Showing posts with label பெண்ணடிமை. Show all posts
Showing posts with label பெண்ணடிமை. Show all posts

Friday, 25 December 2009

இந்த நிலை மாறுமா? திருந்துவார்களா இவர்கள்?








காட்சிப் போருளாக்கப்பட்ட பெண்கள், பெண்களை குட்டி சுவராக்க நினைக்கும் தேசமிது எனும் இரு இடுகைகளின் தொடராகவே இந்தப் இடுகையும் வருகின்றது. இத்தொடரிலே பெண்கள் எதிர் நோக்கும் பிரட்சினைகள் பற்றி பேசுகின்றேன் என்றாலும் ஒவ்வொரு இடுகைக்கும் நான் தலைப்பை மாற்றக் காரணம் பெண்கள் பற்றி எழுதினாலே சிலர் அந்தப் பக்கமே தலை வைத்தே படுக்கமாட்டார்கள். அதற்குள் பெண்கள் பற்றிய தொடர் பதிவு என்றால் வருபவர்களும் வரமாட்டார்கள். 

இத் தொடர் பதிவு தொடர்பாக எனக்கு மின்னஞ்சலில் வந்த சில கேள்விகளும் அதற்குரிய என் கருத்துக்களும் உங்களுக்காக. மின்னஞ்சல் நீளமானதாகையால் முக்கியமான பகுதியை மட்டுமே தருகிறேன்.



//மனைவியை இழந்தால் கணவனுக்கு ஏதாவது பட்டம் உண்டா?...............................?
ஒரு பெண் கற்பழிக்கப் பட்டாள் ...என்றால் அது யாரால்?..................?
ஒரு பெண் மானபங்கம் படுத்தப்பட்டாள் அது யாரால்?......................?
தனக்குப் பிறந்த மகளுடன் தந்தை தகாத உறவு  இதற்கு காரணம் யார்?..............?


பெண்கள் விலைமாது ஆவதற்கு சில ஆண்களே காரணம்.அவர்கள் விலைமாதர்கள் என்று தெரிந்தும்,தேடிப்போவதும் ஆண்களே! அவர்கள் தேடிப்போவதால் தான் அத் தொழில் நடக்கின்றது எந்த ஒரு ஆண்மகனையும் போகமல் இருக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்  முடியுமா?எந்த ஒரு ஆண் மகனும் போகாமல் இருந்தால் விபச்சாரி இல்லை,விபச்சாரம் இல்லை விலைமாது இல்லை .இதற்கு காரணம் யார்?.............?//

அவர் முதலாவதாக கேட்ட கேள்வி கணவனை இழந்தால் அந்த பெண்ணுக்கு கொடுக்கும் பட்டம் கைம்பெண், விதவை. மனைவியை இழந்தால் கணவனுக்கு ஏதாவது பட்டம் கொடுக்கிறார்களா என்று கேட்டு இருந்தார்.  மனைவியை இழந்த கணவனை தபுதாரன் என்று சொல்கிறோம் ஆனால் இப்படி ஒரு தமிழ் சொல் இருப்பது மட்டுமே ஆனால் பயன்படுத்துவது குறைவு.


இந்த சமுகத்திலே கணவனை இழந்த பெண்கள் வெகுவாகவே பாதிக்கப் படுகின்றனர். பொருளாதார நிலைமை சிக்கல்கள் ஒருபுறமிருக்க. சமூகம் இவர்களை ஓரம் கட்ட நினைக்கின்றது, அதிகமான விடயங்களிலே கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.




கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து விலக்கி வைத்தல், நல்ல காரியத்துக்கு செல்கின்றபோது அந்த பெண் முன்னால் வந்தால் சகுனம் என்று சொல்வது. இது எல்லாம் எந்த வகையில் நியாயம்.








ஆனால் மனைவியை இழந்த ஒரு ஆணுக்கு இந்த கட்டுப்பாடுகள் இருக்கிறதா? இல்லையே மனைவியை இழந்த ஆண்கள் இந்த நிகழ்வுகளிலே முக்கியமானவர்களாக இருப்பார்கள் ஆனால் தனது சகோதரிக்கோ குடும்ப உறுப்பினர்களுக்கோதிருமணம் போன்ற  நல்ல விடயங்கள் நடை பெறும்போது இந்த பெண்கள் ஒதுக்கப் படுகின்றார்கள். அவர்களால் தான் பங்கு கொள்ளவில்லையே என்று அழுவதைத் தவிர வேறு வழியில்லை.




