Saturday 7 November 2009

நீங்கள் எந்த உலகத்தில் இருந்தீர்கள் - கலைஞருக்கு ஒரு கடிதம்

வணக்கம் ஐயா....


நலம்தானே..... நலமாக இருப்பிர்கள் என்று நம்புகின்றேன்.....

உங்களை நான் அறிந்த நாள் முதல் எனக்குப் பிடித்த முதன்மையான மனிதர்களில் ஒருவராக நினைத்துவந்தேன். இருந்தும் இன்று இலங்கைத் தமிழர்கள் மீதான உங்களின் பாராமுகமும், நடவடிக்கைகளுக்கும் உங்கள் மீதிருக்கின்ற எனது நல்ல அபிப்பிராயங்களை தவிடுபொடியாக்கிவிட்டன.


உங்களின் தமிழ் பற்றே எனக்கு உங்களைப் பிடிப்பதற்குக் காரணம். ஆனால் இன்று பார்க்கின்றபோது உங்களிடம் உண்மையான தமிழ் பற்று இருக்கின்றதா? அல்லது உங்களின் இருப்புக்கான தமிழ் பற்றா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகின்றது.

உங்கள் தமிழ் பற்று உண்மையானதெனில் பாராட்டப்படவேண்டியதுதான். இருந்தாலும் சில விடயங்களிலே நீங்கள் பாராமுகம் காட்டியிருப்பது வேதனையளிக்கின்றது.

இலங்கையிலே இருக்கின்ற தமிழ் மக்கள் பல காலங்களாக பல அடக்கு முறைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகிவருகின்றனர். இது நீங்கள அறியாமல் இல்லை. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக அவ்வப்போது நீங்கள் குரல் கொடுத்தமைக்கு நன்றிகள். இதனை எமது பிரதேசத்திலே குரைத்துவரும் நாய்க்கு தேங்காய்க் கட்டி போடுவது என்று சொல்வார்கள். இலங்கைத் தமிழர்கள் உங்களை நம்பி கையேந்துகின்றபோது உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று ஏதாவது செய்து இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி விடுவிர்கள்.

இலங்கை தமிழ் மக்கள் படுகின்ற இன்னல்களை நீங்கள் அறியாதவர் இல்லை இதுவரை நீங்கள் இலங்கைத் தமிழர்கள் தொடர்பிலே காத்திரமான என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றீர்கள்.

எமது மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டு எமது மக்கள் மரணத்தின் பிடியிலே சிக்கித் தவித்தபோது எமது மக்கள் மட்டுமன்றி உலகத் தமிழர்களே உங்களை நம்பியிருந்தனர். உங்கள் மூலமாக, இந்திய மூலமாக தமிழர்களின் இறுதி மரண ஓலங்கள் நிறுத்தப்படுமென்று. அன்றைய நாட்களில் எம் மக்கள் பட்ட,சந்தித்த அவலங்களைப் பார்த்து உலக மக்களே கண்ணீர் வடித்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள்?

அன்றைய நாட்களில் உங்கள் காதுகள் செவிடானதா? கண்கள் பார்வை இழந்ததா? அல்லது வேறு உலகத்திலே இருந்தீர்களா? எம் தமிழினம் அழிந்துகொண்டிருக்கும்போது பாராமுகமாக இருந்துவிட்டு தமிழ் மொழியை வளர்ப்பதுபற்றிப் பேசுவது சிரிக்கத் தோன்றுகின்றது.


தமிழ் மொழியை வளர்ப்பதுபற்றிப் பேசுவது சிரிக்கத் தோன்றுகின்றது. தமிழை வளர்ப்பதற்கு முன்னர் தமிழைப் பேசுகின்ற மக்கள் அழிக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் அம்மக்களால் தமிழ்மொழி தானாகவே வளர்க்கப்படும்.

செம்மொழி மாநாடு பற்றிப் பேசுகின்றீர்கள் இன்றைய காலத்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அறியாத தலைவராக இருக்கின்றிர்களா நீங்கள்? இன்றைய தேவை தமிழை வளர்ப்பதனைவிட தமிழ் மொழியை வளர்க்கின்ற தமிழர்கள் அழிக்கப்படுவதை நிறுத்துவதே. அத் தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதே.

