Saturday, 12 December 2009

இலங்கை பதிவர்கள் சிலர் தலை மறைவு. தேடுகிறது பதிவுலகம்.



இலங்கையின் தமிழ் வலைப் பதிவர்களின் இரண்டாவது  சந்திப்பு நாளை இடம்பெற இருக்கின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டிருப்பதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்திருக்கின்றது. இந்த நிகழ்வுகள் உலகம் முழுவதும் நேரடி ஒளி, ஒலிபரப்பு செய்யப்பட இருக்கின்றது.

சந்திப்பு தொடர்பான விபரங்கள்.
இது ஒரு புறமிருக்க சில பதிவார்கள் தலை மறைவாகி இருப்பதாகவும். இவர்களைத் தேடி வலை விரிக்கப்பட்டிருப்பதாகவும். வலையை எலி வெட்டாமல் ஆதிரை காவல் காத்துக் கொண்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது. உடனடியாக இன்று தலை மறைவான பதிவர்களின் வாலையாவது பிடித்துத் தரும்படி சந்திப்பு ஏற்பாட்டு  குழுவிலே  இருக்கின்ற சுபாங்கன் அழுது புலம்பிக்கொண்டிருக்கின்றார்.

சுபாங்கன் அழுவதைக் கண்ணுற்ற கீர்த்தியுள்ள கவியரசி தலைமறைவான பதிவர்களை நினைத்து கண்ணீராலே கவிதை  வடித்துக் கொண்டிருக்கிறார். யாரெல்லாம் தலை மறைவு என்று அரசரிடம் கேட்டேன். அரசரோ மந்திரி மந்தியிடம் கேட்க சொன்னார் மந்தியோ மங்கைகளுடன் அரட்டையில். அவசரத்துக்கும் அசரமாட்டார்.

நகை சுவைப் பதிவர் புள்ளப்புடி பாண்டி அண்மைக் காலமாக பதிவர்களை தாக்கோ தாக்கு என்று போட்டுத்த் தாக்கி இருக்கிறார். இதனால் ஆத்திரமுற்ற பதிவர்கள் சந்திப்பிலே இவரது கொடும்பாவிக்கு பதிலாக புள்ளப்புடி கொடிய பாவியையே எரிப்பதற்கு வாந்தி திட்டமிட்டு இருக்கிறார். இதை அறிந்த கொழுப்பேறிக் கொளுத்த பதிவர் புள்ளப்புடி ஆண்டியிடம் சொல்லி இருக்கிறார் புள்ளப்புடி போண்டி தலை மறைவு.
இவர் மலேசியா சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருந்தாலும் இவர் நசிக்கும் கும்மி ராணி இவரை உருட்டி புரட்டி அடிப்பதற்கு கூட்டத்தோடு தேடிக்கொண்டிருப்பதால் மலேசியா சென்றிருக்க வாய்ப்பில்லை எங்காவது பற்றைகளுக்குள் பதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

அடுத்து கூட்டத்தோடு சென்று கும்மியடிக்கும் கும்மித் தலைவன் கொளுத்த பதிவர் சில வலைப் பதிவுகளை கும்மியே நாசம் செய்ததனால்.  இவரது கும்மிக் குழுவால் பாத்திக்கப் பட்ட பதிவார்கள் இவரை சந்திப்பன்று 100  மீற்றர் ஓட விடவேண்டும் என்று திட்டம் தீட்டினர் இது அவர் காதுகளுக்கு எட்டிவிட்டது. உடனே தலை மறைவு.

இவரை பிடித்தால் எல்லோரையும் பிடித்துவிடலாம் என்று சுபாங்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிலர் இவரது பின்னாலேதான் ஒளிந்திருக்கலாம் என்று சுபாங்கன் நம்புகிறார். கொளுத்த பதிவருக்கு பின்னால் 5 பேர் நின்றாலே தெரிய மாட்டார்கள் என்றும் சொல்கிறார்.

விஜய்.. விஜய்.. என்று உயிரை விட்ட பதிவர் வேட்டைக்காரனுக்கு எதிர்ப்புக்கள் வர ஆரம்பித்ததும் தன்னை யாராவது இருட்டடி அடித்து விடுவார்களோ என்ற  பயத்தில் தொழிலுக்கும் செல்லாமல் வீட்டு மூலைக்குள் ஒளிந்திருப்பதாக எலியை துரத்தி சென்ற ஆதிரை சொல்கிறார்.

யோ.... என்று குரலெழுப்பும் பதிவர் நீண்ட நாட்களாக தலை மறைவாக இருக்கிறார் ஆனால் அடிக்கடி சில வலைப் பதிவுகளுக்கு வாலாட்டிவிட்டு போவதாக அறிய முடிகிறது. இப்போது அவர் டிவிட்டரில் சில மன்னிக்கவும் பல இளம் பெண்களோடு கும்மி அடிப்பதாக சுபாங்கனின் அன்புத் தோழி தெரிவித்தார்.

 என்ன நாளை நீங்களும் வருவதற்கு ஆயத்தம்தானே நான் இன்றே வருவதற்கு ஆயத்தமாகிவிட்டேன். வரமுடியாதவர்கள் ஒளிபரப்பில் பார்க்க மறந்திடாதிங்க.
http://livestream.com/srilankatamilbloggers
read more...

Friday, 11 December 2009

என்னடா உலகமிது

இதுதான் அன்று நான் கண்ட
அழகிய தேசமா?
இன்று என் தேசத்தில்
மிஞ்சி இருப்பது என்ன?

இல்லை இல்லை
நிறையவே இருக்கின்றனவே
கிராமங்கள் தோறும்
ஒன்றுக்கு இரண்டு
அனாதை இல்லங்களும்
அகதி முகாம்களும்
நாம் என்ன செய்தோம்
தமிழராய் பிறந்ததை தவிர.

 அனாதை இல்லங்களில் வாழும்
அந்த மழலைகளின் முகத்தில்
எத்தனை எத்தனை
கவலைகளின் முகவரிகள்
ஆறுதல் சொல்வதைத்தவிர
என்னால் எதுவும்
செய்ய முடியவில்லை
வார்த்தைகள் வர மறுக்கின்றன..

நீங்கள் அனாதைகள் இல்லை
அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள்
நீங்கள் மட்டுமல்ல
நாங்களும்தான் அனாதைகள்
சொந்தங்களை இழந்ததனால்
நீங்கள் அனாதைகள்
சிறுவர் இல்லங்களில்.
தமிழனாய் பிறந்தோம் -இன்று
அனைத்தும் இழந்து
அகதிகளாக அடை பட்டோம்
அகதி முகாம்களில்.

தமிழன் என்றால்
அகதி என்று
மகுடம் சூட்ட
நினைக்கும் தேசமிது
"தமிழன் நாம்'
தலை நிமிர்ந்து சொல்லுங்கள்
தம்பிகளே தங்கைகளே
நாளைய தலைவர்கள்
நீங்கள் அல்லவா
அதுதான் உங்களையும்
முளையிலே கிள்ள நினைக்கிறது
இந்த தேசம்
காலம்தான் பதில் சொல்லும்
காத்திருங்கள் - என்னால்
இதற்கு மேலும்
எதுவும் சொல்லமுடியாது
சொன்னால் நானும் நாளை
அனாதை ஆக்கப்படலாம்
வாய் பொத்தச் சொல்லும்
தேசமல்லவா இது...
read more...

Thursday, 10 December 2009

வேட்டைக்காரனுக்கான எதிர்ப்பலைகளும். மறக்க முடியாத அடியும்


வேட்டைக்காரனுக்கு எதிர்ப்பலைகள்.

  
இன்று பலராலும் பேசப்படுகின்ற வேட்டைக்காரன் திரைப்படத்துக்கு சில எதிர்ப்பலைகள் கிளம்பியிருப்பதாக அறிய முடிகின்றது. இருந்தாலும் விஜயின் ரசிகர்கள் பெரும் எதிர் பார்ப்போடு இருக்கின்றனர்.


இந்த எதிர்ப்புக்கு காரணம் இலங்கை இராணுவத்தைப் பற்றிய எங்கள் கடவுள்கள்.... என்ற பாடலுக்கு இசையமைத்த இராஜ் இந்தப் படத்திலே பங்களித்திருப்பதுதான். எது எப்படி இருப்பினும் வேட்டைக்காரன் வேட்டைக்காரனாகத்தான் வருவான். தங்களை ஏமாற்றமாட்டான் என்று விஜயின் ரசிகர்கள் பாரிய எதிர் பார்ப்போடு இருக்கின்றனர்.

மறக்க முடியாத அடி.

கடந்து வந்த பாதைகளில் சில விடயங்களை மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத சில விடயங்கள் இருக்கின்றன.

நான் சாதாரண தரப் பரிட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காகக்  காத்திருந்த காலமது. நண்பர்களோடு  உரை   சுற்றுவது. இப்படி பொழுது போய்விடும். ஒரு நாள் நானும் நண்பர்களும் விதியால் வந்து கொண்டிருக்கும்போது. ஒரு இராணுவ அதிகாரியால் பிடிக்கப்பட்டோம்.

அடையாள அட்டையை கேட்டார் கொடுத்தோம். என்னை மட்டும் நிற்கும்படி சொல்லிவிட்டு நண்பர்களை அனுப்பிவிட்டார். உடனே என்னிடம் நீ அகதிதானே என்றார். மட்டக்களப்பு வாவிக்கு கிழக்கே எழுவான் கரை என்றும் மேற்கே படுவான் கரை என்றும் சொல்வதுண்டு அந்த காலகட்டத்தில் யுத்தம் காரணமாக படுவான்கரை மக்கள் எழுவாங்கரைக்கு வந்து அகதிகளாக இருந்த காலம்.

அவர் என்னிடம் நீ அகதிதானே என்று கேட்டபோது நான் உடனே இல்லை என்றேன்.அவரோ எந்தக் கதையும் கதைக்கவில்லை மோசமான முறையிலே என்னை தாக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கோ எதற்காக அடிக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. பொய் சொல்லவேண்டாம் நீ அகதிதாநேடா என்று கேட்டுத்தான் அடி விழுகிறது.

அடித்துவிட்டு அடையாள அட்டையை பறித்துவிட்டு தங்களது முகாமுக்கு வரும்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. நண்பர்கள் உதவியோடு விடு வந்து சேர்ந்தேன். பத்து நாட்களுக்கு மேல் என்னால் எழுந்து நடக்க முடியவில்லை.

அவர்களது முகாமுக்கு சென்றபோதுதான் எனக்கு அடித்ததுக்கான காரணத்தை அறிய முடிந்தது.  நான் பிறந்த இடம் படுவான்கரையில் இருக்கும் ஒரு இடம் அது என் அடையாள அட்டையில் பிறந்த இடமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வைத்து நான் அகதி என்று நான் படுவான்கரை என்று நினைத்துவிட்டனர். ஆனால் நான் பிறந்தது மட்டுமே படுவான்கரை பிரதேசத்திலுள்ள ஒரு வைத்தியசாலை. மற்றும்படி எல்லாமே என் சொந்த ஊர்தான்.

ஆனாலும் ஒரு வருடத்துக்கு வாரம் ஒருதடவை அவர்களின் முகாமுக்கு சென்று வரவேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாக்கப்பட்டேன்.  என்ன செய்வது எல்லாம் விதி.

யாழ்தேவியின் கவனத்துக்கு.



ஏனைய திரட்டிகளைப் பொல்லாது யாழ்தேவி திரட்டியிலே ஒருவர் எத்தனை ஓட்டுகளும் போடலாம் என்ற நிலை காணப்படுகிறது. இதனால் சிலர் வேண்டுமென்று பல எதிர் ஓட்டுக்களை போடுகின்றனர். இன்று எனது பல இடுகைகளுக்கு அதிகமான எதிர் ஓட்டுக்கள் போடப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக யாழ்தேவி நிர்வாகம் கவனம் செலுத்துவது நல்லது.
read more...

Wednesday, 9 December 2009

இணைய அரட்டையில் இப்படியும் நடக்கிறது

இன்று இணைய அரட்டை என்பது இணையப் பாவனையாளர்களில் அநேகமானோர் விரும்பும் ஒன்றாகும். இந்த இணைய அரட்டைகள் மூலம் நல்ல பல நண்பர்கள் கிடைப்பதோடு திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன இன்னும் பல நல்ல விடயங்கள் நடைபெற்று வந்தாலும் பல பல தீய, சமுக சீர்கேடான விடயங்களும், சுத்து மாத்துக்களும் நடந்து கொண்டுதான் வருகின்றது.

இன்று இணைய அரட்டையை நல்ல விடயங்களுக்காக பயன் படுத்துவோரைவிட கெட்ட விடயங்களுக்காக பயன்படுத்துவோர் அதிகம் என்று சொல்லலாம். இதில் வயது வித்தியாசம் இல்லை சிறுவர்களும் இன்று இந்த இணைய அரட்டைக்கு அடிமையாகி விட்டனர். இதில் பெண்களும் சளைத்தவர்களல்ல. சமூகத் தளங்களை ஆண்களை விட பெண்களே அதிகம் பயன் படுத்துவதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன.