ஒரு பெண் கணவனை இழந்தால் பல கட்டுப்பாடுகள், குடும்பத்தில் பொருளாதார பிரச்சினைகள்,  பிள்ளைகளை வளர்த்து நல்ல வழிக்கு கொண்டு வரவேண்டும் என்று. ஒரு திருமணம் செய்ய நினைத்தால் எத்தனை கொடுமைகள் நடக்கின்றது. மறுமணம் செய்ய முடியாது என்று எத்தனை கட்டுப்பாடுகள். மீறியும் அந்தப் பெண் ஒருவரை திருமணம் செய்தால் நடத்தை கெட்டவள் என்ற பட்டத்துடன். அவளை ஒதுக்கியும் வைக்கின்றனர்.

ஆனால் ஒரு ஆண் மனைவியை இழந்தால் மனைவி இறந்து ஒரு மாதம் செல்ல முன்னரே அடுத்த திருமணம் செய்யவும் ஆதரிக்கின்றது இந்த சமூகம். மனைவியை இல்;அந்த ஒரு ஆண் எத்தனை திருமணம் செய்யவும் ஆதரிக்கும் சமூகம் ஏன் பெண்களை மட்டும் தனது குடும்ப நிலை காரணமாக மறுமணம் செய்ய நினைக்கும் போது மறுக்கிறது.




சில பெற்றோரோ ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால் உடனடியாக அந்த ஆணுக்கு வேறு பெண்ணை தேட ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் இதே பெற்றோர் ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவளை ஒதுக்கி வைப்பதுதான் ஏன்?




அவர் கேட்ட அடுத்த கேள்வி ஒரு பெண் மானபங்கப் படுத்தப் படுவது யாரால் என்று. ஒரு பெண் ஒரு ஆனால் மானபங்கப் படுத்தப் பட்டால், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டால். அந்தப் பெண் இந்த இடத்திலே தவறு செய்கிறாளா இல்லையே அப்பாவியான பெண் ஆனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறான் ஆனால் எந்த தவறும் செய்யாத அந்தப் பெண்ணை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது இந்த சமூகம். அதுமட்டுமல்ல பாலியல் வல்லுறவு செய்த அந்த ஆணின் செயலை மறுகணமே மறந்து அந்த ஆணை நல்ல மனிதனாக பார்ப்பவர்களும் இருக்கின்றனர்.




தனது பிள்ளையையே பாலியல் வல்லுரவுக்குத் படுத்தும் எத்தனை தந்தைகள் இருக்கின்றனர். எத்தனை சகோதரர்கள் இருக்கின்றனர். இப்படியோப்பட்ட தந்தை, சகோதரர்களால் எத்தனை பெண்கள் இறந்திருக்கின்றனர், வாழ்க்கையை தொலைத்து தவிக்கின்றனர்.




விபசாரிகள் பற்றி அவர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மைதான். சில தவிர்க்க முடியாத காரணங்களால்  பெண்கள் விலை மாதர்களாக வந்துவிட்டார்கள். முக்கிய காரணம் பணம் உழைக்க வேண்டும் என்பதுதான். அப்படித்தான் அவர்கள் வந்தாலும் ஆண்கள் அவர்களை நாடி செல்லாவிட்டால் விலை மாதர்கள் இருக்க முடியாதுதானே.




இன்று பணக்கார வர்க்கத்தை சேர்ந்த சில ஆண்கள் என்ன செய்கிறார்கள். சில நல்ல பெண்களை பணத்தைக் காட்டியே ஆசையை வளர்த்து தங்களது உடல் இச்சைகளை தீர்த்து கொள்வதற்காக பயன்படுத்துகின்றனர். தாங்கள் எந்தளவு வேண்டுமோ அந்த அளவுக்கு அனுபவித்துவிட்டு அந்த பெண்ணை கைவிடுகின்றனர். இந்தப் பெண் தனது உடல் இச்சைகளை அடக்கிக்கொள்ள முடியாமல் மற்றவர்களை நாடிச்செல்ல நினைக்கின்றாள். இதனால் இவள் விலை மாதராகின்றாள்




தொடர்ந்து வரும்...
read more...