தமிழர்களே அழிந்து போகும்போது தமிழ் மொழியை வளர்த்து என்ன பயன்? முதலில் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் அத் தமிழர்களால் தமிழ்மொழி வளர்க்கப்படும்.

இலங்கைத் தமிழர்கள் பல இன்னல்களை அனுபவித்தபோது, அவர்களின் மரண ஓலங்கள் உலகெங்கும் சென்றடைந்தபோது உங்கள் காதுகளுக்கும் வந்திருக்கும்.

அப்போது மெளனம் சாதித்த நீங்கள் இன்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பியதன் நோக்கம்தான் என்ன? இன்று எத்தனை தமிழர்கள் மீதமிருக்கின்றார்கள் என்று பார்ப்பதற்காகவா? அல்லது இன்னும் எத்தனை தமிழர்கள் அவலங்களை எதிர்நோக்கக் காத்திருக்கின்றார்கள் என்பதனை அறியவா?

அவர்களின் வருகையின் நோக்கம் என்னால் புரியமுடியவில்லை. எம் மக்கள் அகதி முகாங்கலிலே படுகின்ற அவலங்களை பார்வையிடவா வந்தனர், நாடு சுற்றிப் பார்க்கவா வந்தனர், பொன்னாடை போர்த்தவா வந்தனர்? அல்லது எதற்காக வந்தனர்? என்ன செய்தனர்? அவர்கள் வந்து என்ன நடவடிக்கைகளை எடுத்தனர்?

தமிழ் மொழியை வளர்க்கவேண்டும் என்று சிந்திக்கும் நீங்கள் தமிழர்கள் அழிக்கப்படுவதனையும், தமிழர்களின் உரிமைக்காகவும் குரல்கொடுப்பதோடு இலங்கைத் தமிழர்கள் தொடர்வில் அதிக அக்கறை செலுத்துங்கள் என்றும் பணிவாக வேண்டிக் கொள்கின்றேன்.

அன்புடன்...
சந்ரு

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

31 comments: on "நீங்கள் எந்த உலகத்தில் இருந்தீர்கள் - கலைஞருக்கு ஒரு கடிதம்"

maruthamooran said...

தமிழகத்தின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி….. ‘நல்ல அரசியல் சாணக்கியன்: நல்ல தலைவர் அல்ல’ என்பது என்னுடைய கருத்து. இதற்கு ஆயிரம் எதிர்க்கருத்துக்கள் வரலாம்.

இலங்கை தமிழர்கள் எங்களுக்குள் ஒற்றுமைப்பட்டே எமது உரிமைகளைப் பெறவேண்டும். மாறாக, தமிழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியையும் குடும்ப சொத்து மாதிரி கையாளும் தனி மனிதரை அல்ல.

Unknown said...

//உங்களை நான் அறிந்த நாள் முதல் எனக்குப் பிடித்த முதன்மையான மனிதர்களில் ஒருவராக நினைத்துவருகின்றேன். //

நினைத்துவந்தேன் என்பது சரியான பதமாக இருக்கலாம்...

அண்ணா...
கலைஞர் பாராமுகமாக நடந்தார் என்பது வெளிப்படை.
ஆனால் எல்லா விடயங்களுக்கும் இந்தியாவிடம் பொய்நிற்பதை விட இலங்கையில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பின் நிறையவே சாதிக்கலாம்.
நாங்கள் எப்போதுமே ஒற்றுமையாக இருந்ததில்லையே?

கடந்த ஞாயிற்றுக்கிழமை மின்னல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் இதே கருத்துக்களைத் தான் சொன்னார்....

நாம் தமி்ழ்நாட்டுடன் நெருக்கமாக இருப்பின் எமக்கு கலாசார ரீதியிலான நன்மைகள் கிடைப்பினும்அரசியல் ரீதியாக எம்மை அது சிங்கள மக்களிடமிருந்து பிரிக்கிறது என்று குறிப்பிட்டார்.