நானும் ஆரம்ப காலங்களில் அரட்டயடிப்பவந்தான் நிறையவே நண்பர்கள் கிடைத்தனர், ஒரு சிலரே நல்ல நண்பர்கள். இந்த அரட்டையிலே இருக்கின்ற சில விடயங்களை அறிந்து, உணர்ந்து கொண்டதும் நானாகவே அரட்டைப் பக்கம் போவதை குறைத்துக்கொண்டேன். அப்போது இடம் பெற்ற சில உண்மை சம்பவங்கள் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக என்று தருகிறேன். 

ஒரு சமுக வலைத்தளம் மூலம் எனக்கு ஒரு நண்பி கிடைத்தார். அவர் எனக்கு ஓரிரு வருடத்துக்கு முன்னரே அரட்டை அடிக்க ஆரம்பித்தவர். இலங்கையை சேர்ந்தவர். இவருக்கு வெளி நாடொன்றிலே ஒரு நண்பர் அரட்டை மூலம் கிடைத்திருக்கின்றார். நல்ல நண்பர்களாக சில காலம் பழகியிருக்கின்றனர். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஒரு வருடம் இவர்களது காதல் தொடர்ந்திருக்கின்றது. இந்த நண்பியோ தன்னைப்பற்றிய அத்தனை விடயங்களையும் காதலனிடம் சொல்லி இருக்கின்றார். புகைப்படங்கள். தொலை பேசி இலக்கங்கள் என்று எல்லாமே கொடுத்திருக்கின்றார். பின்னர் காதலனோ தொடர்பை துண்டித்து விட்டாராம். சில நாட்களின் பின்னர் அந்தப் பெண்ணின்  மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கின்றது அந்த காதலனிடமிருந்து. அந்த மின்னஞ்சலிலே ஒரு இணையத்தள முகவரி குறிப்பிடப்பட்டு அந்த இணையத்தளத்திலே உங்களைப் பற்றி இருக்கின்றது என்றும் எழுதப்பட்டிருந்திருக்கிறது.

குறிப்பிட்ட இணையத்தலத்தினை சென்று பார்த்தபோது அந்தப் பெண் அதிர்ந்து போனார். அது ஒரு செக்ஸ் தொடர்பான இணையத்தளம். அதிலே இந்தப் பெண்ணினுடைய புகைப்படங்கள், இவர் பற்றிய விபரங்கள் தொலைபேசி இலக்கம் என்று எல்லாமே போடப்பட்டிருந்திருக்கிறது. இப்படி சிலர் பெண்களை ஏமாற்றி அவர்களது விபரங்களை சில தேவையற்ற இணையத் தளங்களிலே சேர்த்து விடுகின்றனர்.

அடுத்து எனக்கு நடந்த ஒரு சம்பவம் இது அரட்டை மூலம் ஒரு வெளிநாட்டு நண்பர் எனக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார். அடிக்கடி என்னோடு தொலை பேசியிலும் அடிக்கடி பேசிக்கொள்வர். எல்லா விடயங்களையும் என்னோடு பகிர்ந்து கொள்வார். அவரது மின்னஞ்சல் கடவுச்சொல் எனக்குத் தெரியும். எனது மின்னஞ்சல் கடவுச்சொல் அவருக்குத் தெரியும் அப்படி  நல்ல நண்பர்களாகிவிட்டோம். சில காலம் அவரது தொடர்பு இல்லாமல் போய்விட்டது. அவரது மின்னஞ்சலும் கடவுச்சொல் மாற்றப்பட்டுவிட்டது. என் மின்னஞ்சலிலிருந்து எனது மின்னஞ்சலிலே இருந்த மின்னஞ்சல் முகவரிகளுக்கு தேவையற்ற படங்களை அனுப்பியிருக்கின்றார். இதனால் என் நண்பர்கள், உறவினர்கள் திட்டித் தீர்த்துவிட்டனர். சில நண்பர்கள் நான்தான் அனுப்பினேன் என்று நட்பையும் முறித்துக் கொண்டனர். எல்லாவற்றுக்கும் காரணம் நான் அதிகமாக எல்லோரையும் நம்பிவிடுவதுண்டு.


இன்னுமொரு சமுக இணையத் தளத்திலே எனக்கு பிடித்த முக்கியமான ஒரு நபர் இருக்கிறாரா என்று பார்ப்பதற்கு அவரது பெயரை தேடித் பார்த்தேன். அதிர்ச்சி அடைந்தேன். அந்த நபரது பெயரிலே யாரோ ஒருவர் வேண்டுமென்று தேவையற்ற படங்களை போட்டு தனது பக்கத்தை அலங்கரித்திருந்ததொடு அரை குறை ஆடைகளுடனான வெள்ளைக்கார பெண்களை நண்பர்களாக வைத்திருக்கின்றார். இப்படி எல்லாம் செய்கின்றார்கள். அதேபோல்தான் சில முக்கியமானவர்களின் பெயர்களிலே அரட்டையடிப்பது மட்டுமல்லாது சில தீய செயல்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். 

இன்று சிறுவர் முதல் பெரியோர் வரை இவ்வாறான அரட்டையிலே ஈடுபட்டு வருகின்றனர். சிலரோ தமது பொழுதை அரட்டையுடனே செலவிடுகின்றனர்.
read more...

Tuesday, 8 December 2009

தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா?.

கடந்த காலங்களிலே என்னால் இடுகையிடப்பட்ட பல இடுகைகளை தொகுத்து ஒரு இடுகையாகத் தருகின்றேன்.


பல சிறப்புக்களை கொண்ட தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் ஊடகங்களால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

தமிழ் மொழியோடு பிற மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதனையும் தமது நோக்கங்களிலே ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டும். இன்று பல ஊடகங்களும் ஊடகவியலாளரும் தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஆர்வம் காட்டிவரும் நேரம் சில ஊடகங்களிலே தமிழ் பயன்பாட்டைப் பார்க்கின்றபோது எல்லோருமே கவலைப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.

நாகரிக உலகில், நாமும் மாற வேண்டும் என்பதற்காக எமது தமிழ் மொழியினை மாற்றி அமைக்க முடியுமா. இன்று தமிழோடு ஆங்கில சொற்களை பயன்படுத்துவது ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. ஏன் தமிழ் மொழியில் பேசுவதிலே என்ன இருக்கிறது எமது மொழியை நாமே பயன்படுத்த வெறுக்கிறோம். இதற்கு சொல்லும் குற்றச்சாட்டு உண்மையான தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது என்று சொல்லி விடுவார்கள். நான் வேற்று மொழிகளை குற்றம் சாட்டவில்லை ஆங்கிலம் முக்கிய மொழியாக இருக்கலாம் எமது மொழியை மறப்பதா ஆங்கிலம் பேசவேண்டிய இடங்களில் பேசுவது தப்பு இல்லை. ஆனால் சிலர் பேசுவார்கள் தமிழ் வார்த்தைகள் 25 வீதமே கூட இருக்காது. இவர்கள் பேசுவது ஆங்கிலம் தெரியாத பாமர மக்களாக இருந்தாலும் அவர்களது பேச்சிலே மாற்றம் இருக்காது.

தந்தை பெரியார் அவர்களின் அச்சு எழுத்துக்களில் சிக்கனம் காரணமாக உருவானதுதான் தமிழ் சீர்திருத்த எழுத்துகள். னா, ணா, னை, ணை, லை, ளை போன்ற எழுத்துகள் சீர்திருத்தப்பட்டது. இவற்றை மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் MGR அவர்களால் அரசில் பரிந்துரை செய்யப்பட்டது. இன்று இவைகள் பயன்பாட்டில் இருக்கின்றது. நேற்று என் நண்பர்களிடம் பழைய னா, ணா, னை, ணை, லை, ளை எழுதிக்காட்டுங்கள் என்றேன். அவர்களால் ஞாபகத்திற்கு கொண்டு வரமுடியவில்லை அந்த அளவிற்கு மறக்கடிக்கபட்டுள்ளது.

மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பது உண்மையே. இதனை 100 வீதம் ஊடகங்களினால் சாத்தியப் படுத்த முடியும். பல ஊடகங்கள் இதில் வெற்றியும் கண்டன பல ஊடகவியலாளர்கள் தமிழை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். வெதுப்பகம், தொடருந்து, மகிழுந்து போன்ற பல தமிழ் சொற்களை இப்பொழுது ஊடகங்களில் பாவிப்பதனை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது. இதனை மக்கள் மத்தியிலே பிரபல்யப் படுத்தியது ஊடகங்களே. அப்படி இருக்கும் போது ஏனைய சொற்களையும் நாம் பயந்படுத்தும்போது மக்களும் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பதே உண்மை.

இன்று பலரது குற்றச் சாட்டாகவும் இருப்பது சில இலத்திரனியல் ஊடகங்களிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்பதே. உண்மையும் அதுதான் தமிழை வளர்க்க வேண்டியவர்கள். நேயர்களோடு பேசும்போது அதிகமாக ஆங்கில சொற்களை பிரயோகிப்பது ஏன். நான் அதிகம் அவதானித்த விடயம் சாதாரண ஆங்கிலம் தெரியாத மக்களோடும் ஆங்கிலத்தில் பேசுவது. இன்று தொலைபேசி பாவனை அதிகரித்து விட்டதனால் கிராமப்புற மக்கள் இலத்திரனியல் ஊடகங்களுக்கு தொலைபேசி அழைப்பினை எடுப்பது அதிகரித்து விட்டது. ஆனால் அவர்களை புரிந்து கொண்டு தமிழிலே பேசுவதை தவிர்த்து ஆங்கில வார்த்தைகளோடு சில அறிவிப்பாளர்கள் விளையாடுவதுதான் ஏன்.

சிலர் தாங்கள் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தவில்லை என்றால் மற்றவர்கள்தன்னை கீழ்த்தரமாக நினைப்பார்கள் என்று நினைக்கின்றனர். நவின உலகுக்கு ஊடகங்களும் மாறத்தான் வேண்டும். அதற்காக நாம் தமிழை சாகடிப்பதா. இன்று சில ஊடகங்களிலே சில அறிவிப்பாளர்கள் லகர, ழகர வேறுபாடு தெரியாமலே தமிழை கொலை செய்கின்றனர். இவர்கள் தமிழை வளர்ப்பவர்களா. எத்தனையோ திறமையானவர்கள் இருக்கும்போது ஏன் இவர்கள் உள் வாங்கப்பட்டனர். தமிழை வளர்க்க தமிழ் ஊடகங்கள் முன்வர வேண்டும்.

ஒரு போட்டி ஒரு தொலைக்காட்சியிலே நடந்தது அதிலே நடுவர் போட்டியாளரிடம் சொன்னார் உங்கள் தமிழ் உச்சரிப்பில் "பிலைகள்" இருக்கிறது திருத்துங்கள்என்று இவர் பிழை திருத்துகிறாரா. அல்லது தமிழ் கொலை செய்கிறாரா. அவரே தமிழ் கொலை செய்யும் போது எப்படி மற்றவரை திருத்துவது.

ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை வெதுப்பகம், தொடருந்து, உந்துருளி, மகிழுந்து போன்ற சொற்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக்கப் பட்டது ஊடகங்களால்தான் ஏனைய சொற்களையும் மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்துவதொடு தமிழ் மொழியினை ஊடங்களால் வளர்க்க முடியும் என்பதே உண்மை.

ஒரு சிலர் செய்கின்ற தவறுக்காக எல்லோரையும் குற்றம் சொல்வது சரியல்ல. தமிழ் கொலை செய்கின்ற ஊடகங்களும் ஊடகவியலாளரும் திருந்த வேண்டும். என்பதோடு நாகரிக மோகத்தில் தமிழ் மொழியோடு வேற்று மொழிகளை கலப்பதனையுமே நான் தவறு என்று சொல்கிறேன்.

வானொலி, தொலைக்காட்ட்சி போன்றவற்றிலே அறிவிப்பாளர்கள் விடுகின்ற மொழி உச்சரிப்பு, வேற்றுமொழிக் கலப்பு தொடர்பாகவே பலரும் பேசி இருந்தனர். இந்த இடத்திலே ஒன்றைக் குறிப்பிட வேண்டும் நானும் ஒரு ஊடகவியலாளன்தான், ஒரு அறிவிப்பாளன். நான் தமிழ் மொழி தவறாக உச்சரிப்பதனையும், ஆங்கில வார்த்தைகள் தேவையற்று அதிகம் பயன் படுத்துவதனையும் முற்றாக வெறுப்பவன். தமிழை தமிழாக பயன் படுத்த நினைப்பவன்

ஒரு சிலர் குறிப்பிட்டிருந்தார்கள் நாமும் நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாற வேண்டுமென்று. நான் மாற வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் எமது தமிழ் பாரம்பரியங்களையும், தமிழ் மொழியின் சிறப்பினையும் நாகரிகமென்ற போர்வையில் சாகடிப்பதா.

நான் வேற்று மொழிகளை முற்றாக புறக்கணிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆங்கில மொழியினை பயன் படுத்த வேண்டிய இடங்களுக்கு பயன்படுத்தத்தான் வேண்டும். அதற்காக தேவையற்ற விதத்தில் அதிகமாக பயன்படுத்தலாமா. இன்று ஆங்கில மொழியினை தமிழ் மொழியோடு பயன் படுத்துவது அதிகரித்து வருகின்றது. அன்று ஒரு பத்து வீதமாக இருந்தது என்று வைத்துக் கொள்வோம் இன்று இருபது வீதமாக அதிகரித்து விட்டது என்றால் எதிர் காலத்தில் தமிழோடு ஆங்கில மொழி பயன்பாடு அறுபது வீதமாக அதிகரித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம் அந்த மொழியினை தமிழ் மொழி என்பதா அல்லது வேறு ஒரு மொழி என்பதா? போகிற போக்கில் நடக்காமல் விடலாம் என்று சொல்ல முடியாது. தமிழ் மொழி மறைகின்ற நிலைக்கு தமிழர்களாகிய நாம் பங்காளிகளாக இருக்கலாமா.