Wednesday, 23 December 2009

பெண்களை குட்டி சுவராக்க நினைக்கும் தேசமிது


காட்சிப்  பொருளாக்கப் படும் பெண்கள் எனும் இடுகையின் தொடர்ச்சியாகவே இந்த இடுகையும் இடம்பெறுகின்றது.


சில விடயங்களைப் பேசுகின்றபோது சில எதிர்ப்புக்கள் வரலாம் என்பதனால் மேலோட்டமாக முந்திய இடுகையிலே  மேலோட்டமாக சில விடயங்களை குறிப்பிட்டு இருந்தேன். இருந்தாலும் இத்தொடருக்கு பாரிய ஆதரவு இருப்பது சந்தோசப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது. இன்னும் விரிவாக ஆராயலாமே, தொடர்ந்து எழுதுங்கள் என்று பலரும் வேண்டிக்கொண்டதுக்கு இணங்க அனைத்து விடயங்களையும் சற்று விரிவாக ஆராயலாம் என்று இருக்கிறேன்.
அத்தோடு கடந்த இடுகையிலே கருத்துரைகளிலே சிலர் கேட்ட கேள்விகளுக்குரிய விளக்கங்களை. இங்கே கொடுக்கவும் இருக்கிறேன்.


பெண்ணடிமைத் தனமேன்பது எங்கிருந்து ஆரம்பிக்கின்றது? பெண்களுக்கு எதிரான  வன்முறைகள் எங்கே ஆரம்பிக்கின்றன என்று பார்த்தால் ஒரு பெண்ணுக்கு தன் வீட்டிலேயும் குடும்பத்திலேயும்தான் ஆரம்பிக்கின்றது. அதனையும் விட ஒரு படி மேலே சென்று பார்ப்போமானால். பெண்களுக்கு எதிரான  வன்முறைகள் பெண் பிறப்பதற்கு முன்னரே கருவிலேயே ஆரம்பித்து விடுகின்றன. எத்தனை பெண் பிள்ளைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றன, அழிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.


எதற்காக இந்த பெண் பிள்ளைகள் கருவிலேயே அழிக்கப்படவேண்டும். இதற்கு அந்த பெண்ணும் காரணமாக இருக்கின்றாளே எனும்போது நாம் வெட்கித்தலை குனிய வேண்டி இருக்கின்றது. கருவிலே இருப்பது ஆண் குழந்தை என்றால் சந்தோசப்படும் பெண் கருவிலிருப்பது பெண் குழந்தை என்றால் அதனை அளக்க நினைப்பது ஏன். தானும் ஒரு பெண்தான் என்பதனை மறந்து விடுகின்றாளா?


சரி ஒரு பெண்குழந்தை பிறந்து விட்டது என்றால். அவளை எந்தளவு அடக்கி ஒடுக்க முடியுமோ எந்தளவுக்கு  அடக்கி ஒடுக்க நினைக்கும் சமூகமும் இல்லாமல் இல்லை. ஆண்களுக்கும், பெண்களுக்கும் சில சமூகக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும் இங்கே நடப்பது என்ன பெண்களை பெண்களை வெளியில் செல்ல விடாமல் பெட்டிப்பாம்பாக வீட்டுக்குள்ளேயே அடக்கி வைக்கின்ற எத்தனை பெற்றோர் இருக்கின்றனர். 


பெண் என்றால் அடுப்படிக்கு மாத்திரமே என்று சொல்லுகின்ற எத்தனையோ பெற்றோர் இருக்கின்றனர். இவர்களின் இந்த மூட எண்ணங்களால் எத்தனையோ பெண்கள் கல்வி இழந்து, தனது வாழ்க்கையையே தொலைத்து நிக்கின்றனர். 