அந்த மின்னல் நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்த யாராவது விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்....

Admin said...

//மருதமூரான். கூறியது...
தமிழகத்தின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி….. ‘நல்ல அரசியல் சாணக்கியன்: நல்ல தலைவர் அல்ல’ என்பது என்னுடைய கருத்து. இதற்கு ஆயிரம் எதிர்க்கருத்துக்கள் வரலாம்.

இலங்கை தமிழர்கள் எங்களுக்குள் ஒற்றுமைப்பட்டே எமது உரிமைகளைப் பெறவேண்டும். மாறாக, தமிழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியையும் குடும்ப சொத்து மாதிரி கையாளும் தனி மனிதரை அல்ல.//


நானும் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகின்றேன். நாம் அன்றுமுதல் ஏதோ ஒருவகையில் தமிழக அரசியல் தலைவர்களை நம்பி, எதிர்பார்த்து வாழ பழகிவிட்டோம். இன்று அதன் வெளிப்பாடு என்ன நாம் ஏமாந்ததுதான் மிச்சம். இனியும் நாம் எவரையும் நம்பி ஏமாற வேண்டிய அவசியம் இல்லை நாம் ஒன்றுபடவேண்டும்.


வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

// கனககோபி கூறியது...
//உங்களை நான் அறிந்த நாள் முதல் எனக்குப் பிடித்த முதன்மையான மனிதர்களில் ஒருவராக நினைத்துவருகின்றேன். //


நினைத்துவந்தேன் என்பது சரியான பதமாக இருக்கலாம்...//

நினைத்து வந்தேன் என்றுதான் வந்திருக்க வேண்டும் இப்போது திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் கோபி.


//அண்ணா...
கலைஞர் பாராமுகமாக நடந்தார் என்பது வெளிப்படை.
ஆனால் எல்லா விடயங்களுக்கும் இந்தியாவிடம் பொய்நிற்பதை விட இலங்கையில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பின் நிறையவே சாதிக்கலாம்.
நாங்கள் எப்போதுமே ஒற்றுமையாக இருந்ததில்லையே?//

உண்மைதான் நாம் ஒற்றுமையாக இருந்தால் எவ்வளவோ சாதிக்கலாம் இன்னொருவரிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை. இன்று எங்களுக்குள் எத்தனை பிரிவுகள், எத்தனை தலைவர்கள், எத்தனை மாறுபட்ட கொள்கைகள், கொலைகள் இவற்றை எல்லாம் விடுத்து ஒன்றுபட்டால் நாம் எவரையும் நம்பவேண்டிய அவசியமில்லை.




//கடந்த ஞாயிற்றுக்கிழமை மின்னல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் இதே கருத்துக்களைத் தான் சொன்னார்....

நாம் தமி்ழ்நாட்டுடன் நெருக்கமாக இருப்பின் எமக்கு கலாசார ரீதியிலான நன்மைகள் கிடைப்பினும்அரசியல் ரீதியாக எம்மை அது சிங்கள மக்களிடமிருந்து பிரிக்கிறது என்று குறிப்பிட்டார்.

அந்த மின்னல் நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்த யாராவது விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்....//



நான் குறிப்பிட்ட நிகழ்சியைப் பார்க்கவில்லை கோபி. இந்தியாவால் எமக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. இந்திய இலங்கை அரசாங்கங்களுக்கிடையே நிறையவே தொடர்புகள் இருக்கின்றன (வர்த்தகம் போன்றன) இலங்கையிலே இந்தியா பல முதலீடுகளை மேட்கொண்டு இருக்கின்றன. இதனால் இந்தியா இலங்கை மூலம் பல நன்மைகளை அனுபவித்து வருகின்றது.

இந்தியா இலங்கைத் தமிழர் விடயத்திலே தலையிட்டு இலங்கை அரசுடனான உறவை முறித்துக்கொள்ள விரும்பாது. இரு நாடுகளுமே சுமுகமான உறவைப் பேனா நினைக்கின்றன. இதன் மூலம் இரு அரசாங்கங்களுமே பல நன்மைகளை அடைகின்றன.


