பதிவர்களிடையே போட்டியும் பொறாமையும் இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கைப் பதிவர்களிடையே பல குழுக்கள் எதற்கு? பழைய பதிவர்கள் புதிய பதிவர்கள் என்ற வேறுபாடு எதற்கு? இலங்கைப்  பதிவர்கள் பலர் பதிவுலகுக்குள் பிரவேசித்திருக்கின்றனர். அவர்களில் பலர் சிறந்த எழுத்தாளர்களாக எழுதிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் எழுத்துக்களைப் பார்த்து நான் வியப்பதுண்டு. 

வெறுமனே எழுத்துக்களோடு மட்டும் நின்று விடாது சமூகத்துக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும். ஒரு சிறுவனுடைய இருதய சத்திரசிகிச்சைக்காக அவசரமாக உதவுங்கள் என்று சிறுவனுடைய மருத்துவ சான்றிதழ் விடயங்களை பதிவிட்டிருந்தேன். பல நாட்களாகியும் இதுவரை எவரும் உதவவில்லை என்பது கவலைக்குரிய விடயம். ஒரு உயிரைக் காப்பாற்ற உதவி செய்ய முடியத நாம் சமூகம் சார்ந்து எழுதுவதில் பயனில்லை.

நண்பர் மதிசுதா சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் எனும் நோக்கோடு பதிவுலகிற்கு வந்த ஒருவர். அவர் தன்னால் முடிந்த ஏற்பாடுகளை செய்வதாக என்னிடம் சொல்லி இருக்கின்றார். நிருபனும் இச் சிறுவனுக்கு உதவிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அக்கறையோடு செயற்படுகின்றார். 

இலங்கைப் பதிவர்கள் கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து இவ்வருடத்தில் ஆக்கபூர்வமான விடயங்களை நோக்கிச் சிந்திக்க வேண்டும். இலங்கைப் பதிவர்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். ஒன்றிணைய வேண்டும். சமூகம் நோக்கி சிந்திக்க வேண்டும். சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரை எமது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. இலங்கையின் வடக்குக் கிழக்கிலே பல ஆயிரக்கணக்கான விதவைகள் பல கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பொருளாதார சூழல் காரணமாக பல சிறார்கள் கல்வியை இழந்து நிற்கதியாகி இருக்கின்றனர். இவர்கள் தொடர்பில் இலங்கையில் இருக்கின்ற ஒவ்வொரு பதிவரும் சிந்திக்க வேண்டும். எமது சமூகத்தின் நாளைய நிலை கேள்விக்குறியாக இருக்கின்றது. எமது சமூகத்துக்கு நாம் உதவி செய்ய முன்வராதபோது வெளிநாட்டுப்பதிவர்கள் எப்படி முன்வர முடியும்.

இலங்கைப் பதிவரிடையே ஒரு கெட்ட குணமிருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதற்காக நட்பினை முறித்துக் கொள்வது மனிதனுக்கு அழகல்ல. கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும். இலங்கைப் பதிவர்களைப் பொறுத்தவரை பதிவுகளில் இடம்பெறும் மாற்றுக்கருத்து தொடர்பில் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றபோது நட்பை முறித்துக் கொள்கின்றனர். இவை மாற வேண்டும். 

என்னுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்த சிலர் கருத்து முரண்பாடு காரணமாக வலைப்பதிவில் இடம்பெற்ற கருத்து மோதல்களினால் என்னுடன் பேசுவதனையே நிறுத்தி விட்டனர். ஆனாலும் நான் அவர்களுடன் பேசுவதற்கு பல தடவை முயற்சி செய்தும் பலநில்லை. சிலருக்கு மின்னஞ்சல்களை அனுப்பினேன் பதில்கூட இல்லை. இப்படி இருந்தால் எப்படி ஒற்றுமைப்படுவது.

பதிவுலகில் அதிகம் நான் கருத்து மோதலில் ஈடுபட்ட ஒருவர் வால்ப்பையன் அருண் அவர்கள். அவர் கடவுள் நம்பிக்கை அற்றவர் நான் இந்து தீவிரவாதி இருவரும் வலைப்பதிவில் மோதிக்கொண்டு இருப்போம். ஆனாலும் ஜீமெயில் அரட்டையில் நட்பாகப் பேசிக்கொண்டிருப்போம். பதிவர்கள் என்பது அப்படி இருக்க வேண்டும். 

இவ்வாறு இலங்கையிலும் சில பதிவர்கள் இருக்கின்றனர் அவர்கள்போல் எல்லோருடைய மன நிலையும் மாற வேண்டும். அவர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை குறிப்பிட்டால் அது வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும். அந்தளவிற்கு இருக்கின்றது இலங்கைப்பதிவுலகம்.