இத்தனையையும் தாண்டி ஒரு பெண் திருமணம் என்று ஒரு படி சென்றுவிட்டால். சில கணவன்மார்களால் படுகின்ற சித்திர  வதைகள்தான் எத்தனை?  போதாக்குறைக்கு மாமியாரும் வந்து சேர்ந்து விடுவார். தன் மனைவியை அடிமைபோல் நடாத்துகின்ற எத்தனை கணவன்மார்களை பார்த்திருக்கின்றோம், தனக்கு சமைத்துப் போடுவதற்கும், தனது உடல் சுகத்துக்குமே பெண் என்று பெண்ணை ஒரு போகப் பொருளாக பார்க்கின்றவர்கள் எத்தனை  பேர் இருக்கின்றனர். (மனைவியை தெய்வம்போல் போற்றுகின்ற கணவன்மாரும் இல்லாமல் இல்லை) மாமியார்கள் விட்டார்களா பெண்களை எத்தனை பாடுபடுத்துகின்றனர். இந்த மாமியார்கள் ஒன்றை புரிந்து கொள்கின்றார்களா தானும் ஒரு பெண்தான் என்பதனை. 


முந்திய இடுகையிலே நண்பர் ரோஸ்விக் தனது கருத்திலே ...


கூர்ந்து நோக்குங்கள் எல்லா இடங்களிலும் பணம் ஒழிந்திருப்பது தெரியும். பெண் பணத்திற்காக விபச்சாரம் செய்கிறாள். பெண்களை விபச்சாரி என்று எழுதும்போது தான் பத்திரிக்கைகள் அதிகம் விற்கிறது. அங்கும் பணம். மாடலிங் மற்றும் திரைத்துறையில் அதிக பணம் பெற வேண்டி இவர்கள் ஆடை அவில்பிற்கு தயாராகிறார்கள். அதன் மூலம் படமும் நிறைய பணம் ஈட்டும் என்பதால் தயாரிப்பாளர்களும் உடன் படுகிறார்கள்.


பெண்களை இது போன்ற காரியங்களில் இருந்து வெளி வர சொல்லுங்கள். கட்டாயப்படுத்தும் ஆண்களை கால்களுக்கிடையில் மிதிப்போம். 
பெண்களை இது போன்ற விஷயங்களில் ஈடு படக்கூடாது என்று தடை போட்டால்.... அதற்கும் ஒரு கூட்டம் வரும், எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிரதேன்று....


பெண்களின் அழகு ஆண்களை மட்டுமல்ல... பெண்களையும் கவரக்கூடியது என்று நீங்கள் கருதினால், சில பெண்களை விளம்பரத்தில் இருந்து மட்டுமல்ல... விபச்சாரத்தில் இருந்தும் வெளிக்கொணர முடியாது. 


என்று சொல்லி இருந்தார் உண்மைதான் இன்று பணத்துக்காக மனிதன் எதனையும் செய்யத்துணிந்து விட்டான். விளம்பரம் சினிமா போன்ற துறைகளிலே தனது கவர்ச்சியைக் காட்டி பிழைப்பு நடாத்துகின்ற , எல்லா பெண்களிலும் நாம் தவறு சொல்ல முடியாது. எத்தனை பெற்றோர் பணத்துக்கு ஆசைப்பட்டு தனது பிள்ளை விரும்பாமலே சினிமா துறைக்குள் நுளைத்திருக்கின்றார்கள். சரி ஒரு பெண் தவறான முறையில் செல்கின்றாள் என்றால் அதனை முடிந்தவரை பெற்றோரால் தடுக்க முடியும் ஆனால் சில பெற்றோரின் அசமந்த போக்கினாலே இன்று பல பெண்கள் இத்துறைகளை நாடிச்செல்ல வேண்டி இருக்கின்றது.


இன்று விபச்சாரிகளாக இருக்குமதிகமான பெண்கள் பணத்துக்காகவே இந்த தொழிலை செய்கின்றனர். பெற்றோரால் கைவிடப்பட்டு, கணவனால் கைவிடப்பட்டு, சொந்தங்களால் தூக்கி எறியப்பட்டு தான் வாழ வழியின்றி இத் தொழிலுக்கு வந்த பெண்களே அதிகம். இந்த இடத்திலே இப்படிப்பட்ட பெண்களை நாம் எந்த வகையில் குற்றம் சொல்ல முடியும். இவள் சார்ந்த சமுகத்தின் மீதுதான் குற்றம் இந்த சொல்லவேண்டும். 