நாம் ஒருபோதும் இந்தியாவை நம்பியிருக்கவேண்டிய அவசியமில்லை. நாம் இந்தியாவோடு குறிப்பாக இந்தியத் தமிழர்களோடு கலை, கலாசாரம் போன்ற உறவை வளர்த்துக்கொள்ள முடியும். இந்திய, இலங்கை தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக உருவெடுக்கவும் இரு அரசாங்கங்களும் ஒரு பொது விடப்போவதுமில்லை.

யோ வொய்ஸ் (யோகா) said...

மரூதமூரானின் கருத்து தான் எனது கருத்தும் சிறந்த ஒரு குடும்ப தலைவராகவே அவரை நான் பார்க்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

//தமிழர்களே அழிந்து போகும்போது தமிழ் மொழியை வளர்த்து என்ன பயன்? முதலில் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் அத் தமிழர்களால் தமிழ்மொழி வளர்க்கப்படும்.//

உண்மைதான் சந்ரு..
ஈழத்தமிழர்களை பொருத்த மட்டில் இந்தியாவும் அதன் தலைவர்களும் நடந்துக்கொள்ளும் விதம் இன்னும் எனக்கு புரியவில்லை நண்பா... ம்ம்ம்ம் பார்க்கலாம்... மீதம் உள்ள தமிழனாவது நலமுடன் இருக்க ஆசை

ஆ.ஞானசேகரன் said...

தமிழனிடம் ஒற்றுமை இல்லை என்பதும் உண்மைதான்...

மு. கருணாநிதி said...

எனதருமை உடன்பிறப்புக்கு,
கண்ணீர்த்துளிகளால் நனைந்த உன்மடல் கிடைக்கப்பெற்றது.

நலமாக இருப்பேனென நம்பியமைக்கு நன்றி. உங்கள் ஊர் மொழிவழக்கில் "எப்ப மண்டய போடுவார்" என்று எதிர்பார்த்திருக்காததற்கு மிக்க நன்றி. (இப்போதெல்லாம் மண்டையில போடுவதற்கு ஆட்கள் இல்லை அல்லவா)

நீங்கள் அழிந்து போன பயங்கரவாதத்தின் எச்ச சொச்சம் என தெரிகிறது. ஆம் அலல்து இல்லையென நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்.

முதலில் உங்களுக்கு சில விடயங்களை ஞாபகப்படுத்தவேண்டும். முதலில் நான் இந்தியன். எனக்கு என்தேசமும் என்தேசத்தின் இறையாண்மையுமே முக்கியம்.

இரண்டாவ்து நீங்கள் நம்பினால் என்ன நம்பாவிட்டால் என்ன.. இந்திய தமிழ்நாட்டுமக்கள் என்னை நம்புகிறார்கள். நல்லபிப்பிராயம் கொண்டுள்ளார்கள். இதற்கு அண்மைய தேர்தல் முடிவுகள் சாட்சி.

மூன்றாவது உங்கள் நிகழ்ச்சிநிரல் வேறு. எங்கள் நிகழ்ச்சிநிரல் வேறு. உங்களுக்கு அதாவது பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து என் தமிழக மக்களை காட்டிக்கொடுக்கவோ, பிழையாக வழிநடத்தவோ மாட்டேன்.

நான் இந்திய நலன் கெடாத வண்ணம் இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவு வழங்குவேன். ஆனால் பயங்கரவாதிகளுக்கு அல்ல.. இன்றுகூட இருதசாப்தங்களாக உங்களால் அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவாமல் உங்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறேன். தமிழருக்கு ஓடிவந்து உதவியிருக்கிறேன். இதுபோதாதா என் தமிழ் இனப்பற்றைக்காட்ட?

தீர்வுத்திட்டம் நிதியுதவி போன்றவை உங்களுக்கு கிடப்பதற்கு ஆதரவு வழங்குவேன். ஆனால் பயங்கரவாத தலைவர்களை காப்பதற்கு அல்ல.