எனது எதிர்பார்ப்பு இவ்வருடம் இலங்கைப் பதிவர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். விரைவில் இலங்கை தமிழ் பதிவர் சந்திப்பு இடம்பெற வேண்டும். விரைவில் மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பு இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருக்கின்றது. அதற்குரிய ஏற்பாடுகளை திருகோணமலை மட்டக்களப்பு அம்பாரை மாவட்டத்தில் இருக்கும் பதிவர்களோடு எனைய பதிவர்களோடு பேசி ஏற்பாடு செய்ய இருக்கின்றேன். இதற்கு அனைத்து பதிவர்களினதும் ஒத்துளைப்பு இருக்கும் என்று நினைக்கின்றேன்.
பிழை பிடிக்கின்றேன் என்று நினைக்க வேண்டாம் வெறுமனே பொழுது போக்குக்காக வலைப்பதிவெழுத நான் வரவில்லை வலைப்பதிவு மூலம் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் பதிவுலகப் பக்கம் வந்தேன் இதுவரை எதனையும் சாதிக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னுள் இருக்கின்றது.

அடுத்து பதிவுலகில் கவலைக்குரிய விடயம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்று சமூகம் சார்ந்து எழுதிய பதிவுகளை பார்ப்பவர்கள் மிக மிகக் குறைவானவர்களே. ஆனாலும் தலைப்பிலே காமம் என்றிருந்தால் முண்டியடித்துக் கொண்டு பார்ப்பார்கள். என்னுடைய பதிவுகளிலே காமம் என்று தலைப்புப் போட்ட பதிவுகளை வாசித்தவர்களின் தொகை மிக மிக அதிகம். 

நான் எமது சமூகத்தின்பால் அதிக அக்கறை கொண்ட ஒருவன் என்னால் முடிந்த உதவிகளை சமூகத்திற்கு செய்து வருகின்றேன். ஆனாலும் கவலைக்குரிய விடயம் இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவி செய்யுங்கள் என்று நான்  பதிவிட்டபோது உதவ எவரும் முன்வராமை கவலைப்பட வேண்டிய விடயம். இதன் பிரதிபலிப்பாக நானும் எனது நண்பர்களும் சேர்ந்து உதவும் கரங்கள் எனும் அமைப்பினை உருவாக்கி இருக்கின்றோம். அதன் மூலம் சமூகத்துக்காக கஸ்ரப்படுகின்ற மக்களுக்காக பல உதவிகளை செய்ய இருக்கின்றோம். அதற்கென ஒரு வலைத்தளமும் உருவாக்க இருக்கின்றோம் விரைவில் விபரங்களை பகிர்ந்து கொள்வேன் சமூக அக்கறை கொண்ட எவரும் எம்மோடு இணைந்து கொள்ள முடியும்.

பிறந்திருக்கும் வருடம் அனைவருக்கும் சந்தோசம் நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவதோடு அனைவருக்கும் புது வருட வாழ்த்தக்களையும் தெரிவித்தக் கொள்கின்றேன்.

பிற்குறிப்பு - இருதய சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய சிறுவன் பற்றிய விபரங்களை தனது வலைப்பதிவில் வெளியிட்டிருக்கும் மதிசுதாவிற்கு நன்றிகள். இன்னும் பல பதிவர்கள் பதிவிட இருப்பதாக சொல்லி இருப்பது சந்தோசப்பட வேண்டிய விடயம்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "பதிவுலக சாதனைகளும் வேதனைகளும் காமத்தில் சிக்குண்டவர்களும்"

K said...

சந்துரு! உங்கள் ஆதங்கம் புரிகிறது! எம்முடன் பழகிப்பாருங்கள்! வித்தியாசத்தை உணர்வீர்கள்!

நாமும் இலங்கைப் பதிவர்தான்! ஆனால் வித்தியாசம்! நாற்று குழுமத்துக்கு வர்ருங்கள்!

காட்டான் said...

நாற்று பதிவர்களிடையே சண்டை கருத்து மோதல் இல்லாத நாள் இல்லை ஆனால் தனிப்பட்ட ஒற்றுமை சொல்லி தெரிய வேண்டியதில்லை.. உங்கள் பதிவில் வந்த இதய அறுவை சிகிச்சைக்குகூட மதி சுதாவின் பதிவை பார்த்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள்.. இதில் மதி சுதாவையும் பாராட்டியே தீரனும்..!!

Kiruthigan said...

பதிவுலகத்தில் சந்தித்த இனிய பதிவர்கள் நண்பர்கள் இனிய உறவுகளாகியமையும் பின்நாளில் எம்மோடு கைகோர்த்து பல கனவுகளுக்கு செயல் கொடுக்கவும் பல்வேறு வெற்றிகளையும் பெற்று தந்த நினைவுகளோடு மீண்டும் இந்த வருடமும் பதிவுகள் பல இடுவதற்கு தி்டமிட்டுள்ளேன்.

வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை அனுபவத்தை சொல்லி உள்ளீர்கள் ! நன்றி ! வாழ்த்துக்கள் !

Post a Comment