சரி அந்தப் பெண் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்துவிட்டாள். எல்லாவற்றையும் விட்டு தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு வெளி உலகுக்கு வருகின்றாள். அப்போது இந்த சமுகம் அவளை ஏற்கின்றதா? இல்லையே நடத்தை கெட்டவள் என்று ஒதுக்கி வைக்க நினைக்கின்றது. அவள் மணம் திருந்தி வந்துவிட்டாள் அவளை சமுகத்தில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்கிறதா சமுகம்? இல்லையே.


ஆனால் ஒரு பெண் இவ்வாறான நடவடிக்கைகளினால் நடத்தை கெட்டவனாக இருந்தால் அடுத்த நிமிடமே மறந்து விடுகின்றோம் ஏன் இந்த நிலை. நண்பர் கோபி தனது கருத்துரையிலே  சொன்னதுபோல் பெண் செய்கின்றபோது விபச்சாரமாகவும் ஆண்கள் செய்கின்றபோது ஆண்மையாகவும் பார்க்கின்றது இந்த சமுகம்.
ஒரு ஆணுடன் அதிகமாகப் பேசினாலே கட்டுக்கதைகள் கட்டி கெட்டவள் என்று பட்டம் கொடுக்கும் சமுகம் ஒரு ஆண் வீரம் பேசுவான் நான் அவளோடு அப்படி நடந்தேன், இவளோடு இப்படி நடந்தேன் என்று. இதனை கேட்டு இரசிக்கிறது நம் சமுகம். இது எந்த விதத்தில் நியாயமானது. ஏன் நாம் பெண்களை இந்த அளவுக்கு பெண்களை பார்க்கின்றோம்.


மதுவதனன் மௌ. தனது கருத்திலே....


//பதிவுகளில் பெண்களின் கவர்ச்சிப் படத்தைப் போடுவதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. என்ன செய்வது ஆண்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக கவர்ச்சிப் படத்தைப் போடுகிறார்கள்.


ஒவ்வொரு முறையும் பதிவுகளில் போடப்படும் கவர்ச்சிப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம், அதைப் பார்க்கும் பெண்கள் என்ன சிந்திப்பார்கள் என்பதுதான் எனது மனதில் ஓடும்.//


என்று தனது ஆதங்கத்தை சொல்லி இருந்தார். ஒருவரை நாம் இதனைப் பதிவிட வேண்டாம் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் பெண்களின் அரை குறை ஆடைகளுடனான கவர்ச்சிப் படங்களை போட்டு பதிவிடும்போது இளைஜர்கள் வலைப்பதிவுக்கு வருவது அதிகம்தான். ஆனாலும் எல்லோரும் வர மாட்டார்கள். இந்த படங்களை பார்த்ததுமே சங்கடப்படுகின்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். 


வீதிகளிலே விளம்பரப் பலகைகளில் இருக்கும் படங்களைவிடவா நாங்கள் போடுவது அசிங்கம் என்று கேட்கலாம் ஆனாலும் வீதிகளிலே இருக்கின்ற அந்த படங்களைப் பார்த்து செய்வதறியாது மனதை சன்சலப்  படுத்திக்கொண்டு போகின்ற எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர். ஒரு பதிவர் நல்ல விடயங்களை பதிவிட்டிருந்தாலும் இந்த படங்களால் அந்த பதிவையே பார்க்காதவர்களும் இருக்கின்றனர். 


படம் பார்க்க வருபவர்களைவிட எங்கள் கருத்துக்களுக்காக வருபவர்களே எங்களுக்கு முக்கியம். இப்படிப்பட்ட படங்களை போடுகின்ற வலைப்பதிவுகளை குடும்பத்தோடு இருந்து பார்க்கின்றவர்கள் பார்ப்பதற்கு முன்வரமாட்டார்கள்.


இத்தொடர் நான் நினைத்ததனைவிட பலரும் பாராட்டி இருப்பதோடு தொடரும்படியும் கருத்துரைகளில் மாத்திரமல்ல சிலர் மின்னஞ்சல்களும் அனுப்பி இருந்தார்கள். அதிலே சிங்கப்பூரிலிருந்து வந்த ஒரு மின்னஞ்சலிலே இத்தொடரி  பாராட்டியிருப்பதோடுதொடு பல விடயங்களை கேள்விகளாக கேட்கப்பட்டிருக்கின்றன. அந்த கேள்விகளுக்கான ஏன் பார்வையிலான பதில்கள் அடுத்த பகுதியில் தருகின்றேன்.