சில ஆங்கில சொற்களை நாங்கள் பயன்படுத்தியே ஆகவேண்டும். இருந்தாலும் எமது தமிழ் மொழியிலே பல இனிய சொற்கள் இருக்கின்றன. ஒரு சிலரின் குற்றச் சாட்டு சில தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது அதனால் ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறோம் என்று. இக் கருத்தினை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று இலங்கையின் ஊடகங்களிலே தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. இன்னும் பல.. இனிய தமிழ் சொற்கள் பாவிக்கப்படுகின்றன. (வெளிநாட்டை பொறுத்தவரை எப்படி என்பது தெரியவில்லை) இந்த சொற்களை பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை எல்லோரும் இன்று ஏற்றுக் கொள்கின்றனர். இந்த சொற்களின் அறிமுகம் எப்போது வந்தது?. ஆரம்பகாலத்தில் இருந்து ஊடகங்களிலே அடிக்கடி  பயன்படுத்தப்பட்டு வந்ததா என்றால் இல்லை. அதிகமானவர்களுக்கு அன்று இந்த சொற்கள் தமிழிலே இருக்கின்றது என்பதே தெரியாது. என்னையும் சேர்த்து.

ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை. தமிழை வளர்ப்பதிலே பல ஊடகவியலாளர்கள் பாடுபட்டிருக்கின்றார்கள். அதன் பயனாகவே இன்று இந்தச் சொற்கள் மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.

ஊடகங்களிலே இது போன்ற பாவனையில் இல்லாத சொற்களை அறிமுகம் செய்கின்றபோது காலப்போக்கில் பாவனைக்கு கொண்டு வர முடியும். அதற்காக எல்லாச் சொற்களையும் வேற்று மொழிச் சொற்களையும் தமிழ் படுத்த முடியாது என்பதனையும் ஏற்றுக் கொள்கிறேன். அவற்றை ஒரு பக்கம் வைத்துவிட்டு தேவையற்ற வேற்றுமொழி கலப்பை தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து.

என் நாம் இன்று வலைப்பதிவுகளிலே இடுகை, அமுக்கவும் போன்ற இனிய சொற்களை பாவிக்கின்றோமே. இன்று இணையமும் கூட ஒரு வகையில் தமிழை வளர்க்கின்றது என்று சொல்லலாம்.

அடுத்து வானொலி, தொலைக்காட்சிகளிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்ற விடயத்துக்கு வருகின்றேன். நவின உலகத்துக்கு ஏற்றாற்போல் இன்று எல்லாமே மாறி வருகின்றன இதற்கு வானொலி தொலைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. கடுமையான போட்டித்தன்மைகளுக்கு மத்தியிலே தாம் நிலைத்திருக்க வேண்டுமானால். காலத்துக்கேற்ற சில மாற்றங்களையும் இன் நிறுவனங்கள் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.

இதற்காக இவர்கள் நினைத்த எதனையும் செய்யலாமா இன்று சிலர் தாம் நினைத்தபடி மாறுதல் என்ற பெயரில் தமிழ் கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். வானொலி, தொலைக்காட்சிகளின் போட்டித்தன்மை காரணமாக நிலைத்திருக்க வேண்டுமானால் சில ஊடக நிறுவனங்கள் மாற்றங்களை செய்யத்தான் வேண்டும். இன்று பல ஊடக நிறுவனங்கள் பேச்சுத்தமிழை பயன்படுத்துகின்றன. பேச்சுத்தமிழில் பேசுகின்றபோது எல்லோருக்கும் இலகுவாக விளங்கிக் கொள்ளமுடியும். இது ஒரு புறமிருக்க இதனை ஒரு சாட்டாக வைத்து வேற்று மொழி கலந்து பேசுவதை சில அறிவிப்பாளர்கள் கடைப்பிடிப்பதுதான் கவலைக்குரிய விடயம்.

சில அறிவிப்பாளர்கள் விடுகின்ற தவறுகளை சொல்வதென்றால் அதற்கென ஒரு வலைப்பதிவு தொடக்கி எழுதிக்கொண்டே போகலாம். அறிவிப்பாளர்கள் எல்லோரும் பிழை விடுவதில்லை, தமிழை கொலை செய்வதில்லை சில அறிவிப்பாளர்கள் இருக்கின்றார்கள் லகர ழகர ளகர தெரியாமல் திண்டாடுகின்றனர். அது மட்டுமல்ல சில தமிழ் சொற்கள் அவர்களின் வாயில் இருந்து வருவதற்கு கஸ்ரப்படுகிறது.

சில அறிவிப்பாளர்கள் இனிய தமிழை மறந்து அளவுக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துவது என். இவர்களுக்கு தமிழ் தெரியாதா. தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் தமிழ் அறிவிப்பாளராக வந்தார்கள். ஆங்கில அறிவிப்பாளராக போயிருக்கலாம்தானே. இவர்கள் விடுகின்ற தவறுகளும் ஓட்டு மொத்த அறிவிப்பாளர்களையும் பாதிக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து திருந்துவதே நல்லது (திருந்துவார்களா?)

தமிழ் மொழியின் சிறப்புக்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்பு வாய்ந்தது தமிழ் மொழி. வேற்று மொழிகளை தமிழோடு தேவையற்ற முறையிலே அதிகமாகப் பிரயோகிக்கப்படுகிறது ஏன் என்பதுதான் எனது கேள்வி.

வேற்று மொழி பேசுபவர்கள் எமது தமிழ் மொழியினை தங்கள் மொழியோடு கலந்து பயன் படுத்துகிறார்களா. இல்லையே சில தமிழ் சொற்களை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கின்றார்கள். அப்படி என்றால் தமிழ் மொழிக்கு சொற் பஞ்சம் இருக்கிறதா?

எமது தமிழ் அறிஞர்கள் எல்லோரும் ஏனைய மொழிகளையும் படிக்கவேண்டும் என்று சொன்னார்களே தவிர தமிழ் மொழியோடு கலந்து பயன் படுத்தும் படி சொல்லி இருக்கின்றார்களா.

இன்று பல சிறப்புக்கள் மிக்க எமது தமிழ் மொழியின் சில சொற்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதற்கு யார் காரணம். நாம்தான் காரணம். நாகரிகமென்ற போர்வையில் வேற்று மொழிகளின்பால் நாம் ஈர்க்கப்பட்டதே முக்கிய காரணம்.

இன்று நாம் தமிழ் இலக்கியங்களை வெறுப்பதற்கு என்ன காரணம் அதிலே பயன்படுத்தப்பட்டிருக்கின்ற சொற்களுக்கு விளக்கம் தெரியாமையே முக்கிய காரணம். நான் கேட்கின்றேன் அன்று தமிழ் அறிஞர்கள் மக்களிடம் பாவனையில் இல்லாத சொற்களை ஏன் பயன்படுத்தவேண்டும். அன்று அந்தச் சொற்கள் பயன் பாட்டில் இருந்ததே காரணம். அன்று இலக்கியங்களிலே வேற்று மொழி கலப்பு இருந்ததா?. இல்லையே.

ஆனாலும் இன்று கிராமப் புறங்களிலே அந்தச் சொற்களை எமது முன்னோர்கள் பயன் படுத்துவதை கானக்கூடியதாக இருக்கின்றது. இன்றைய நாகரிகம்தான் எம்மை மாற்றிவிட்டது.

சில சொற்களுக்கு தமிழ் படுத்த முடியாது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடுகளின் விஞ்ஞான கண்டு பிடிப்பு, அவர்களின் பொருட்களுக்கு எங்களால் தமிழ் சொல்லை தேடிக்கொண்டு இருக்கமுடியாதுதான். ஆனால் காலப்போக்கில் அதற்கும் தமிழ் சொற்களை அறிமுகப் படுத்த முடியுமல்லவா. computer என்பது தமிழ் வார்த்தை இல்லை அது காலப்போக்கில் கணணி அல்லது கணினி என்று நாம் தமிழ் படுத்தவில்லையா.

சில தமிழ் சொற்களுக்கு அகராதிகளைத்தான் தேடி பொருள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கின்றீர்கள். அப்படி என்றால் அன்று இலக்கியங்களை எல்லோரும் படித்தார்கள். அன்று குருகுல முறையிலே ஒரு குருவின் வழிகாட்டலுக்கமைய படித்தவர்களே எமது தமிழ் அறிஞர்கள் பலர்.

அன்று அவர்கள் அகராதியும் கையுமாகவா திரிந்தார்கள். இல்லையே இந்தச் சொற்கள் பாவனையில் இருந்தது என்பதே உண்மை. சரி அவர்கள் அகராதி கொண்டுதான் படித்தார்கள் என்றால் இன்று ஏன் எங்களால் அந்த அகராதிகளை எங்களால் பயன்படுத்த முடியாது.

அன்று எமது தமிழ் மொழிச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தது என்பது புலனாகின்றது. இதற்கும் காரணம் நாமேதான்.

சரி புத்தகங்கள் தமிழில் இல்லை என்றால் அது யாரில் தவறு இருக்கிறது. தமிழிலே புத்தகங்களை எழுதுவதற்கு தமிழிலே நல்ல பொறியியலாளர்கள் இல்லையா. இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தமிழ் மொழியை விட்டு விலகி ஆங்கில மொழியின்பால் சென்றதே காரணம்.

எனது கேள்வி இன்று கணணி மென் பொருட்கள் கூட தமிழிலே அதுவும் அற்புதமான தமிழ் சொற்களைக்கொண்டு வடிவமைக்கப் படுகின்ற போது தமிழிலே சில துறைகளுக்கு புத்தகங்கள் இல்லை என்பது ஏன். உலகத்துக்கே நல்லா கருத்துக்களை சொல்லக்குகூடிய எத்தனையோ புத்தகங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறது தமிழ் மொழி. ஆனால் நாமே இன்று தமிழ் மொழியினை கொலை செய்து கொண்டு இருக்கின்றோம்.


தமிழ் மொழியினை வளர்க்க வேண்டும். தமிழ் மொழி தமிழ் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது அவா.
read more...

இப்படியும் சில ஆசிரியர்கள்...


இன்று இலங்கையின் கல்வியைப் பொறுத்தவரை மேலதிக வகுப்புக்கள் என்பது பலராலும் விரும்பப்படுகின்ற ஒன்றாகிவிட்டது. இருந்தாலும் சில ஆசிரியர்கள் இதனைப் பயன் படுத்தி தேவையற்ற விதத்திலே பிழைப்பு நடாத்துகின்றனர்.

இன்றைய கால கட்டத்திலே மாணவர்களைப் பார்த்தால் வகுப்பு வகுப்பு என்றே அலைவார்கள். இது ஒரு வகையில் நல்ல விடையமாக அமைந்தாலும் சில தவிர்க்க முடியாத நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன.
சில ஆசிரியர்களைப் பொறுத்தவரை பாடசாலை தவிர்ந்த வேறு நேரங்களில் மாணவர்களுக்கு இலவசமாக மேலதிக வகுப்புக்களை வைப்பார்கள். இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இவர்களுக்கு எதிர் மாறான ஆசிரியர்கள் இல்லாமல் இல்லை. சில ஆசிரியர்கள் கல்வி நிலையங்களில் மேலதிக வகுப்புக்களை நடாத்துபவர்களாக இருக்கின்றனர். இவர்கள் சில தந்திர உபாயங்களை வைத்திருக்கின்றனர். பாடசாளைகளையிலே இவர்கள் கல்வி நிலையத்திலே வகுப்பு நடாத்தும் பாடத்தினை மேலோட்டமாகவேதான் படிப்பிக்கின்றனர். விளக்கமாக கல்வி நிலையத்திலே படிப்பிக்கின்றனர். காரணம் பாடசாலையில் விளக்கமாக படிப்பிக்கின்றபோது தனது கல்வி நிலையத்துக்கு மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதனால். இவ்வாறான சில ஆசிரியர்களோ பாடசாலையில் எதனையும் படிப்பிக்கமாட்டார்கள். விளக்கமாக கல்வி நிலையத்திலே சொல்லித்தருவதாக சொல்லிவிடுவார்கள்.

 கல்வி நிலையங்களிலே மேலதிக வகுப்புக்களை வைக்காத சில ஆசிரியர்களே பாடசாலையில் ஒழுங்காக படிப்பிப்பதில்லை. கல்வி நிலையங்களிலே விளக்கமாக மாணவர்களுக்கு படிப்பிக்கப்படுகின்றன என்று தாங்கள் படிப்பிக்கமாட்டார்கள். இதனால் அதிகமாக ஏழை மாணவர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
அதிகமாக வறிய மாணவர்கள் கல்வி நிலையங்களிலே கட்டணம் அதிகம் என்பதனால் அந்த வகுப்புக்கு செல்வது மிக, மிகக் குறைவு அவர்கள் முற்று முழுதாக பாடசாலையையே நம்பி இருக்கின்றனர்.  பாடசாலையிலும் படிப்பிக்கப்படாதபோது வறிய மாணவர்கள் தமது கல்வியை இழக்கவேண்டி ஏற்படுகின்றது.