என்னுடைய மௌனம் தமிழர்களின் மரண ஓலத்தை நிறுத்தவில்லையா? பயங்கரவாதத்தின் பகடைக்காயாக மாறி நாளொன்றுக்கு பல உயிர்களை காவு கொடுத்த உங்கள் மரண ஓலம் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டபின் இல்லாது போனது தெரியவில்லையா? நான் தந்தது நிரந்தர தீர்வு இல்லையா?

இலங்கை தமிழர்தான் தமிழின் மூச்சென நீங்கள் கருதுவதாக தெரிகிறது. இரண்டு சனத்தொகையையும் கணக்கெடுத்தால் யார் உயிர் என்பது புரியும்.

நீங்கள் பலதடவை இந்திய தமிழர்களை இந்தியாவை கறிவேப்பிலையாக பாவித்தும் நான் நாடாளுமன்ற குழுவை அனுப்பியதற்கு நீர் காட்டும் நன்றியா இது?

இறுதி மரண ஓலம் என்கிறீர்களே, கிழக்கிலும் வடக்கிலும் நடந்த தேர்தல்களின் முடிவு காட்டுவது என்ன? எங்கே போனார்கள் உங்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள்?

இந்திய தமிழர்களாகிய எங்களை பத்திரிகை செய்தியையும், இணையசெய்தியையும் நம்ப உங்களைப்போல் முட்டாள்கள் என நினைக்கவேண்டாம். எங்களிடம் உலகின் சிறந்த உளவுப்பிரிவு உள்ளது. அது கொணரும் உண்மைகள் எதுவும் நீங்கள் பெரிதாய் தூக்கிப்பிடிக்கும் செய்திகளோடு ஒருபோதும் ஒத்திசையவில்லையே?

கடைசியில் முத்தாய்ப்பாக சொல்வது இன்று எனக்கு மடல் வரைவதை போல் உங்கள் பயங்கரவாத இயக்கம் முட்டாள்தனமான முடிவை எடுத்தபோதெல்லாம் மடல் வரைந்திருந்தீர்கள் என்றால் இன்று எனக்கு மடல் வரையும் நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டீர்கள்!

இப்படிக்கு

என்றும் தமிழினத்தை காட்டிக்கொடுக்கா தலைவன்
மு. கருணாநிதி

Anonymous said...

மு.கருணாநிதியின் பெயரில் பின்னூட்டம் இட்டவன் என்ன கொடும என்ற நாய்

Unknown said...

சந்ரு அண்ணாக்கு கருணாநிதி எல்லாம் பதில் போடுறார்....
பயங்கரமா பிரபலமடைஞ்சிற்றீங்க... ;)

ஐயா கலைஞரே,
அடுத்த டெல்லிப் பயணம் எப்போது?

Admin said...

//யோ வாய்ஸ் (யோகா) சொன்னது…
மரூதமூரானின் கருத்து தான் எனது கருத்தும் சிறந்த ஒரு குடும்ப தலைவராகவே அவரை நான் பார்க்கிறேன்//


நானும் மருதமூரானின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்.


வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்

உங்கள் தோழி கிருத்திகா said...

வணக்கம் ஐயா....


நலம்தானே..... நலமாக இருப்பிர்கள் என்று நம்புகின்றேன்.....
///////
அவர் நலத்துக்கு என்ன கொறச்சல்

இதுவரை நீங்கள் இலங்கைத் தமிழர்கள் தொடர்பிலே காத்திரமான என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றீர்கள். //////////


ஏகப்பட்ட தந்தி,கடிதம்,அதோட அரை நாள் உண்ண விரதம் இருந்த தியாகசெம்மல்


அவர்களின் வருகையின் நோக்கம் என்னால் புரியமுடியவில்லை. எம் மக்கள் அகதி முகாங்கலிலே படுகின்ற அவலங்களை பார்வையிடவா வந்தனர், நாடு சுற்றிப் பார்க்கவா வந்தனர், பொன்னாடை போர்த்தவா வந்தனர்? அல்லது எதற்காக வந்தனர்? என்ன செய்தனர்? அவர்கள் வந்து என்ன நடவடிக்கைகளை எடுத்தனர்?////////////////


நாங்களும் உயிரோடுதான் இருக்கிரோம் என்று காட்டிக்கொள்ள...