நண்பனின் வருகை... 


என்னை வலைப்பதிவுக்கு அறிமுகப் படுத்திய நண்பர் பிரபா சில காலம் வலைப்பதிவுப்பக்கமே வரவில்லை. சில காலம் அவரால் பதிவுகளும் இட முடியவில்லை. காரணம் அவர் கணணி முன்னால் இருக்கின்றபோது கண்கள் வலிக்க ஆரம்பிக்கின்றன அந்த நிலை அதிகரித்ததனால் வைத்தியர்கள் கணணி   பக்கமே போகவேண்டாம் என்று ஆலோசனை வழங்கி இருக்கின்றனர். 


அதனால் கணணி பக்கமே  செல்ல முடியாது இருந்தார். தற்போது கண்ணிலே வேதனைகள் குறைந்திருப்பதால் மீண்டும் வலைப்பதிவு பக்கம் வந்திருக்கின்றார். இனி பதிவுகளை எதிர் பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இனி நாம் அவர் பக்கமும் சென்று வரலாம்.  
read more...

Monday, 21 December 2009

காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்



இது ஒரு தொடர் பதிவாக அமைய இருக்கிறது. இத் தொடர் பதிவு ஆண்களையோ, பெண்களையோ குற்றம் சொல்வதற்காக அல்ல. என்னால் அறியப்பட்ட  சில சம்பவங்களும் நான் என்னக்குள்ளே கேட்டுக்கொண்ட கேள்விகளுமே தொடர் பதிவாக வர இருக்கின்றது. இப் பதிவுகளிலே நான் ஏதாவது தவறாக குறிப்பிட்டால் நேர்மையான முறையிலே சுட்டிக்காட்டுங்கள். நேர்மையான விமர்சனங்களை நான் என்றுமே ஏற்றுக்கொள்ள தயங்கியவனல்ல.

இன்று பெண்ணடிமை பற்றி பேசப்பட்டாலும். பெண்களுக்கு எதிரான  வன்முறைகளுக்கு எதிராகா பல்வேறுபட்ட அமைப்புக்கள் குரல்கொடுத்து வந்தாலும். இன்று பெண்ணடிமை இன்று இல்லையா என்று கேட்டால். பதில் கேள்விக்குரிஎதான்.

இன்று பெண்ணடிமை இல்லை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லை என்று சொல்ல முடியாது. பெண்ணடிமை என்று சொன்னாலே எல்லோரும் பெண்களை ஆண்கள்தான் அடிமைப் படுத்துகின்றனர் என்று கருத்திலேடுத்துக் கொள்கின்றனர். ஆண்கள் மட்டுமல்ல இன்று பெண்களை பெண்களே அடிமைப் படுத்துகின்ற நிலை பரவலாக இருக்கின்றது. பெண்கள் பல்வேறு வழிகளிலே பல்வேறு காரணங்களுக்காக  அடிமைப் படுத்தப் படுவதோடு வன்முறைகளுக்கும் ஆளாக்கப் படுகின்றனர்.

 பெண்களை ஏன் நாம் இரண்டாம் நிலைக்கு தள்ளுகின்றோம். பெண்களும் எங்களைப் போன்ற மனிதர்களேதான்.  அவர்களுக்கும் எல்லோர்போலவும் சம உரிமை இருக்கின்றது. ஆனால் என்ன செய்கின்றோம் பெண்களை சிலர் (பெண்கள் உட்பட) அடக்கியாள நினைக்கின்றோம். இதனால் சில பெண்கள் தாங்களாகவே பெட்டிப்பாம்பாக வீட்டுக்குள்ளேயே அடங்கி விடுகின்றனர்.

இந்த அடக்கு முறைகளையும் மீறி ஒரு பெண் தலை நிமிர்ந்து வாழ நினைத்தால், அடக்கு முறைகளுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து அவள் சம உரிமையோடு முன்னேற நினைத்தால் அவளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற சமூகமும் இருக்கின்றது. இதனால் அந்தப் பெண்ணால்  தொடர்ந்துதான் முன்னேற முடியுமா?