சில ஆசிரியர்கள் குறுகிய நேரத்தில் அதிக பணம் அறவிடுகின்றனர். பல கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றனர். இன்று சமுகத்தில் பாடசாலைக் கல்வியைவிட மேலதிக வகுப்புக்களை நாடிஷ் செல்லும் பழக்கம் ஒரு நாகரிகமாகவே மாறிவிட்டது.
சில ஆசிரியர்களும் இதனைப் பயன்படுத்தி உழைக்கப் பழகிக் கொண்டனர்.

இதே போன்றுதான் சில பாடசாலைகளிலே சில பாடங்கள் திணிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட பாடங்களை மட்டும்தான் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றது. எனக்கும் இந்த நிலை ஏற்பட்டதுண்டு. நான் உயர்தரம் வணிகப்பிரிவு படித்தேன். ஆனாலும் எனக்கு தமிழும் ஒரு பாடமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எடுக்க முடியும் ஆனால் பாடசாலையில் எடுப்பதற்கு மறுத்துவிட்டார்கள். 


இந்த நிலை மாற வேண்டும் ஆசிரியர்கள் தங்கள் நலனில் மட்டும் அக்கறை செலுத்துவதை விடுத்து மாணவர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.
read more...

Monday, 7 December 2009

பேச்சுத் தமிழுக்கு இனிமை சேர்க்கும் "கா"

இன்று முதல் யாழ்தேவியின்  நட்சத்திரப் பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் யாழ்தேவி நிர்வாகத்திற்கு எனது நன்றிகள். 


எனது முன்னைய பதிவொன்று மீண்டும் பதிவாகிறது. இன்னும் ஓரிரு மணித்தியாலங்களில் எனது அடுத்த பதிவு வரும்...



ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன.

மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. (ஏனைய பிரதேசங்களிலும் இருக்கலாம் இருந்தால் பின்னூட்டங்களில் தரலாம் நண்பர்களே)

உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னாகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா, தெரியுமா - தெரியுமாகா, சாப்பிட்டாச்சா - சாப்பிட்டாச்சாகா போன்று "கா" சேர்த்து பயன் படுத்தப்படுகிறது.

இங்கே பேசுகின்ற போது ஆணுடனோ, பெண்ணுடனோ பேசுவதாக இருந்தாலும் கா போட்டே பேசுகின்றனர். இப்போது இவ்வாறு கா போட்டுப் பேசுவது இளைய சமுதாயத்திடம் குறைவான பயன்பாட்டில் இருந்தாலும். வயது வந்தவர்களாலும், கிராமப்புறங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

என்ன என்பதற்கும் என்னகா என்பதற்கும் இடையிலே ஒரு அன்பு அல்லது பாசப்பிணைப்பு வித்தியாசங்கள் இருப்பதாக உணரப்படுகின்றது. என்ன என்பதனைவிட என்னகா என்பது பேசுபவர்களுக்கிடையே ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்துகின்றது. என்ன என்பது நாம் பேசும் தொனியிலே வித்தியாசப் படுகிறது. என்ன என்று கோபமாகவும் கேட்கலாம் சந்தோசமாகவும் கேட்கலாம். என்னகா எனும்போது பெசுபவர்களுக்குள்ளேயான உறவு அல்லது அன்பு நெருக்கமடைவதாக உணர்கின்றனர்.

இன்றும் கிராமப் புறங்களிலும், முதியவர்களாலும் கா சேர்த்து சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல பிரதேச பேச்சு வழக்குச் சொற்கள் இருக்கின்றன அவற்றையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.
read more...

Thursday, 26 November 2009

என்னைக் கதை சொல்ல சொன்னால்....

சுசி அக்கா நான் பதிவெழுத வந்த கதையினை சொல்லும்படி தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றார். அவருக்கு முதலில் நன்றிகள்.

இணைய இணைப்பு இருந்தும் எனக்கு வலைப்பதிவுகள் பற்றி அவ்வளவாகத் தெரியாத காலம். என் பொழுதுகள் அதிகம் இணையத்தில்தான். புதிய விடயங்களை அறிந்து கொள்வதிலும் உள்நாட்டு, உலக நடப்பு விவாகாரங்களையும் அறிந்து கொள்வதோடு அவ்வப்போது அரட்டை அடிக்காமலும் விடுவதில்லை (அரட்டையில் பல கதைகளே இருக்கிறது)

துணிவும், தன்னம்பிக்கையும், தமிழ் பற்றும்  என்னோடு கூடப் பிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும். என்னில் எனக்கு மட்டுமல்ல என் நண்பர்களுக்கே என்னிடம்  பிடிக்காத விடயம் நான் அநீதிகளை யாராக இருந்தாலும்  தட்டிக் கேட்பதுதான். இதனால் பல பிரஷ்சினைகளுக்கும் முகம் கொடுத்ததுண்டு.

மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள், அவலங்களை வெளி உலகுக்கு கொண்டு செல்லவேண்டும், அநீதிகளை  வெளி உலகுக்கு கொண்டு செல்லவேண்டும் என்கின்ற ஆதங்கம் அதிகம். இதனால் நான் ஒரு பத்திரிகையாளராக வரவேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளே இருந்தது ஆனால் என் நண்பர்களும் என் குடும்பத்தாரும் தடுத்துவிட்டனர்.

இருந்தாலும் நான் ஒரு இணையத்தளத்தினை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இணையத்தளத்தினை உருவாக்குவதட்குரிய வேலைகளை செய்து கொண்டிருக்கும்போதுதான் நண்பர் பிரபா என்னிடம் வலைப்பதிவு பற்றி சொன்னார். பிரபாவுக்கு நன்றிகள்.

அந்தவேளையில் பிரபா வலைப்பதிவினை உருவாக்கி இருந்தார் அவருக்கும் வலைப்பதிவு பற்றிய போதிய அறிவு இருக்கவில்லை. அவர் வலைப்பதிவு பற்றி சொல்லிய அன்றிரவே வலைப்பதிவை உருவாக்கிவிட்டேன் ஆனால் எனக்கு தமிழிலே தட்டச்சு செய்யத் தெரியாது. அவற்றைக் கற்பதற்கே இரண்டு வாரங்கள் சென்றுவிட்டன.

பின்னர் http://www.google.co.in/transliterate/indic/Tamil முலமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொண்டேன் (இன்றும் அதனைத்தான் பயன்படுத்துகின்றேன்) அப்போது எனக்கு அவ்வளவாக வலைப்பதிவுகளை தெரியாது. கருத்துரையிடுதல் எதுவுமே  தெரியாது. அப்போது பிரபா மூலம்  லோஷன் அண்ணாவின் வலைப்பதிவு முகவரியை அறிய முடிந்தது. அப்போது அதிக நேரம் அவரது வலைப்பதிவிலேதான் செலவு செய்தேன். எவ்வாறு பதிவிடுதல். போன்ற விடயங்களை அவரது வலைப்பதிவு மூலமாகத்தான் அறிந்து கொண்டேன். நான் அடிக்கடி லோஷன் அண்ணாவைப் பற்றி சொல்வதனால் தவறான  கண்ணோட்டத்தில் எவரும் பார்க்கவேண்டாம். நாம் நல்ல மனிதர் ஒருவரை பின்பற்றும்போது நாங்கள் எங்களை வளர்த்துக்கொள்ள முடியும். பதிவுலகில் அவரது வலைப்பதிவும், அவர்  எனக்கிடுகின்ற கருத்துரைகளும் என்ன வளர்த்துக்கொள்ள உதவியது.

நான் பதிவுலகுக்கு வந்து தமிழர் கலை, கலாசாரங்களையும், தமிழ்மொழி பற்றியும், எமது மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளையும், அவலங்களையும் பதிவிட வேண்டும் என்று பதிவுலகுக்கு வந்தேன். சில விடயங்களை பதிவிட முடியாது இருக்கின்றபோது கவலைதான். நகைசுவை , சினிமா மற்றும் விளையாட்டு பதிவுகளை தவிர்த்து வந்தபோதும் அவற்றையும் பதிவிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. காரணம் எல்லோரையும் என் பதிவுப் பக்கம் திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணமே. அவ்வப்போது ஒரு சில நகைசுவை பதிவுகளை இடுகையிட்டபோது. சில நண்பர்களை இழக்கவேண்டி ஏற்பட்டது.

ஆரம்பத்திலே வைத்திருந்த எனது பதிவு தொலைந்துவிட்டது. இப்போது புதிய வலைப்பதிவிலே இருக்கிறேன். ஆரம்ப காலங்களிலே திரட்டிகளில் இணைப்பது பற்றி எதுவுமே தெரியாது. இரண்டு மாதங்களின் பின் திரட்டிகளில் வாக்களிப்பதற்கான வாக்களிப்பு பட்டையை என் வலைப்பதிவிலே இணைத்துவிட்டேன். அவ்வளவுதான். ஒரு மாதம் வரைக்கும் பதிவுகளை இணைப்பது பற்றித் தெரியாது. பின்னர் எல்லாவற்றையும் ஓரளவு கற்றுக் கொண்டேன்.

ஆரம்ப காலங்களிலே நான் பல வலைப்பதிவுகளுக்கு சென்றாலும் கருத்துரையிடுவதில்லை. ஆனால் தானாகவே எனது வலைப்பதிவுக்கு வந்து பல நண்பர்கள் ஊக்கப்படுத்தினார்கள். அவர்களிலே பிரபா, சிந்து, கலை, சசி, சக்கரை சுரேஷ், காயத்திரி போன்றோர் என்னை ஊக்கப்படுத்தி இருக்கின்றனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.

நான் புதிய வலைப்பதிவுக்கு வந்தபோது நிறையவே நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் சொல்வதென்றால் தொடர் பதிவே இட வேண்டும். அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இருந்தபோது ஒருவருக்கு நான் நன்றி சொல்லவேண்டும். இவரிடம் வலைப்பதிவு இல்லை என்னை ஆரம்ப காலம் முதல் எனக்கு கருத்துரைகள் மூலம் ஊக்கப்படுத்திவரும் கலா அவர்களுக்கு நன்றிகள். இவர் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் நான் விடுகின்ற சின்ன பிழைகளை கூட சுட்டிக்காட்டி திருத்துகின்ற ஒருவர். இவர் என் இடுகைகளிலே ஒரு எழுத்துக்குட பிழையாக இருக்கக் கூடாது என்று நினைப்பவர்.

எனக்கு இணையத்தளம், பிளாக்கர் தொடர்பான எந்த விதமான அறிவுமே இல்லை. (பொதுவாக தொழிநுட்பமே தெரியாது) இவைகளை அறிய வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அப்போது எந்த ஒரு தொழிநுட்ப பதிவுகளையும் விட்டு வைக்கவில்லை அனைத்தையும் தேடிப்படிப்பதுண்டு.

இதற்காக நான் தினமும் தமிழிஸ் திரட்டியின் தொழிநுட்ப பதிவுகளைப் பார்த்து வருகின்றேன். அப்பதிவுகளுக்கு சென்று அந்தப் பதிவரால் இடுகையிட்ட அத்தனை இடுகைகளையும் பார்ப்பதுண்டு அதனால் நிறையவே என்னை வளர்த்துக்கொள்ள முடிந்தது.

ஆரம்ப காலங்களிலே எனது வலைப்பதிவிலே பின்தொடர்வோர் கட்ஜெட் இருக்கவில்லை. இவற்றை இணைக்கவேண்டும் என்று இணைப்பதற்கான வழிகளை பல நாள் முயற்சியின் பயனாக தேடலின் மூலம் ஒரு வலைப்பதிவிலே கண்டுபிடித்துவிட்டேன். புதிய பதிவார்கள் பயன்பெற வேண்டும் என்று எவ்வாறு அந்த கட்ஜெட் எவ்வாறு இணைப்பது என்று ஒரு பதிவுமிட்டேன்.

இதுதான் அந்தப் பதிவு..

அதே போன்றுதான் எனக்கும் கூகிள் விளம்பரங்களை எனது வலைப்பதிவுக்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கூகிள் விளம்பரங்களுக்காக பதிவு செய்தேன் இன்னும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அறிந்தேன் ஆங்கிலப் பதிவுகளுக்கு உடனடியாக கூகிள் விளம்பரங்கள் கிடைப்பதாக அறிந்தேன். எனக்கு ஆங்கிலப் பதிவுகள் எழுதுமளவுக்கு அறிவு இல்லை என்பதனால் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஒரு எண்ணம் தோன்றியது ஆங்கில பதிவு ஆரம்பிக்கலாம் என்று. ஆரம்பித்துவிட்டேன் சினிமா நடிகர், நடிகைகளின் படங்களை இடுகையிட்டேன். நிறையவே பார்வையாளர்கள் வந்தார்கள் கூகிள் விளம்பரத்துக்கு பதிவு செய்தேன் அடுத்த நாளே அனுமதி கிடைத்தது. அந்த அந்த கணக்கு மூலம் எனது இந்த வலைப்பதிவிலே கூகிள் விளம்பரங்களை போட்டிருக்கிறேன்.

