தொலைக்காட்சிகள் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு சாதனமாக அமைவது மட்டுமல்லாமல் நல்ல தகவல்களை வழங்கும் ஒரு சாதனமாகவும் இருக்கின்றது ஆனால் இன்று இந்த தொலைக்காட்சிகளே மக்களுக்கு தொல்லைக்காட்சிகளாக மாறிவிட்டன.
இலங்கையைப் பொறுத்தவரை தொலைக்காட்சியானது வானொலியைப்போல் போட்டி நிறைந்த ஒன்றல்ல. இதனால் மக்கள்மீது (பார்வையாளர்கள்) எதனையும் திணித்து விடலாம் என்பதுபோல் இந்த தொலைக்காட்சிகள் மாறிவிட்டன.
தரமான நிகழ்ச்சிகள் வழங்கப் படுகின்றதா. அவர்களால் வழங்கப்படும் நிகழ்ச்சிகளை எத்தனை பேர் பார்க்கின்றனர். நம் நாட்டுக் கலைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுவதாக சொல்கின்றார்கள் இது எந்த அளவில் இருக்கின்றது என்று தெரியவில்லை. சில நிகழ்ச்சிகள் நம் நாட்டு இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காகச் செய்யப்படுகின்றன. இங்கே இக் கலைஞர்கள் தெரிவு செய்யப்படும் விதம்தான் சரியானதா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
இன்று போட்டிகளிலே பங்குபற்றும் போட்டியாளர்கள் நேயர்களின் தொலைபேசி குறுந்தகவல் (sms) தெரிவு செய்யப்படுகின்றனர். நேயர்களின் தொலைபேசி குறுந்தகவல் (sms) மூலமான தெரிவு சரியானதா? இன்று தொலைபேசிப்பாவனை அதிகரித்துவிட்ட நிலையிலும் கையடக்கத்தொலைபேசிக்கான சிம் இலவசமாக கிடைப்பதாலும் ஒவ்வொருவரும் பல சிம் பாவிக்கின்றனர். ஒருவர் ஒரு போட்டியாளருக்கு பல sms அனுப்ப முடியும். அத்தோடு தொலைபேசிப்பாவனை சற்றுக்குறைவாக இருக்கின்ற பிரதேசங்களிலே இருந்து கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இந்த sms மூலமான தெரிவுகளால் அதிகம் பாதிக்கப்படுவர் அல்லவா.
இன்று sms அனுப்புவதற்கான கட்டணங்கள் மிகமிகக் குறைவு ஆனால் போட்டியாளர்களை தெரிவு செய்வதற்காக sms அனுப்பும்போது sms க்கான கட்டணம் அதிகம் sms மூலம் உழைப்பதட்காகவா கலைஞர்களை ஊக்கப்படுத்துகின்றோம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சிகள்.
தொலைக்காட்சித்தொடர்கள், நிகழ்ச்சிகள் இந்திய தொலைக்காட்சிகளில் இருந்து பெறப்பட்டவயாக இருக்கின்றன. ஏன் நம் நாட்டில் சிறந்த கலைஞர்கள் இல்லையா. இன்று இலங்கையிலே எத்தனையோ கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களை வைத்து சில நிகழ்ச்சிகளை செய்யலாமல்லவா.
இன்று சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (நாடகங்கள்) இங்கேயே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. ஆனால் அதனை எத்தனை பேர் பார்க்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. இன் நாடகங்களில் நடிப்பவர்கள் எப்படி நடிக்கின்றார்கள் என்று பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும். இலங்கையில் எத்தனை நாடகக் கலைஞர்கள் இருக்கின்றனர்கள் அவர்கள் இவர்களின் கண்ணுக்குத்தெரிவதில்லையா?. நல்ல கலைஞர்களை பயன்படுத்தலாமல்லவா?
அடுத்து சில அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்பு பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. இவர்கள் பேசுவது என்ன மொழி என்று யோசிக்கவேண்டி இருக்கின்றது.
பல அறிவிப்பாளர்கள் இருந்தபோதும் ஒரு சில அறிவிப்பாளர்களை மட்டும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை. மற்ற அறிவிப்பாளர்கள் தரம் குறைந்தவர்களா. அப்படி தரம் இல்லாத அறிவிப்பாளர்களாக இருந்தால் புதிய அறிவிப்பாளர்களை சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு அறிவிப்பாளர் தலைவிரி கோலமாக வந்து தனது பேச்சை ஒன்றில் ஆரம்பித்து இன்னொன்றில் முடிப்பதும். அளவுக்கதிகமான நளினமும் தொடர்ந்து பார்ப்பவர்களை சலிப்படைய செய்யுமல்லவா.
சில திரைப்படங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப் படுவதோடு பாடல்கள் கூட சில பாடல்களே திரும்ப திரும்ப ஒளிபரப்பப் படுகின்றன. நிகழ்ச்சிகளிலே நேயர்களின் கருத்துக்களுக்காக வழங்கப்படும் தலைப்புக்கள் சில வேளைகளில் பொருத்தமில்லாத தலைப்புக்களாக வழங்கப்படுகின்றன.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் நம் நாட்டுக்கலைஞர்களை ஊக்கப்படுத்துவதொடு நல்ல நிகழ்ச்சிகளை தந்து தமிழ் மொழியினை கொலை செய்யாமலும் இருக்க வேண்டும் என்பதே எனது அவா.