பெண்களுக்கு சில சமுக கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதேபோல் ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் பெண்கள் அந்த கட்டுப்பாட்டை சிறிது மீறினாலே   அவளைப் பற்றி இலவச விளம்பரம் செய்கின்ற மனிதர்களும் ஊடகங்களும் சில ஆண்கள் செய்கின்ற காம லீலைகளை ஏன் அரங்கேற்ற மறுக்கின்றன.

இன்று எத்தனை போலிசாமியார்களுக்கு எத்தனை ஊடகங்கள் விலைபோய் இருக்கின்றன. அவர்களின் காம லீலைகளை அரங்கேற்றலாம்தானே. அதனை விடுத்து ஒரு பெண் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறை செய்தால் ஏன் அவளை மட்டும் நடத்தை கெட்டவள் என்ற பெயர் சூட்ட வேண்டும்.


ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டால் என்றால் அவளை கைது செய்து விபச்சாரி எனும் பட்டத்தோடு. உலகிக்கே அவளை மானம் கெட்டவள் என்று வெளிச்சம் போட்டுக்காட்டும் இந்த ஊடகங்களும் நபர்களும் ஏன் அந்த பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆணை வெளிச்சத்துக்கு கொண்டுவர மறுக்கின்றது.

பெண் தவறு செய்தால் நடத்தை கெட்டவள். ஆண் தவறு செய்தால் நல்லவனா?  ஒரு ஆண் ஒரு விபச்சாரியிடம் போகவில்லை என்றால் அவள் எப்படி விபச்சாரி ஆகமுடியும். இங்கே பெண்ணில் மட்டும் தவறில்லை. ஆண்களிலும் தவறு இருக்கின்றது. அதனை விடுத்து பெண்களுக்கு மட்டும் விபச்சாரி பட்டம் வழங்குவது என்ன நியாயம் இருக்கிறது?

இன்று பெண்களை காட்சிப் பொருளாக பார்க்கின்ற நிலை இருக்கின்றது. இன்று பெண்கள் காட்சிப் பொருளாக பயன்படுத்தப் படாத இடம் இல்லை என்றேதான் சொல்லவேண்டும். கணவன் மட்டுமே கண் காணும் அழகை சில பெண்கள் காட்சிப் பொருளாக விற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

இன்று விளம்பரங்களிலே அரை குறை ஆடைகளோடு ஒரு பெண் வந்தால்தான் அந்த பொருளுக்கு நல்ல விற்பனை வாய்ப்புக்கள் கிடைக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. எப்படிப்பட்ட ஒரு தரமற்ற பொருளையும் ஒரு பெண்ணை அரை குறை ஆடைகளோடு காட்டி அதிக கேள்வியை ஏற்படுத்தி பொருளை இலகுவாக விற்க முடியும் என்ற நிலை தோன்றிவிட்டது.

இன்று வெளிநாடுகளில் மட்டுமல்ல எமது நாட்டை எடுத்துப் பாருங்கள் வீதிகளிலே இருக்கின்ற விளம்பரப் பலகைகளில் அதிகமானவை எப்படி இருக்கின்றன. இந்த சமுக சீர்கேடு தேவைதானா? அது அவர்களின் சுதந்திரம் என்று சொல்ல வேண்டாம் ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்குவரை செல்லாதவரைக்கும்தான். சுதந்திரம் இருக்கலாம் ஆனால் ஒரு சமுகத்தின் கலாசாரத்தை பதிக்காத வகையில் அந்த சுதந்திரம் இருக்க வேண்டும்.

தொடர்ந்து வரும்......
read more...

Friday, 18 September 2009

இதுவும் பெண்ணடிமைத் தனமல்லவா?

நீண்ட நாட்களாக எனக்குள்ளே நான் கேட்ட கேள்விகளை இன்று உங்களிடம் கேட்கின்றேன். வலையுலக நண்பி சிந்து தனது பதிவிலே பெண்கள் ஆண்களுடன் கதைப்பது தவறா? என்று கேட்டிருக்கின்றார். இதுவே என் கேள்வியும் சிந்துவின் பதிவிலே சிந்துவின் கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை.