கூகிள் விளம்பரங்களை பெற விரும்பும் பதிவர்கள் இலகுவாக இந்த முறை மூலம் கூகிள் விளம்பரங்களை பெற முடியும் நான் இதுவரை நான்கு வலைப்பதிவுகளுக்கு கூகிள் விளம்பரம் பெற்றிருக்கிறேன் இந்த முறை மூலம். பதிவு செய்து அடுத்த நாளே அனுமதி கிடைத்துவிடும். பின்னர் எமது தமிழ் வலைப்பதிவுகளில் பயன்படுத்த முடியும்.

பதிவுலகிலே சில விடயங்கள் என்னை கவலையடைய வைத்ததுண்டு. நான் எவரையும் ஒரு போதும் தனிப்பட்ட ரீதியில் தாக்கி பதிவிட்டதில்லை என் கருத்துக்களை சொல்கின்றேன். யார் ஏற்றுக்கொள்ளக் கூடிய விமர்சனங்களை முன் வைத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் சில பெயர் குறிப்பிடாதவர்கள் தேவையற்ற விதத்திலும், தகாத வார்த்தைகளாலும் கருத்துரை இடுகின்றனர்.


சில மிரட்டல்கள் என்று இன்னும் பல விடயங்களை சொல்லலாம். இந்த தாக்குதல்களால் இன்னும் எழுத வேண்டும் எண்ணமே வந்தது.

இந்த பதிவுலகிலே உலகெங்குமிருந்து பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர் அவர்களுக்கு எனது நன்றிகள். எழுத்துத் துறையிலே இன்னும் நான் வளரவேண்டும் என்று நினைக்கின்றேன். இன்னும் என்னை வளர்த்துக்கொள்வேன். நல்ல விடயங்களை பதிவிடவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது என்றும் நண்பர்களின் ஆதரவும் இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.


இந்த தொடர் பதிவினை தொடர்வதற்கு நான் யாரையும் அழைக்கவில்லை. பலர் பதிவிட்டு விட்டார்கள். தொடர விரும்பும் யாரும் தொடரலாம்.
read more...

Wednesday, 25 November 2009

இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன?

எனது ஆரம்பகாலப் பதிவொன்று மீண்டும் பதிவாகிறது...


இந்தப்பதிவு மூலமாகவும் சிறுவர்கள் பற்றியே பேசப்போகின்றேன். என்னடா இவன் சிறுவர்கள் பற்றியே பேசிக்கொண்டு இருக்கின்றான் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. எமது சிறுவர்கள் பல்வேறு வழிகளிலே பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.அவர்களைப் பற்றிவும் அவர்களின் எதிர்காலம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எமது சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுகின்ற வீதம் அதிகமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளிலேதான் இந்நிலை அதிகமாகக் காணப்படுகின்றது

நாட்டில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தம் முக்கிய காரணம் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதற்கில்லை. இதைத்தவிர இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.


ஆறாம் ஏழாம் தரங்களிலே கல்வி கற்கின்ற சிறுவர்களே அதிகமாக பாடசாலையை விட்டு இடை விலகிச் செல்கின்றனர். இதன் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது ஆறாம், ஏழாம் தரங்களுக்கு வருகின்றபோதே அவர்களுக்கு சமுகத்தை பற்றிய உணர்வு தோன்றுகின்றது. அவர்கள் ஆறாம்,ஏழாம் தரங்களை அடையும் வரை அவர்கள் தாங்கள் எழுத வாசிக்க தெரியாமல் இருக்கின்றோமே படிக்கவேண்டுமே என்று சிந்திக்காமல் விளையாட்டுத்தனமாக இருந்து விடுகின்றனர்.

இவர்கள் சமுகத்தை பற்றிய உணர்வு வருகின்ற போது. தாங்கள் எழுத வாசிக்க தெரியாமல் இருக்கின்றோமே, என்ற ஒரு சிந்தனை தோன்றுகின்றது. இவர்கள் பாடசாலையை விட்டு விலக நினைக்கின்றார்கள். காரணம் வகுப்பிலே இருக்கின்ற சக மாணவர்கள் தங்களை கேலியாக பார்ப்பார்கள், தாங்கள் கேலி நிலைக்கு சென்று விட்டோமே என்ற ஒரு மனப் பாண்மை தோன்றுகின்றது. இதனால் படிப்படியாக பாடசாலையை விட்டு இடை விலகுகின்றனர்.

இவ்வாறு இடை விளகுகின்றவர்களின் நிலை .கேள்விக்குறியாகின்றது இவர்கள் பல்வேறு பட்ட பிரட்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இது ஒரு புறமிருக்க. இவர்கள் இவ்வாறு இடை விலகுவதை தவிர்ப்பதற்குரிய வழிகளை ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.


இவ்வாறு இடை விளகுபவர்களின் வீதம் கிராமப்புரங்களிலேதான் அதிகமாகக் காணப்படுகின்றன. இவர்களை பற்றி ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது. இவர்களது பெற்றோரும் கல்வியிலே பின் தங்கி இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. இவர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியிலே அக்கறை செலுத்தாதவர்களாக இருக்கின்றனர். முதலிலே இப்படியான பெற்றோருக்கு சிறுவர்களின் கல்வியின் அவசியம் பற்றி. பல விழிப்புணர்வுக் கருத்தரங்கு போன்ற பல்வேறு செயற்பாடுகளை செயட்படுத்த வேண்டி இருக்கின்றது.

அத்தோடு நாங்கள் உடனடியாக இடைவிலகிய சிறுவர்களை பாடசாலையில் சேர்த்துக் கொள்வதனால் அவர்கள் மீண்டும் இடை விலகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுக்கின்றன. முதலிலே இவர்களை தனிப்பட்ட ரீதியிலே அணுகி இவர்களை எழுத வாசிக்க பழக்க வேண்டும். பல சிறுவர்கள் நன்றாக படிக்கக்கூடியவர்கள் இன்று பாடசாலையை விட்டு இடை விலகியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு இன்று கல்வியிலே முன்னிலையில் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை தனிப்பட்ட ரீதியிலே எழுத வாசிக்க பழக்கிய பின்னர் அவர்களை பாடசாலையில் சேர்க்கின்ற போது அவர்களது மனதிலே இருந்த படிக்கத் தெரியாதவர்கள் என்ற குற்ற உணர்வு நீங்குகின்றது. கல்வியிலே முன்னிலைக்கு வரக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இதில் பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்கள் தொடர்பாக பல்வேறு செயத் திட்டங்களை மேற்கொண்டு வரும் களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் வெற்றியும் கண்டுள்ளது. பல இடை விலகிய மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களை பாடசாலைகளிலே மீண்டும் சேர்த்து இன்று கல்வியிலே நல்ல நிலையில் இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.


இன்னும் பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். காரணங்களையும் தடுப்பதற்குரிய வழிவகை என்ன?... அவ்வப்போது உங்களுக்காக வந்து சேரும்.


படங்கள் பல இணையத் தளங்களிலிருந்து பெறப்பட்டவை.

read more...

Tuesday, 24 November 2009

நமக்காக நாம். மீண்டும் சந்திப்போம்.


இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு


இலங்கைப் பதிவார்கள் அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்த பதிவர் சந்திப்பு - 2 எதிர்வரும் 13 ம் திகதி தேசிய கலை இலக்கியப் பேரவை, (வெள்ளவத்தை) இடம்பெற இருக்கின்றது. இச் சந்திப்பிலே பல விடயங்கள் இடம்பெற இருக்கின்றன. இலங்கையின் அனைத்து தமிழ் வலைப் பதிவர்களும் அன்றைய தினம் ஒன்றாக சந்திப்போம்.

சந்திப்பு தொடர்பான விபரங்களை தருகின்றேன்....

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)

காலம் : டிசம்பர் 13 (தமிழ் கார்த்திகை 27) , மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )

நிகழ்ச்சி நிரல்

• அறிமுகவுரை
• புதிய பதிவர்கள் அறிமுகம்
• கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
• கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள்
• சிற்றுண்டியும் சில பாடல்களும்
• கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
• கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
• பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
• உங்களுக்குள் உரையாடுங்கள்

பதிவர்கள் தங்கள் வருகையை  அமைப்புக்குழுவினரில் ஒருவருக்கு தொலைபேசியோ, நேரிலோ அல்லது ஏதோ ஒரு வழியிலோ தெரிவித்தால் நலம்பெறும்.

எம்மால் எமக்காக நடாத்தப்படும் இந்தச் சந்திப்பை சிறப்பாக நடாத்த பதிவர்கள் குறைந்தது நூறு ரூபாய்களாவது கொடுத்து சிறப்பாக நடாத்துங்கள்.

இந்தப் பதிவர்சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

அதன் சுட்டி http://livestream.com/srilankatamilbloggers
இம்முறை அமைப்புக் குழுவினர்

கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.
read more...

Monday, 23 November 2009

இவர் பின்னால் ஒரு கூட்டமே இருக்கு



இன்று வலைப் பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தபோது. நண்பர் வந்தியின் வலைப் பதிவைப் பார்த்ததும் மனதிலே மிகவும் சந்தோசமாக இருந்தது. நான் அதிகம் நேசிக்கின்ற லோஷன் அண்ணாவுக்கு சாகித்திய விருது கிடைக்கப்போகின்றது என்ற சந்தோசமான செய்தியை நண்பர் வந்தியின் வலைப்பதிவு முலமாக அறிந்து  கொண்டேன். லோஷன் அண்ணாவைப் பற்றி நீண்ட நாட்களாக பதிவிட வேண்டும் என்ற ஆவலோடு இருந்த நான் இன்று அவரைப் பற்றி சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான் சிறு வயதிலிருந்தே (என் நினைவு தெரிந்த நாள்முதல்) வானொலிக்கு அடிமையான ஒருவன். அன்று முதல் இன்றுவரை பல ஒலிபரப்பாளர்களால் அறிவிப்புத் துறைக்கு  ஈர்க்கப்பட்டவன். அதன் பயனாக இன்று நானும் ஒரு ஒலிபரப்பாளன்.

நான் ஒலிபரப்புத் துறைக்கு ஈர்க்கப்படுவதட்கு முதல் காரணமாக இருந்தவர் கே. எஸ். ராஜாவாக இருந்தாலும். நான்  ஒலிபரப்புத் துறைக்கு போக வேண்டும் என்று அதிக ஆசையை என்னுள்ளே வளர்ப்பதற்கு காரணமானது லோஷன் அண்ணாவின் அறிவிப்புத்தான்.


எப்பொழுதும் என் கையில் ஒரு சிறிய வானொலி பெட்டி  இருக்கும் சாப்பிடும் போதும்,படிக்கும்போது, எங்கேயாவது போவதென்றாலும் கையிலே அந்த வானொலிப்பெட்டி இருக்கும். அந்தளவுக்கு   வானொலிமீது காதல் கொண்டவன். சுனாமி வந்தபோது நான் எடுத்துக்கொண்டு ஓடிய ஒரு பொருள் வானொலிப் பெட்டி மட்டுமே.

நான் சிறு வயது முதல் இலங்கை ஒலிபரப்புக்  கூட்டுத்தாபன நிகழ்சிகளை கேட்டு வருவேன்.  தனியார் வானொலிகள் வந்தபோதும் ஒரு போதும்  என்ன நிகழ்சிகள் தனியார் வாநோளிகளிலே போகின்றது என்று கூட ஒரு போதும் பார்த்ததில்லை.

ஒருநாள் காலையில் எதிர் பாராத விதமாக வானொலியைக் கிறுக்கிக் கொண்டிருக்கும்போது சக்தி வானொலி என்னை அறியாமலேயே பிடிபட்டது. அப்போது எப்படி நிகழ்சி போகிறது என்று 5 நிமிடம் பார்ப்போம் என்று இருந்த எனக்கு மாற்றுவதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. ஒரு போதும்  என்னால் அறியப்படாத ஒரு குரல் மிகவும் சிறப்பான முறையிலே நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதை பார்த்ததும் தொடர்ந்து அவரது நிகழ்சிகளை கேட்கவேண்டும் என்ற ஆவல் என்னுள்ளே வந்தது. தொடர்ந்து சக்தியின் நிகழ்சிகளை கேட்க ஆரம்பமானேன்.

அவரால் நிகழ்சிகள் தொகுத்து வழங்கப்படும் விதம். வழங்கப்படும் தகவல்கள், குரல் எல்லாமே என்னை கவர்ந்து விட்டன. ஆனாலும் நான் பாடசாலைக்கு செல்வதால் அவரது காலை நேர நிகழ்சிகளை கேட்க முடியவில்லையே என்ற கவலைதான். அப்போது என்னுள்ளே ஒரு எண்ணம் தோன்றியது. ஒளிப்பதிவு செய்யக்கூடிய ஒரு வானொலிப் பெட்டியை வாங்கினால் நான் இல்லாத நேரம் வீட்டில் உள்ளவர்களால் நிகழ்சிகளை ஒலிப்பதிவு செய்ய முடியும்  நான் வந்து கேட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. செயலிலும் இறங்கிவிட்டேன்.