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
//தமிழர்களே அழிந்து போகும்போது தமிழ் மொழியை வளர்த்து என்ன பயன்? முதலில் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் அத் தமிழர்களால் தமிழ்மொழி வளர்க்கப்படும்.//

உண்மைதான் சந்ரு..
ஈழத்தமிழர்களை பொருத்த மட்டில் இந்தியாவும் அதன் தலைவர்களும் நடந்துக்கொள்ளும் விதம் இன்னும் எனக்கு புரியவில்லை நண்பா... ம்ம்ம்ம் பார்க்கலாம்... மீதம் உள்ள தமிழனாவது நலமுடன் இருக்க ஆசை//

எவருக்குமே புரிந்துகொள்ள முடியவில்லைதான்.

//தமிழனிடம் ஒற்றுமை இல்லை என்பதும் உண்மைதான்...//

முற்றுமுழுதான உண்மை

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

@. மு. கருணாநிதி கூறியது...



கருணாநிதியின் பெயரில் வந்தவரே... நீர் யார் என்பது எனக்குத் தெரியும். நல்ல கருத்துக்களை, உண்மைக் கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரிலே சொல்வதற்கு ஏன் தயங்குகின்றீர்கள்.


இன்று இலங்கையிலே தமிழர்கள் படும் கஷ்டங்கள் பற்றியும், தமிழ் மக்கள் பற்றியும் பேசுகின்றவர்களையும் புலி முத்திரை குத்தி இல்லாதொழிக்க உங்களைப் போன்ற சிலர் பல காலமாக செய்து வருகின்றனர்.


தமிழர்களைப் பற்றி பேசுகின்றவர்களை இல்லாதொழிக்க நினைப்பதன் நோக்கம்தான் என்ன? நான் இங்கே புலியைப் பற்றி பேசினேனா? புலிகளுக்கு ஆதரவாக கருத்துச் சொன்னேனா? தமிழர்கள் பற்றியே பேசி இருக்கின்றேன். ஏன் புலி என்று முத்திரை குத்த நினைக்கின்றீர்கள்.


நீங்கள் ஏதோ ஒரு வகையில் மற்றவர்களை மாட்டிவிட்டு புதினம் பார்க்க நினைக்கின்றீர்கள் என்பது மட்டுமே புரிகின்றது. உண்மைகள் ஒருபோதும் உறங்கப் போவதில்லை.


என் கருத்தை சொல்கின்றேன். எவரது எந்த அதட்டல்களுக்கும் அடிபணியவோ, பயப்படவோ செய்பவன் நானல்ல..... மனதில் உறுதியுடன் தைரியமும் உள்ளவனே தமிழன் என்பதனை மறந்துவிடவேண்டாம்

Admin said...

//பெயரில்லா கூறியது...
மு.கருணாநிதியின் பெயரில் பின்னூட்டம் இட்டவன் என்ன கொடும என்ற நாய்//




நல்ல அரசியல் தந்திரம்..... ஏன் இந்த திசை திருப்பும் முயற்சி...

Admin said...

//கனககோபி கூறியது...
சந்ரு அண்ணாக்கு கருணாநிதி எல்லாம் பதில் போடுறார்....
பயங்கரமா பிரபலமடைஞ்சிற்றீங்க... ;)

ஐயா கலைஞரே,
அடுத்த டெல்லிப் பயணம் எப்போது?//

பாருங்கள் கோபி யாரோ ஒரு கருணாநிதியை அழைத்தேன்.... வந்தது ஒரு....... சொல்ல வார்த்தை இல்லை எல்லாமே ஆசைதான் மாட்டிவிட்டு புதினம் பார்க்கணும் என்ற ஆசை.

Admin said...

உங்கள் தோழி கிருத்திகா கூறியது...