இன்று இந்த நாக உலகிலே நாகரிகத்துக்கீர்ற மாதிரி நாமும் மாறிக்கொண்டு இருக்கின்றோம் ஆனால் எமது மனங்களிலே சில தவறான எண்ணங்கள், சிந்தனைகள் விதைக்கப்படுகின்றன. அவை களையப்பட வேண்டும். எமது மூதாதயர்கள் செய்தார்கள் நாமும் செய்கின்றோம் என்று இதற்கு காரணத்தையும் சொல்லி விடுவார்கள். மூதாதயரால் ஏன் செய்யப்பட்டது என்பதனை சிந்தித்துப்பார்க்க வேண்டி இருக்கின்றது. அவர்களால் செய்யப்பட்ட சில செயற்பாடுகள் மூட நம்பிக்கையாக இருக்கின்றன. (பல விடயங்கள் நல்ல விடயங்களே) சில அவர்களின் காலத்துக்குப் பொருத்தமானதாக இருக்கின்றன ஆனால் இன்று அவர்கள் காலம் போல் இல்லை உலகமே மாறிவிட்டன.

சரி விடயத்துக்கு வருகின்றேன் . இன்று ஒரு ஆணும் பெண்ணும் கதைக்கின்றபோது எத்தனை கட்டுகதைகள் கட்டப்படுகின்றன. ஆண்கள் பெண்களோடு கதைப்பது தவறா? ஆண் பெண் வேறுபாடு ஏன் பார்க்கப்படுகின்றது. ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்க முடியாதோ. இன்று ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக பழகுகின்றபோது எத்தனை கட்டுக்கதைகள் கட்டப்படுகின்றது. ஏன் இந்த நிலை.

பெண்ணடிமை பற்றிப்பேசுகின்றபோது ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்கின்றோம் அப்படி என்றால் ஆண்கள் எத்தனை பெண்களுடன் எப்படிப் பேசினாலும் அதனை நாம் பொருட்படுத்துவதில்லை. ஏன் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும்போது அந்தப்பெண்ணை சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றோம். பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா. இது பெண்ணடிமைத்தனம் இல்லையா?

இன்று எல்லாவிதத்திலும் ஆண்களுக்கு பெண்களும் சளைத்தவர்கள் இல்லை என்று பல பெண்கள் சரித்திரம் படைத்துவரும் நிலையில் ஏன் நாம் இன்னும் பெண்களை குட்டிச் சுவராக்க நினைக்கின்றோம்.

ஒரு ஆணும் பெண்ணு நல்ல நண்பர்களாக பழகிக்கொண்டு இருக்கும்போது அந்தப்பெண்ணுக்கு திருமணம் என்று வருகின்றபோது இருவரது நட்பும் முறிவடைகின்றன. ஏன் இந்த நிலை.

அந்தப்பெண்ணின் கணவன் அந்தப்பெண் மீது நம்பிக்கை இல்லாமலா திருமணம் செய்கின்றார். நம்பிக்கை இருந்தால் அவளது நண்பர்களோடு பேச விடலாமல்லவா? இது பெண்களை அடிமைப்படுத்தும் செயலல்லவா? (எல்லா கணவன்மாரும் இப்படி இல்லைதான் சில நல்ல கணவன்மாரும் இருக்கின்றனர்) சரி திருமணத்தின் பின் பெண்களோ தமது ஆண் நண்பர்களை பிரிய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் ஆண்களுக்கு இந்த நிலை இருக்கின்றதா? இல்லையே யாருடனும் எப்போதும் பேசும் சுதந்திரம் இருக்கின்றதே. இது பெண்களை அடிமைப்படுத்துகின்ற ஒரு செயலாகும்.

ஒரு பெண் ஒரு ஆணுடன் கதைக்கும்போது நாம் ஏன் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றோம். நல்ல மனதோடு பார்க்கலாமல்லவா? பெண்களும் ஆண்களைப்போன்றவர்கள்தான். ஆண்களுக்கு என்ன உரிமை இருக்கின்றதோ அந்த உரிமை பெண்களுக்கும் இருக்கின்றது என்பதனை மறந்துவிடக்கூடாது.
read more...