நிகழ்சிகளை நேரடியாக கேட்க முடியாவிட்டாலும் ஒலிப்பதிவு செய்து கேட்பதிலே சந்தோசம் இருந்தது.  அவரால் சக்தி வானொலியிலே செய்யப்பட்ட வணக்கம் தாயகம், ஆனந்த இரவு போன்ற நிகழ்சிகள் இன்றும் என்னால் மறக்க முடியாத நிகழ்சிகளே. என்னை பிரமிக்க வைத்த அமாவாசை இரவு நிகழ்சி என்றும் என்னால் மறக்க முடியாது. ஒரு பேய் பங்களாவுக்குள்ளே ஒரு அமாவாசை இரவிலே ஆய்வு செய்ய புறப்பட்ட குழுவின் துணிச்சலை பார்த்து வியந்ததோடு இப்போது நினைக்கும்போதும் அவர்கள் அத்தனை பேரினதும்  திறமைகளையும் பாராட்டவேண்டும்.

அப்போது எதிர்பாராதவிதமாக எனக்கு கிடைத்த ஏமாற்றம் லோஷன் அண்ணா சூரியன் வானொலிக்கு மாற்றம் பெற்று சென்றதுதான். காரணம் கிழக்கு மாகாணத்திலே சூரியன் ஒலிபரப்பாவதில்லை என்பதுதான். இருந்தாலும் சில காலத்தின் பின் சூரியன் கிழக்கிலே ஒலிக்க ஆரம்பித்ததும் மட்டற்ற மகிழ்சி அடைந்தேன்.

அவரால் சூரியனிலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பிலே நிகழ்சிகள் வழங்கப்படும் பொது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதிலும் குறிப்பாக வெள்ளிக் கிழமைகளிலே இலக்கிய நாள்  நிகழ்சி என்னை மிகவும் கவர்ந்தது. பல நிகழ்சிகள் நேரடியாக கேட்க முடியவில்லை. ஒலிப்பதிவு செய்தே கேட்டு வந்தேன்.

இன்று பல அறிவிப்பாளர்கள் தங்களை மற்றவர்களிடம் வெளிக்காட்டிக் கொள்ளவும் தாங்களே பெரியவர்கள் என்று அகங்காரத்தோடு இருக்கும்போது லோஷன் அண்ணாவோ தான் ஒரு பிரபலமான அறிவிப்பாளன் என்று இல்லாமல் எல்லோருடனும் சமமாக மதிக்கின்ற நிலைதான் அவரை இன்றும் பல புகழோடு நிலைத்திருப்பதட்கு காரணமாகும்.

இவர் தனக்கு  கீழ்வேலை செய்கின்றவர்களையும் சமமாக மதிக்கின்ற பண்பினைக் கொண்டவர். ஒலிபரப்புத் துறை போட்டி நிறைந்த இந்த   சூழலிலே ஒலிபரப்புபரப்பு நுட்பங்களை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க எவரும் விரும்பமாட்டார்கள் ஆனால் இவரோ பலரின் வளர்ச்சிக்கு பல ஒலிபரப்பு நுட்பங்களை சொல்லிக்கொடுத்து வருகின்றார். பல ஒலிபரப்பாளர்களை உருவாக்கி இருக்கின்றார்.

எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும், என்ன கேள்வியை கேட்டாலும் அது தொடர்பான அனைத்து விபரங்களையும் உடனே சொல்லுகின்ற விதம் எப்படி இவரால் முடிகின்றது என்று இன்றும் நான் யோசித்துப் பார்ப்பதுண்டு.

யாராக இருந்தாலும் திறமையானவர்களை பாராட்டுகின்ற நல்ல குணமும், விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும்  நல்ல மனப்பாண்மையும் இவர் எல்லோராலும் விரும்பப்படுவதட்குரிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். யாராக இருந்தாலும் சரியான விமர்சனங்களாக இருந்தால் ஏற்றுக் கொள்ளும்  இவரது கொள்கை என்னை மிகவும் கவர்ந்தது.

அதேபோன்று பல வலைப்பதிவர்களை உருவாக்கி இருக்கின்றார். நான் கூட இவரது வலைப்பதிவைப் பார்த்துத்தான் எப்படி எழுதலாம் என்ற விடயங்களை அறிந்து கொண்டேன்.

இன்னும் இவரைப் பற்றி பல விடயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு சிறந்த ஒலிபரப்பாளன். சிறந்த வலைப்பதிவர். ஒரு சிறந்த மனிதர் என்று மொத்தத்தில்  சொல்லிவிடலாம்.

இவருக்கு நாளை சாகித்திய விருது கிடைப்பது எனக்கு மட்டற்ற மகிழ்சியை தருகின்றது. இந்த விருது மட்டுமல்ல இன்னும் பல விருதுகளை பல துறைகளிலும் பெற வேண்டும் என்று வாழ்த்துவதோடு இறைவனையும் பிராத்திக்கின்றேன்.


மற்றும் நாளை சாகித்திய விருதினைப் பெறும் எமது வலைப்பதிவர் மேமன் கவி உட்பட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
read more...

Sunday, 22 November 2009

இப்படியெல்லாம் நடக்கிறது..

திருந்தாத திருட்டுப் பதிவார்கள்...


 என் வலைப்பதிவிலே நான் இடுகையிட்டு சில மணி நேரத்திலே அப்படியே வேறொரு வலைப்பதிவிலே திருடிப்போடப்படுகின்றன. அவரிடம் பல தடவை அப்படி செய்யவேண்டாம் என்று சொல்லியும் எந்த பயனும் இல்லை இன்னும்   திருட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த பதிவுத்திருட்டு தொடர்பிலே எனக்கு இருக்கும் சந்தேகத்தை உங்களிடம் கேட்கிறேன். பதிவை திருடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா? அதற்கு ஏதாவது நடை முறைகள் இருக்கின்றதா? (நான் சட்ட நடவடிக்கை எடுக்க இல்லை அறிந்து கொள்வதற்காக கேட்கிறேன்)

என்னடா இவர் பெரிய பதிவு போடுறாரு திருடுறவங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று யோசிக்காதிங்க   அப்படியெல்லாம் ஒன்றும்  இல்லை. இன்று பதிவார்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனை என்பதனால் இது தொடர்பான விபரங்களை அறிந்து கொண்டால் பிரயோசனமாக இருக்கும்  என்றுதான்.

திருட்டுப் பதிவார்கள் மிது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா? இது தொடர்பிலே ஏதாவது பிரமாணங்கள் இருக்கிறதா? உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்.

இப்படியும் அதிகாரிகள்....

சிறுவர்களின் கல்வி நடவடிக்கையிலே பல்வேறு செயத்திட்டன்களை மேற்கொண்டு வரும் ஒரு சமுக சேவை அமைப்பு ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம். அவர்களின் செயத்திட்டங்களுக்காக சில உதவிகள் பல பல தடவைகள் கேட்டதன் பயனாக அந்த பாராளுமன்ற உறுப்பினர் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு கணணி உபகரணம் வாங்குவதற்கு  வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கியிருந்தார்.

இந்த சமுக சேவை அமைப்பானது. வறிய, பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்தல், பாடசாலையை விட்டு மாணவர்கள் இடை விலகுதல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு இடை விலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்த்தல் போன்ற பல செயற்பாடுகளிலே இடுபட்டு வருகின்றது. அத்தோடு தினமும் 300 மாணவர்களுக்கு இரவு நேர வகுப்புக்களையும் நடாத்தி வருகின்றது. இவை அத்தனைக்குரிய செலவையும் அந்த அமைப்பின் உறுப்பினர்களே செய்து வருகின்றனர். இந்த விடயங்கள் அனைத்தையும் அறிந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர். ஒதுக்கிய நிதி வெறும் 80000 ரூபாதான் . இந்த அமைப்பின் மாதாந்த செலவு அதைவிட அதிகம்.

இது இவ்வாறிருக்க பாராளுமன்ற உறுப்பினரால் பணம் ஒதுக்கப்பட்டு இரண்டரை மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் பிரதேச செயலக அதிகாரிகள் கணணி இயந்திரம் வாங்கித் தருவதாக இல்லை. திங்கட்கிழமை வாருங்கள், திங்கட்கிழமை போனால் புதன்கிழமை வாருங்கள் என்று ஏமாற்றி வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினரால் பணம் வழங்கப்பட்டு இரண்டரை மாதமாகியும் இன்னும் கணணி உபகரணம் வாங்கி கொடுக்கப்படாததன் காரணம் என்ன? இதிலே சில சுத்து மாத்துக்கள் இருப்பதுபோன்று தோன்றுகின்றது.

வீதி அபிவிருத்தியும் சுருங்கும் வீதிகளும்.

இன்று மகிந்த சிந்தனைத் திட்டத்தில் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் முன்னெடுத்து வரப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே துரிதமாக வீதி அபிவிருத்தி இடம் பெற்று வருகின்றன.

உள் வீதிகள் கொங்கிரீட் வீதிகளாக மாறி வருகின்றன. நல்ல விடயமாக இருந்தாலும். இந்த வீதிகள் 10 அடி அகலத்திலே போடப்படுகின்றன. ஆரம்பத்தில் இந்த வீதிகள் 20 அடிக்கும் மேல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 20 அடி அகலமான வீதி 10 அடியாகக் குறைக்கப்படுகின்றது. இதனால் வாகனங்கள் பிரயாணம் செய்வதிலே பல சிக்கல்கள் இருக்கின்றன.


இரண்டு வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்வது, எதிரெதிராக வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை என்பன ஏற்படுகின்றன. இது தொடர்பிலே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துவது நல்லதே.


இங்கேயும் போகலாம்..

பேசாத பிள்ளைகளை பேச வைப்பவர்
read more...

Friday, 20 November 2009

திருந்துவார்களா இவர்கள்


மனிதன் இன்று எப்படி எப்படி எல்லாம் உழைக்கக் கற்றிருக்கின்றான். இன்று வேலையில்லையென்று பலர் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் சிலர் மிகவும் சுலபமான முறையிலே. உடலை வருத்தாது இருந்த இடத்திலே இருந்து ஒரு சில நிமிடங்களிலே நிறையவே பணம் உழைக்கின்ற சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.


இவ்வாறு சுலபமா பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கின்றன. அண்மையிலே எனது நண்பர் ஒருவருக்கு உடனடியாக பணம் தேவைப் பட்டது. அவரிடம் எந்தவிதமான பணமும் இல்லை. அவரிடம் இருந்ததங்க நகைகள் வங்கியிலே அடகு வைக்கப்பட்டிருந்தது.


அந்த நகைகளது பெறுமதியிலிருந்து மிகவும் குறைந்த பெறுமதிக்கே அடகு வைக்கப்பட்டிருந்தது. அப்போது நண்பர் வங்கியிலே இருக்கின்ற நகைகளை எடுத்து மீண்டும் பெரிய தொகைக்கு அடகு வைக்கலாம் என்று சொன்னார். என்னிடமோ அவரிடமோ எந்த பணமும் இல்லை. நான் அவரிடம் கேட்டேன் பணம் இல்லாமல் போகிறோம் பணத்துக்கு என்ன செய்வது என்று நீ வா அதற்கு வழி இருக்கிறது என்று சொன்னார். நானும் சரி என்று சொல்லிவிட்டு அவரோடு சென்றேன்.

இருவரும் வங்கிக்கு சென்றோம். நண்பர் வங்கியிலே நின்ற வாடிக்கையாளர் ஒருவரை சந்தித்து ஏதோ பேசினார். அவர் உடனே தன்னிடம் இருந்தா பணத்தில் நண்பருக்கு தேவைப்பட்ட பணத்தைக் கொடுத்தார். div align="justify">நண்பனோ நகையினை எடுத்து மீண்டும் அடகு வைத்துவிட்டு வந்து நண்பருக்கு பணம் கொடுத்த நபருக்கு பணம் கொடுக்கும் போதுதான் அறிந்தேன் இவர் வட்டிக்கு பணம் கொடுப்பவர் என்று.


சரி எவ்வளவு வட்டி கொடுத்தாய் என்று கேட்டேன் நண்பர் சொன்ன பதில் என்னால் நம்ப முடியவில்லை. ஒரு இலட்சம் ரூபாவுக்கு ஒரு மணித்தியாலம் இரண்டாயிரம் ரூபாய் என்று சொன்னார்.


இது வங்கியில் மட்டுமல்ல சந்தைகளில்கூட நடப்பதாக பின்னர்தான் அறிந்து கொண்டேன். எப்படியெல்லாம் உழைக்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க இன்னொரு புறத்திலே வட்டிக்கு பணம் கொடுப்போரால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது ஏழைக்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் அதிகமாக பணக்காரர்களாகவே இருக்கின்றனர். ஏழைகளுக்கு பணம் தேவைப்படும்போது உடனடியாக இவர்களை நாடுகின்றனர். அப்போது வட்டிக்கு பணம் உடனடியாக வழங்கப் படுவதில்லை. வட்டிக்கு பணம் பெறுபவரின் காணி, வீடு என்பன அடமானம் வைத்தே வழங்கப்படுகின்றது. அத்தோடு ஒருவருடத்துக்குள் பணம் வழங்கப்படவில்லை எனில் பிணையாக வழங்கப்பட்ட சொத்துக்கள். வட்டிக்கு பணம் கொடுப்பவருக்கே சொந்தமாக்கப்படும் என்று எழுதி வாங்கிக்கொள்ளப்படுகின்றது.