//ஏகப்பட்ட தந்தி,கடிதம்,அதோட அரை நாள் உண்ண விரதம் இருந்த தியாகசெம்மல்//


நல்ல விடயங்களைச்
செய்திருக்கின்றார். உண்ணாவிரதம் என்றால் என்ன என்று நம் உறவுகளைக் கேட்டு தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள்...



//நாங்களும் உயிரோடுதான் இருக்கிரோம் என்று காட்டிக்கொள்ள...//

நாங்கள் படும் இன்னல்களை வைத்து அரசியல் நாடகம் நடத்தி பிழைப்பு நடத்த இருக்கிறீர்கள் என்பதனை எடுத்துச் சொல்லவா வந்தார்கள்.

Subankan said...

மருதமூரான் அண்ணாவின் கருத்தோடு உடன்படுகிறேன். அவர் ஒரு சராசரி அரசியல்வாதி, அவ்வளவுதான்.

ஹேமா said...

சந்ரு என்ன ஆச்சு உங்களுக்கு ?உங்களுக்கு நேரம் நிறையக் கிடைச்சால் வேற நல்ல ஒரு பதிவு போட்டிருக்கலாம்.இந்திய அரசியல் எங்களைக் கை விட்டுக் கனகாலம்.
நீங்கள் சொன்னதுபோல எங்களுக்குள்ளேயே கோடாலிக்காம்புகளும் எட்டப்பன்மாரும் இருந்துகொண்டு அள்ளி வச்ச்படி இருக்கினம்.பிறகேன் அடுத்தவரை நம்பிக் குறைசொல்ல !இந்தக் கடிதம் நடிகர் கலைஞருக்கு ஒரு துடைச்செறியிற தூசு.

ப்ரியமுடன் வசந்த் said...

இக்கடிதத்துக்கு அவமானம்..

கலைஞர் கைகளில் கிடைத்தால்...

balavasakan said...

கருணாநிதியை எல்லாம் கணக்கில் எடுத்து ஒரு பதிவை வீணாக்கியதற்கு மிகவும் வருந்துகிறேன்

வந்தியத்தேவன் said...

சந்ரு யார் இந்தக் கருணாநிதி? நான் அறிந்த மு.கருணாநிதி என்பவர் காணாமல் போய்ப் பல நாட்களாகிவிட்டது.

ஜோதிஜி said...

மிகுந்த நாகரிகமாக படைத்து உள்ளீர்கள். நா நயம் மட்டும் உள்ளவர் விடயத்தை விரைவில் படியுங்கள்

Admin said...

//
Subankan கூறியது...
மருதமூரான் அண்ணாவின் கருத்தோடு உடன்படுகிறேன். அவர் ஒரு சராசரி அரசியல்வாதி, அவ்வளவுதான்.//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//ஹேமா கூறியது...
சந்ரு என்ன ஆச்சு உங்களுக்கு ?உங்களுக்கு நேரம் நிறையக் கிடைச்சால் வேற நல்ல ஒரு பதிவு போட்டிருக்கலாம்.இந்திய அரசியல் எங்களைக் கை விட்டுக் கனகாலம்.
நீங்கள் சொன்னதுபோல எங்களுக்குள்ளேயே கோடாலிக்காம்புகளும் எட்டப்பன்மாரும் இருந்துகொண்டு அள்ளி வச்ச்படி இருக்கினம்.பிறகேன் அடுத்தவரை நம்பிக் குறைசொல்ல !இந்தக் கடிதம் நடிகர் கலைஞருக்கு ஒரு துடைச்செறியிற தூசு.//



நம் தமிழர்கள் நம்பி வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டனர். இன்று உணர்ந்துகொண்டனர்.


வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Admin said...

//பிரியமுடன்...வசந்த் சொன்னது…
இக்கடிதத்துக்கு அவமானம்..

கலைஞர் கைகளில் கிடைத்தால்...
//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Admin said...

//Balavasakan சொன்னது…
கருணாநிதியை எல்லாம் கணக்கில் எடுத்து ஒரு பதிவை வீணாக்கியதற்கு மிகவும் வருந்துகிறேன்///



என்ன செய்வது அவரை நம்பினோம் ஏமாந்தோம் இதனை மட்டுமே செய்யமுடிந்தது .