பலர் கடனை உரிய காலத்தில் செலுத்த முடியாமல் தமது சொத்துக்களை இழந்திருக்கின்றனர். வட்டிக்கு பணம் கொடுப்போரால் ஏழைகளின் சொத்துக்கள் அபகரிக்கப்படுகின்றன. இவர்களுக்கு கடன் வழங்கப்படுகின்ற வட்டி வீதமும் அதிகம். இதனாம் ஏழைகள் உழைக்கின்ற பணத்தினை வட்டிக்காகவே செலவு செய்கின்றனர்.


திருந்துவார்களா இவர்கள்.
read more...

Thursday, 19 November 2009

தமிழ் மொழியை கொலை செய்து வளர்ந்து வரும் தமிழ் சினிமா.

இன்று பல்வேறு வழிகளிலே தமிழ்மொழி கொலைசெய்யப்பட்டு வருகின்றது. இன்று எங்கு பார்த்தாலும் தமிழ் மொழியோடு தேவையற்ற விதத்திலே வேற்று மொழியினைக் கலந்து தமிழ் மொழியின் இனிமையினையும், தமிழ் மொழியின் சிறப்பினையும் குழி தோண்டிப் புதைக்கின்றனர்.

தமிழ் மொழியினை கொலை செய்வதிலே இன்று திரையுலகம்கூட விட்டு வைக்கவில்லை. திரையுலகத்தைப் பொறுத்தவரை பல வழிகளிலே எமது தமிழ் மொழியினை வளர்க்க முடியும். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? தமிழ் மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக எப்படி எல்லாம் தமிழ் மொழியினை கொலை செய்ய முடியுமோ அப்படி எல்லாம் கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

திரையுலகம் சார்ந்த எல்லோரையும் குற்றம் சொல்லவில்லை. தமிழ் மொழியை வளர்ப்போரும் திரையுலகத்திலே இருக்கின்றார்கள். இருந்தாலும் இன்று திரைப்படங்களிலே பல்வேறு வழிகளிலே தமிழ்மொழி கொலை செய்யப்படுகின்றது.

அன்றைய திரைப்படங்களிலே தமிழ் மொழி இன்றுபோல் கொலை செய்யப்பட்டதா இல்லையே? இன்று என்ன செய்கின்றார்கள்.

இன்றைய தமிழ் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் எமது கலாசாரத்துக்கு போருத்தமிலாத குடும்பத்தோடு பார்க்க முடியாத திரைப்படங்களே அதிகம் எனலாம். அதனை விட்டுவிடுவோம். திரைப்படங்களிலே தமிழ் மொழியிலே எத்தனை வீதம் பேசுகின்றார்கள் என்பதனை பார்த்திருக்கின்றீர்களா. ஏன் நாங்கள் தேவையற்ற முறையிலே வேற்று மொழிகளை பயன்படுத்துவதனை தவிர்த்து எமது தாய் மொழி தமிழினை பயன் படுத்துவதிலே என்ன தவறிருக்கின்றது.

இன்று வருகின்ற பாடல்களிலே என்ன செய்திருக்கின்றார்கள் அவர்கள் என்ன மொழியிலே பாடல்கள் எழுதியிருக்கின்றார்கள் என்பதே புரிந்து கொள்ள முடியாமலிருக்கின்றது. ஏன் தமிழ் பாடலிலே வேற்று மொழிகளை கலக்கின்றார்கள் தமிழ் மொழியிலே அழகான சொற்கள் இல்லையா? எத்தனை சொற்கள் இருக்கின்றன. இந்தக் கவிஞர்களுக்கு தமிழ் சொற்களுக்கு பஞ்சமா அல்லது தமிழ் மொழி தெரியாதவர்களா?

தமிழ் மொழியிலே பாடல் எழுதத் தெரியவில்லை என்றால் இவர்களுக்கு எதற்கு தமிழ் கவிஞர்கள் எனும் பட்டம். இவர்களுக்குத் இவர்களுக்குத் தெரிந்த வேற்று மொழிகளிலே பாடல்களை எழுதலாமல்லவா? ஏன் தமிழ் மொழியை கொலை செய்து தமிழ் மொழியின் சிறப்பை இல்லாதொழிக்க நினைக்கின்றனர்.


இவர்களால் எத்தனை இலக்கியப் பாடல்கள் கொச்சைப் படுத்தப்பட்டிருக்கின்றன. எத்தனை இலக்கியப் பாடல்களை தமது பாடல்களிலே புகுத்தி எமது தமிழ் மொழியினை கொச்சைப் படுத்தியிருக்கின்றனர்.எத்தனை தேவாரங்களை கொச்சைப் படுத்தியிருக்கின்றனர். வேறொரு மொழியிலே இவ்வாறு செய்ய அந்த மொழியினை சார்ந்தவர்கள் விடுவார்களா?

இவர்களால் தமிழிலே பாடல்களை எழுதுவதற்கு என்ன. தமிழ் மொழியிலே சொற்களுக்கு பஞ்சமா? அல்லது இவர்களுக்கு தமிழ்மொழி தெரியாதா? தமிழ் மொழியிலே பாடல் எழுதத் தெரியாதவர்கள் எதற்கு தமிழ் கவிஞர்கள் என்று தங்களை சொல்லவேண்டும். தமக்கு தெரிந்த மொழிகளிலே எழுதலாமே. எங்கள் தமிழ்மொழியை ஏன் சாகடிக்கவேண்டும்.

இன்று இரசிகர்கள் இதனைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்லப்போகின்றார்களா? இரசிகர்கள் விரும்புவதை விட அவர்களால் திணிக்கப்படுகிறது. இரசிகர்களை பழக்கப்படுத்தி விட்டது யார்? இவர்களால் திணிக்கப்பட்டபோது ஆரம்பத்திலே சகித்துக் கொண்டு கேட்க ஆரம்பித்தனர். பின்னர் தங்களை பழக்கப் படுத்திக்கொண்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

அன்று வேற்று மொழிக் கலப்பிலாத பாடல்கள் வெளிவரவில்லையா? அந்தப் பாடல்கள் இன்றும் மக்கள் மனதிலே இடம்பிடித்திருக்கின்றன. ஆனால் இன்றைய பாடல்கள் எவ்வளவு காலம் நிலைத்திருக்கின்றன? சினிமாப் பாடல்கள் இன்று தமிழ் மொழியினைக் கொலை செய்வதனை ஒரு தொடர் பதிவே எழுத முடியும்.

தமிழ் மொழியினை வளர்ப்பதற்காக தமிழ் மொழியிலே திரைப்படங்களின் பெயர்களை வைத்தால் வரி விலக்கு..... சரி திரைப்படங்களிலே தமிழ் மொழியும் எமது இலக்கியங்களும் கொலை செய்யப்படுவதை என்னவென்றே பார்க்காது. வேற்று மொழியிலே பெயர் வைப்பதை தடை செய்வதிலே என்ன இருக்கிறது? திரைப்படமே ஒட்டு மொத்தத்தில் தமிழ் மொழியை கொலை செய்கிறது.திரைப்பட பெயரினை தமிழில் வைத்து தமிழை கொலை செய்யும் திரைப்படங்களை என்ன செய்வது.

தமிழ் மொழி பற்றிப் பேசுகின்றவர்கள் திரைப்படப்பாடல்களும், திரைப்படமும் தமிழை கொலை செய்வதை பற்றி சிந்தித்திருக்கின்றார்களா?

இன்று தமிழ் மொழியை வளர்க்கின்ற திரையுலகம் சார்ந்தோரும். திரைப்படங்களும் இல்லாமல் இல்லை. தமிழ் மொழியினை கொலை செய்கின்றவர்கள் எமது மொழியின் வளர்ச்சிக்காக தமிழ் மொழியினை தமது பாடல்களிலே கொலை செய்வதனையாவது நிறுத்தி தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக நல்ல பாடல்களைத் தருவார்களா?
read more...

மகிந்த ராஜபக்ஷ அவர்களும் ஆயிரம் ரூபாவும்

இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்திலே வெளியிடப்பட்ட 1000 ரூபா நாணயத்தாளின் தோற்றமே இது.
இந்த நாணயத்தாள் சொல்வது என்ன?

read more...

Wednesday, 18 November 2009

வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்

சில நாட்களாக என்னுள்ளே சில இனம் புரியாத கற்பனைகளும், கவலைகளும். இன்று நடப்பவைகளை எல்லாம் யோசித்து பார்க்கும்போது என்னடா உலகம் என்று எண்ணத் தோன்றுகின்றது. எழுத நினைப்பவை ஏராளம். ஆனால் எழுத முடியவில்லை. என் சுதந்திரம்தான் பர்றிக்கப்பட்டதென்றால். என் கருத்துச் சுதந்திரத்தையும் பறிக்க நினைப்பதா? ஏன் இந்த நாட்டில், இந்த உலகில் ஏன் பிறந்தோம் என்றே எண்ணத் தோன்றியது.

பல விடயங்கள் பதிவிட இருந்தாலும் மனம் இடம் கொடுக்காதபடியால். இணையத்திலே ஒரு சுற்று சுற்றிவந்தபோது நான் தேடிக்கொண்டிருந்த விடயங்களை கண்டுகொள்ளமுடிந்தது. அளவற்ற சந்தோசமடைந்தேன் அவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.

என்னை அறிவிப்புத் துறைக்கு வருவதகு தூண்டுகோலாக இருந்தவரும், என்றும் நான் நேசிக்கின்ற, மறைந்தும் மறையாது மக்கள் மனங்களிலே இன்றும் நிலைத்திருக்கின்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளராக இருந்து அறிவிப்புத் துறைக்கே பெருமை சேர்த்த மறைந்த அறிவிப்பாளர் கே.எஸ். ராஜா பற்றிய பல்வேறுபட்ட தகவல்களை அறிந்து கொள்ளமுடிந்தது அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.


ஒரு நல்ல ரசிகனே நல்ல அறிவிப்பாளனாக இருக்கமுடியும். நான் அறிவிப்பாளனாக இருந்தாலும் கூட நான் அறிவிப்பாளன் என்பதனை வெளிக்காட்ட விரும்புவதில்லை. நல்ல ரசிகன். நல்ல நிகழ்சிகளை படைக்கின்ற எந்த அறிவிப்பாளராக இருந்தாலும் அவர்களின் ரசிகனாகிவிடுவேன். அதனால் என்னை நிறையவே வளர்த்துக்கொள்ள முடிந்தது.

எனது சிறிய வயதுமுதல் வானொலியோடு கட்டிப்போட்டவர் கே.எஸ் .ராஜா அவர்கள். நான் பிறந்து வளர்ந்தது பின்தங்கிய ஒரு பிரதேசம் மின்சார வசதிகூட இல்லை (அங்கே இன்றும் மின்சார வசதி இல்லை நான் இப்போ வேறு இடத்தில் இருக்கிறேன் ) உலர் மின்கலம் மூலம் இயங்கும் வானொலியில்தான் நிகழ்சிகளைக் கேட்பதுண்டு.

சிறு வயதிலே நான் எப்போது வானொலியோடுதான் இருப்பேன் படிக்கும்போதும் பக்கத்திலே வானொலிப்பெட்டி இருக்கும் ( இன்றும் அப்படித்தான்) அன்று கே.எஸ் ராஜா அவர்களால் உமாவின் வினோதவேளை நிகழ்சியினை தொகுத்து வழங்கிய விதமும் அவரின் குரலும் என்றும் என்னுள்ளே ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

நான் மிகவும் சிறு வயதாக இருக்கும்போது அவர் அறிவிப்பாளராக இருந்ததனால் என்னால் அவரது நிகழ்சிகளை முற்று முழுதாக கேட்க முடியவில்லையே என்று கவலைப் படுவதுண்டு. இன்று அவர் எங்களோடு இருந்திருந்தால் நான் இன்னும் எவ்வளவோ வளந்திருப்பேன்.

அவரிடம் நாங்கள் நிறையவே படித்திருக்கலாம். அவர் நிகழ்சிகளை செய்கின்ற விதம், அவரது உச்சாகமான அறிவிப்பு, விளம்பரங்கள் வாசிக்கும் விதம் என்று எல்லாவற்றிலுமே அவருக்கென்று ஒரு தனி இடம் இருக்கின்றது.
இன்று தமிழை வளர்க்கின்றோம் என்று தமிழ் மொழியை கொலை செய்பவர்கள் அவரின் அறிவிப்புக்களை கேட்கவேண்டும்.

அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நான் இன்று பல விடயங்களை இணையத்திலே அறிந்துகொள்ள முடிந்தது கே.எஸ்.ராஜா அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அவரால் செய்யப்பட்ட உமாவின் வினோதவேளை போட்டி நிகழ்சிகள், விளம்பரங்கள், அவரால் செய்யப்பட்ட இசை நிகழ்சிகள் என்று எல்லாமே ஒலி வடிவத்திலே இருக்கின்றது. அவற்ற்றை நீங்களும் கேட்டு மகிழலாம். தரவிறக்கிக் கொள்ளலாம்.

இன்று அந்த ஒலிவடிவங்களைக் கேட்கின்றபோது நேரடியாகவே கே.எஸ்.ராஜாவே என் முன்னால் நின்று பேசுவது போன்று ஒரு உணர்வும் சந்தோசமாகவும் இருந்தது.

1. கே.எஸ். ராஜாவால் செய்யப்பட்ட நிகழ்சிகள்

2.கே.எஸ்.ராஜாவின் விளம்பரங்கள்.

3.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கே.ஜே. ஜேசுதாஸின் இசை நிகழ்சியினை கே.எஸ். ராஜா தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கிய உச்சாகமான அறிவிப்பு நிறைந்த நிகழ்சியின் ஒலி வடிவம்

4.கே.எஸ்.ராஜா அவர்களுக்கு ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் வழங்கிய அஞ்சலி

இன்னும் பல்வேறுபட்ட விடயங்களையும் அறிந்துகொண்டேன் . கே.எஸ். ராஜாவைப் பற்றி நீங்களும் அறிந்து கொள்வதோடு அவரது குரல்களை மீண்டும் கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்.
நன்றி: யாழ் சுதாகர்
read more...

Monday, 16 November 2009

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...

யாரும் என்னை திட்ட நினைத்திடாதிங்க இது ஒரு நகைச்சுவைப் பதிவு.


இப்போது சில வலையுலக நண்பர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனை பற்றி இந்த பதிவுல தரலாம் என்று இருக்கிறன்.


என்ன நம்ம பிரபல பதிவர் ஒருவருக்கு விரைவில் திருமணம் என்று லோஷன் அண்ணா ஒரு பதிவு போட்டதுமே நம்ம இளம் சிங்கங்கள் உசாராகிட்டாங்க. நாங்களும் கல்யாணம் முடிக்கணும் இன்று ஒரு சிலர் அவங்களின்ர அம்மா அப்பாவ கஷ்டப்படுத்திக்கொண்டு இருப்பதாக பதிவர் கோபியால் நடாத்தப்படும் பம்மாத்து FM வானொலியில செய்தி போனது.


சரி என்று நிலமைய ஆராஞ்சி பார்த்தா பல பதிவர்கள் பல சிக்கல்களை எதிர் நோக்குவதை அறிய முடிந்தது. என்ன ஒரு காதலி காதலனோடு எப்பவும் அன்பா இருக்கணும் என்றால் , காதலிக்கு காதலன் மீது பிடிக்கும் விடயங்கள் என்ன என்று அறிய முடியாதிருப்பதாகவும், தான் விரைவிலே காதலில் விழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் நண்பர் கோபி சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல். காதலிகளுக்கு காதலன் மீது என்ன விடயங்கள் பிடிக்கும் என்று ஒரு ஆய்வு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.


அவரின் பரிதாபம் தாங்க முடியாமல் சுபாங்கன் தலைமையிலே எமது குழு ஆராச்சிகளை மேற்கொண்டது. ஆராச்சியின் முடிவுகளின்படி. காதலன் மீது காதலிகளுக்கு என்ன விடயங்கள் பிடிக்கும் என்ற விபரங்கள் இதோ.

1. காதலி எங்கே போகின்றார், வருகின்றார் என்ற விடயங்களை காதலியிடம் கேட்கக்கூடாது. நீங்கள் அதிகம் வெளியில் செல்லக்கூடாது.


2. நீங்கள் அதிக நேரம் எவருடனும் தொலை பேசியில் உரையாடக்கஊடாது. ஆனால் காதலி யாருடனும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கதைக்கலாம். நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது.

3. நீங்கள் உங்கள் பெண் நண்பிகளோடு காதலி இருக்கும்போது கதைப்பதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லது முற்றாக நண்பிகளை மறந்து விடுங்கள். உங்கள் காதலி அவரது நண்பர்களோடு பழகுவதற்கு இடமளியுங்கள்.


4. உங்கள் காதலி அழகில்லை என்றாலும் உன்னைப்போல் அழகி உலகிலில்லை என்று புகழ்ந்து பேசுங்கள்.


5. நீங்கள் காதலிக்க ஆரம்பித்ததும் ஆடம்பரங்களை தவிருங்கள். நீங்கள் அழகாக இருந்தால் ஏனைய பெண்கள் உங்களை அபகரித்து விடுவார்கள் என்ற எண்ணம் உங்கள் காதலிக்கு இருக்கும். நீங்கள் ஆடம்பரமாக இருந்தால் உங்களை நோட்டம்விட ஆரம்பித்து விடுவார். சந்தேகப்பட்டு விடக்கஊடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.


6.உங்கள் காதலிக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ எல்லாவற்றையும். உங்களிடம் பணமில்லை என்றாலும் எங்காவது கடன் பட்டாவது வாங்கிக் கொடுங்கள். ஆனால் உங்களிடம் பணம் இல்லை என்பதனைக் காட்டிக்கொள்ளவேண்டாம்.


7. அதிகமாக இளம் பெண்கள் இருக்கின்ற இடங்களுக்கு போவதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லது காதலிக்குத் தெரியாமல் போய் வாருங்கள்.


8. உங்கள் காதலி பலர் மத்தியிலே இருக்கும்போது உங்கள் காதலியைப் பற்றி அவர்களிடம் புகழ்ந்து பேசுங்கள். (காதலி இல்லாத நேரங்களில் திட்டித்தீர்க்கலாம்)


9.நீங்கள் இதற்கு மூன்னர் வேறு யாரையும் காதலித்திருந்தாலும் உங்கள் காதலியிடம் எனக்கு பெண்களைப் பார்க்கவே பிடிக்காது ஆனால் உன்னை எப்பவும் பார்த்துக் கொண்டே இருக்கணும்போல இருக்கு என்பது போன்ற வசனங்களை அடிக்கடி பேசுங்கள்.



10. இதுதான் முக்கியமான விதி முதலில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும்.

read more...

Saturday, 14 November 2009

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்


இன்று இணையத்திலே பலரையும் கட்டிப்போட்ட்டிருக்கின்ற ஒன்றுதான் இணைய அரட்டை. இந்த அரட்டைகள் மூலம் நல்ல பல சம்பவங்கள் இடம்பெறுவதோடு. சில சுத்துமாத்து வேலைகளும் இடம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இன்று பல சமுகத்தளங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலர் தமது நண்பர்கள் வட்டத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இதன் மூலம் காதல், திருமணம், வியாபாரம் என்று நல்ல பல விடயங்கள் நடை பெற்றாலும் இன்று பலர் இணைய அரட்டையே வாழ்க்கை என்று தினமும் அரட்டையிலேயே தமது காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இங்கே அரட்டை அடிப்போர் பலர் தமது உண்மையான விபரங்களை விடுத்து பொய்யான தகவல்களைத்தான் பகிர்ந்து கொள்கின்றனர் என்பது வேறு விடயம். சில ஆண்கள் பெண்களின் பெயரிலே அரட்டை அடித்து பல சுத்துமாத்து வேலைகள் செயவோருமுண்டு.

சிலர் இந்த அரட்டைகளைப் பயன் படுத்தி நிறையவே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். இதிலே சில பெண்கள் ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களிடமிருந்து பணங்களை பெற்று பின்னர் ஏமாற்றி வருகின்ற சம்பவங்களும் நடந்துகொண்டு வருகின்றன.

நான் இணையத்திலே உலாவ வந்த ஆரம்பத்திலே வலைப்பதிவுகள் பற்றி எல்லாம் தெரியாது. நண்பர்கள் மூலமாக சில சமுக வலையமைப்புகள் பற்றி அறிந்தேன். அவ்வப்போது அந்த இணையத்தளங்களிலே அரட்டையோடு என்பொழுது போகும்.

இத் தளங்களிலே அதிகமாக ஆண்கள் என்றால் பெண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். பெண்கள் ஆண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். ( ஈநேன்று தெரியவில்லை தெரிந்தவங்கள் சொல்லுங்கள்) ஆனால் நான் ஆண், பெண் என்று பாகுபாடின்றி எல்லா நண்பர்களையும் இணைத்துக்கொண்டேன். ஆனால் என்னிடம் இருக்கின்ற ஒரு கெட்ட குணம் எல்லோரையும் நம்பிவிடுவது.

இந்த அரட்டையிலே இருக்கின்ற பொய் நண்பர்களையும் இவர்களின் சுத்துமாத்துக்களையும் அறிந்தபோது அரட்டைப் பக்கமே போவதில்லை. அவ்வப்போது போய் என்ன என்ன நடக்கிறது என்று பார்த்துவருவதுமுண்டு.

இப்போ சொல்ல வந்த விடயத்துக்கு வருகிறேன். அரட்டை மூலம் எனக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். ( நான் நண்பனின் கதை என்று சொன்னால் நம்பவா போறிங்க அதுதான் எனக்கு என்று ஆரம்பிக்கிறேன்) இதிலே சில வெளிநாட்டு நண்பிகள் நெருக்கமானார்கள். அதிலே ஒரு நண்பி எப்போதும் இணைய இணைப்பிலே இருப்பார். எப்போதும் என்னோடு அரட்டை அடித்துக்கொண்டே இருப்பார்.

இவரது நண்பர் வட்டத்திலே பல ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கின்றனர். எவரும் பெண்கள் இல்லை. மிகவும் அழகானவர், என்னுடைய வலைப்பதிவை பார்த்து கருத்துக்களைச் சொல்வார். அடிக்கடி என்னைப் பற்றி புகழ ஆரம்பித்துவிட்டார். பின்னர் என்னைக் காதலிப்பதாக அடிக்கடி சொல்வார். நான் இப்போத்துதான் பச்சிளம் பாலகன் என்பதனால் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

இக்கால கட்டத்திலே இவரது நட்புவட்டத்திலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த மத்திய கிழக்கு நாடொன்றிலே இருக்கின்ற ஒரு நண்பரை நான் எனது நட்பு வட்டத்திலே இணைத்துக் கொண்டேன். அந்த நண்பரும் என்னோடு நல்ல நெருக்கமான நண்பரானார்.

அடிக்கடி என்னோடு பேசும் ஒரு நண்பராக மாறிவிட்டார். அப்போது அந்த நண்பர் என்னிடம் நான் குறிப்பிட்ட அந்த பெண் தன்னை இரண்டு வருடங்களாகக் காதலிப்பதாகவும் மாதாமாதம் அந்த பெண்ணுக்கு தான் பணம் அனுப்புவதாகவும் சொன்னார். நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை

மறுபுறத்திலே அந்தப்பெண் என்னிடம் விருப்பம் கேட்டு என்னை விடுவதாக இல்லை. அடிக்கடி அவசரமாக பணம் தேவைப்படுகின்றது. என்றெல்லாம் பேசுவார் நான் காதில் கேட்காதது போன்று இருந்து விடுவேன்.

இவர் நிறையப்பேரை ஏமாற்றி வருகின்றார் என்பது மட்டு எனக்கு புரிந்துகொள்ள முடிந்தது. இவரை பற்றி ஆராய வேண்டு மென்று நினைத்தேன் இவரது நண்பர் வட்டத்திலே இருக்கின்ற பலரை என் நண்பர் வட்டத்திலே இணைத்தேன். அப்போது பலரை இந்தப் பெண் காதலிப்பதாக அறியக் கிடைத்தது. நான் எவரிடமும் இந்தப்பெண் பற்றிய விடயங்களை சொல்லவில்லை.

அவர் தனக்கொரு வலைப்பதிவு உருவாக்கித்தரும்படி அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு. நான் உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் என்பவற்றை தாருங்கள் என்று கேட்டு வங்கிக் கொண்டேன். வலைப்பதிவு உருவாக்கியக் கொடுப்பது என் நோக்கமல்ல இவரது ஏமாற்று வேலைகளை அறிய வேண்டும் என்பதே என் எண்ணம்.

உடனடியாக நான் அவரது மின்னஞ்சலை பார்த்தபோது பலரிடமிருந்து நிறையவே பணம் பெற்றிருப்பது அறிய வந்தது. அவர் பலரை காதலிப்பதாக நடித்துக்கொண்டிருக்கின்றார். பலர் இவருக்கு மாதாந்தம் பணம் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். என்பதும் தெரிய வந்தது.


உடனடியாக நான் மத்திய கிழக்கிலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த நண்பருடன் தொடர்புகொண்டு விபரங்களைச் சொன்னேன் அவர் நம்பவே இல்லை. அவரால் அவள் மீதான காதலிலிருந்து வெளியே வர முடியவில்லை.

அந்த நண்பரைப் பற்றி நினைக்கும்போது இன்றும் நான் கவலைப் படுவதுண்டு. அவரது குடும்பம் சாதாரண ஏழைக் குடும்பம். தந்தை இறந்துவிட்டார். தாய், இரு தங்கைகள் அவர்களைப் பார்க்கின்ற பொறுப்பு இவரிடமே. இவர் செய்தவை தனது வருமானத்தில் அரை வாசியை அந்தப் பெண்ணுக்கும் அரை வாசியை தாய்க்கு அனுப்புவதும். இன்று அந்தப் பெண்ணின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகவும் அந்தப் பெண்ணால் நிறையவே இழந்திருப்பதாகவும் கூறினார்.

இவர் மாத்திரமல்ல இன்று பல இளைஞர்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். பல சமுக இணையத்தளங்களிலே பல பெண்கள் காதல் எனும் போர்வையில் இளைஞர்களை சிக்கவைத்து பணம் பறித்துக்கொண்டிருக்கின்றனர். இணையத்திலே அரட்டை அடிப்பவர்கள் நிதானமாக சிந்தித்து செயற்படுவது நல்லதே.


சம்பவங்கள் உண்மை..... நீயா அவன் என்று கேட்கவேண்டாம். நான் அவனில்லை.

read more...