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Admin said...

//வந்தியத்தேவன் சொன்னது…
சந்ரு யார் இந்தக் கருணாநிதி? நான் அறிந்த மு.கருணாநிதி என்பவர் காணாமல் போய்ப் பல நாட்களாகிவிட்டது.//

நான் அன்றிருந்த கருணாநிதிதான் இவர் என்று எழுதிவிட்டேன். தவறு செய்துவிட்டேன் வந்தி அண்ணா...


வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Admin said...

//ஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது…
மிகுந்த நாகரிகமாக படைத்து உள்ளீர்கள். நா நயம் மட்டும் உள்ளவர் விடயத்தை விரைவில் படியுங்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

ஹரீஷ் said...

///நாம் தமி்ழ்நாட்டுடன் நெருக்கமாக இருப்பின் எமக்கு கலாசார ரீதியிலான நன்மைகள் கிடைப்பினும்அரசியல் ரீதியாக எம்மை அது சிங்கள மக்களிடமிருந்து பிரிக்கிறது என்று குறிப்பிட்டார்.///

கலாச்சார ரீதியாக நண்மைகளா? ஐயா.. நீங்கள் எந்த கலாச்சாரம் பற்றி சொல்ரீங்க? இலங்கைத் தமிழரைப் பார்த்து பரிதாபப்பட்டாலும், எனக்குப் பல நேரங்களில் உங்களைப் பார்த்து பொறாமையாக உள்ளது... அங்கேதான் தமிழில் சிந்திக்கத் தெரிந்தவர் உள்ளனர்... இங்கேயோ, தமிழ் ஒரு பாடமாக மட்டும்தான் உள்ளது(பல நேரங்களில் அரசியலாக்கவும் உதவுகிறது)... தமிழின் தூய்மயும், தமிழ் கலச்சாரத்தின் தூய்மயும் இலங்கயில்தான் இருப்பதைப்போல் தொன்றுகின்றது... சென்னையில் இருப்பதோ வேறு கலச்சாரம்.. "சென்னைத் தமிழ்" என்பதே தமிழும் தெலுங்கும்(பிற இன்ன மொழிகளும்) கலந்ததுதான்... தமிழ் நாட்டோடு தொடர்பு வைத்தீர்களானால், உங்கள் தமிழின் தூய்மயும் குளைந்து விடும்!!! இப்படிப்பட்ட ஒரு கருத்தை ஒரு "பல்களைக்கழக விரிவுரையாளர்" கூறும்போது வேடிக்கயாகவும், பரிதாபமாகவும் உள்ளது(உங்கள் அறியாமயைப் பார்த்து)... நானும் தமிழ் நாட்டில்தான் இருக்கிறேன்.. "விரிவுரையாளர்" என்பதர்க்கு இனையான ஆங்கிலச் சொல் எனக்குத் தெரியாது!!! "கடவுச் சொல்" என்றால் என்ன என்றும் தெரியாது... உங்கள் தமிழைப் படித்துதான்(ஊடகங்கள், இனயதள பதிப்புகள்), பல தமிழ் சொற்கள் எனக்குத் தெரிய வருகிறது... இப்பொது புரிகிறதா உங்களைப் பார்த்து நான் ஏன் பொறாமைப் படுகிறேன் என்று? தயவு செய்து தமிழகத்திலே நாம் கலச்சாரமோ, மொழியோ வளரும் என்று நினைக்காதீர்... முடிந்தால் தமிழ் நட்டுப் பக்கமே திரும்பாதீர்!! பேருக்குத்தான் இது "தமிழ் நாடு", செயற்க்கயில் இது "தமிழ் இல்லா நாடு"!!

Unknown said...

//தமிழர்களே அழிந்து போகும்போது தமிழ் மொழியை வளர்த்து என்ன பயன்? முதலில் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்//....

"தூக்கம் விற்றுதானே ஒரு கட்டில் வாங்க ஆசை ......"- என்றொரு பாடல் ஞாபகம் வருகிறது

Post a Comment